தமிழ் : பருவம் 2 இயல் 3 : யானைக்கும் பானைக்கும் சரி
3. யானைக்கும் பானைக்கும் சரி
மரியாதை இராமன் விசித்திரமான வழக்கொன்றை ஒருமுறை எதிர்கொள்ள நேர்ந்தது. உழவர் ஒருவரின் மீது, அரபு வணிகர் ஒருவர் தொடுத்த வழக்குத்தான் அது.
அரபு வணிகர், மரியாதை இராமனிடம் “ஐயா, இந்த உழவர் தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக என் யானையை இரவல் கேட்டார். நானும் கொடுத்தேன். ஊர்வலத்தின்போது, யானை இறந்துவிட்டது. அந்த யானையைத் திருப்பித் தரச் சொல்லுங்கள்” என்று கூறினார்.
உழவரோ, “ஐயா, அந்த யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துபோய்விட்டது. அதற்குரிய விலையையாவது, மாற்றாக வேறு யானையையாவது வாங்கித் தருகிறேன் என்று எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால், இந்த வணிகர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இறந்துபோன அதே யானைதான் வேண்டுமென அடம்பிடித்தால் நான் என்ன செய்வேன்?” என்று வருத்தத்துடன் கூறினார்.
உழவர் கூறியதிலிருந்து உண்மையை உணர்ந்துகொண்ட மரியாதை இராமன், இருவரையும் பார்த்து, “நீங்கள் இருவரும் நாளை நீதிமன்றத்துக்கு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். பின்னர், உழவரை மட்டும் தனியே அழைத்து, நாளை நீங்களாகவே நீதிமன்றத்திற்கு வரவேண்டா. உங்களை அழைத்து வருவதற்கு அந்த வணிகரை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். அவர் வரும்போது, உங்கள் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள். பின்னர், நடப்பதை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்”என்று சொல்லி அனுப்பினார்.
உழவரும் மரியாதை இராமன் கூறியதைப்போலவே வீட்டின் கதவுக்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்தார். அவரை அழைத்து வருவதற்காக வந்த வணிகர், ஆத்திரத்துடன் அவர் வீட்டுக் கதவைத் தட்ட, கதவு வேகமாகத் திறந்துகொள்ள, கதவின் பின்னால் அடுக்கி வைத்திருந்த பானைகள் ஒவ்வொன்றாகக் கீழே விழுந்து உடைந்து நொறுங்கின. அப்போது, வீட்டுக்குள்ளிருந்து வந்த உழவர்,” வணிகரே, என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? எங்கள் வீட்டில் காலங்காலமாகப் போற்றி வைத்திருந்த பழம்பானைகள் இவை. இவற்றையெல்லாம் உடைத்துவிட்டீரே, உம்மைச் சும்மா விடப்போவதில்லை. எனக்கு இதே பானைகளைத் திருப்பித் தாருங்கள்” என்று கூக்குரலிட்டார். செய்வதறியாது திகைத்தார் வணிகர். இருவரும் நீதிமன்றத்திற்குச் சென்றனர்.
உழவரின் வீட்டில் நடந்ததைக் கூறினார் வணிகர். அதனைக் கேட்ட மரியாதை இராமன், “ஐயா, வணிகரே! நீரோ இறந்துபோன உம்முடைய அருமையான யானையை உயிருடன் திருப்பித் தரவேண்டும் என்கிறீர். உழவரோ, உடைந்துபோன தம் பழைய பானைகளைத் திருப்பித் தரவேண்டும் என்கிறார். ஆதலால், நீங்கள் உடைத்த பானைகளைத் திருப்பித் தந்துவிட்டால், உழவரும் இறந்துபோன உம்முடைய யானையைத் திருப்பித் தந்துவிடுவார்” எனத் தீர்ப்பு அளித்தார். அவர் கூறியதைக் கேட்ட வணிகர், “ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். என்னால் பழைய பானைகளைத் தரமுடியாது” என்றார். உடனே, மரியாதைராமன், “ஐயா, வணிகரே, உம்மாலேயே திருப்பித் தரமுடியாது என்றால் உழவரால் மட்டும் எப்படித் திருப்பித் தரமுடியும்? ஆதலால், யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது” என்று தீர்ப்பளித்தார்.
நீதி: ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
வாங்க பேசலாம்
● யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதையை உம் சொந்தநடையில் கூறுக.
விடை
மரியாதை இராமனிடம் வந்த விசித்திரமான வழக்கு இது.
உழவரின் மீது அரபு வணிகர் தொடுத்த வழக்கு.
ஓர் உழவர் தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக அரபு வணிகர் ஒருவரிடம் யானையை இரவல் கேட்டார். அவரும் கொடுத்தார். ஊர்வலத்தின்போது யானை இறந்துவிட்டது.
அரபு வணிகர் யானையைத் திருப்பித் தரும்படி கேட்கிறார்.
உழவரோ, “யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துவிட்டதாகவும், மாற்றாக வேறு யானை வாங்கித் தருவதாகவும் அல்லது யானைக்குரிய விலையைத் தருவதாகவும் நான் கூறினேன். ஆனால் வணிகர் ஏற்றுக் கொள்ளாமல் அடம்பிடிக்கிறார்,” என்று கூறினார்.
உண்மையை அறிந்த மரியாதை இராமன், இருவரையும் பார்த்து, “நீங்கள் இருவரும் நாளை நீதிமன்றத்திற்கு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். பின்னர் உழவரைத் தனியாக அழைத்து, தான் ஆள் அனுப்பும்போது வந்தால் போதும் என்றார். பிறகு அவரிடம், “வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள்” என்று கூறி அனுப்பி விட்டார்.
மரியாதை இராமன் கூறியபடி உழவர் செய்தார். வணிகர் உழவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்காக வேகமாக வந்து கதவைத் திறந்தார். பானைகள் விழுந்து உடைந்தன. உழவர் வணிகரிடம், “அப்பானைகள் காலங்காலமாக வைத்திருந்த பழம் பானைகள். இவற்றை உடைத்துவிட்டீரே, எனக்கு இதே பானைகளைத் திருப்பித் தாருங்கள்,” என்று சத்தமிட்டார். வணிகர் செய்வதறியாமல் திகைத்தார்.வணிகர் நடந்ததை மரியாதை இராமனிடம் கூறினார். மரியாதை ராமன் வணிகரிடம் “நீங்கள் இறந்துபோன யானையை உயிருடன் திருப்பிக் கேட்கிறீர். அவர் உடைந்த பழம்பானைகள் வேண்டும் என்று கேட்கிறார். நீங்கள் பானையைக் கொடுத்தால் அவர் யானையைக் கொடுத்துவிடுவார்” என்று கூறினார். வணிகர் தன்னால் பழைய பானைகளைத் தரமுடியாது என்றார்.
மரியாதை இராமன் ”உங்களால் திருப்பித் தர முடியாது என்றால் அவரால் மட்டும் எப்படித் திருப்பித் தர முடியும்” என்றார். ஆதலால் யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது’ என்று தீர்ப்பளித்தார்.
சிந்திக்கலாமா!
● உன் நண்பன் உன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு உன்மீது சினம் கொண்டால் நீ என்ன செய்வாய்?
விடை
நான் அவனைச் சமாதானப்படுத்துவேன். என்ன நடந்திருந்தாலும் அவனிடம் உண்மை கூறிப் புரிய வைப்பேன். சினம் கொள்வதற்கான அவசியமில்லை என்று கூறுவேன். சினத்தை விடுத்து சிந்திக்க முயற்சி செய்யும்படி கூறுவேன்.
வினாக்களுக்கு விடையளிக்க
1. உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்?
விடை
உழவர், தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக யானையை இரவல் கேட்டார்.
2. ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது?
விடை
ஊர்வலம் சென்ற யானை இறந்துவிட்டது.
3. மரியாதை இராமன் உழவரைத் தனியே அழைத்து என்ன கூறினார்?
விடை
மரியாதை இராமன் உழவரை தனியாக அழைத்து “நாளை நீங்களாகவே நீதிமன்றத்திற்கு வரவேண்டாம். அந்த வணிகரை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறேன். அவர் வரும்போது உங்கள் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள். பின்னர், நடப்பதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.
4. யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதை உணர்த்தும் நீதி என்ன?
விடை
ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு.
பூக்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. வணிகர் அரபு நாட்டைச் சேர்ந்தவர்
2. உழவர், வணிகர் இருவரின் வழக்கை எதிர்கொண்டவர் மரியாதை ராமன்
3. திருமண ஊர்வலத்தில் யானை இறந்து விட்டது.
4. பழைய பானைகள் கீழே விழுந்து நொறுங்கின.
சொல்லிப் பழகுவோம்
1. பட்டம் விட்ட பட்டாபி, பெட்டிக் கடையில் பொட்டலம் போட்டான்
2. கன்று மென்று தின்றது
3. வாழைப்பழத் தோலால் வழுக்கி விழுந்தான்
சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரமைத்து எழுதுக.
விடை
1. மரியாதை இராமன் விசித்திரமான வழக்கை எதிர்கொண்டார்.
2. ஊர்வலத்தில் யானை தற்செயலாக இறந்துவிட்டது.
3. கதவின் பின்னால் பானைகள் அடுக்கி வைக்கப்பட்டன.
4. பானைகள் கீழே விழுந்து உடைந்து விட்டன.
குறிப்புகளைப் பயன்படுத்திக் கதை உருவாக்குக. பொருத்தமான தலைப்பிடுக.
நான்கு எருதுகள் – ஒற்றுமையாக வாழ்தல் – சிங்கம் – பிரிக்க நினைத்தல் – எருதுகள் எதிர்த்தல் – சிங்கத்தின் சூழ்ச்சி – எருதுகள் பிரிதல் – சிங்கம் வேட்டையாடுதல்
விடை
ஒற்றுமையே பலம்
ஒரு காட்டில் நான்கு எருதுகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. அவை நான்கும் வலிமையுடன் இருந்தன. அக்காட்டில் வாழ்ந்த சிங்கம் இவர்களின் ஒற்றுமையைப் பார்த்து, எப்படியாவது இவைகளைப் பிரித்துவிட வேண்டும் என்று எண்ணியது. முதலில் ஒரு எருதைக் கொல்லலாம் என்று சிங்கம் சீறிப் பாய்ந்தது.
ஆனால் மற்ற எருதுகள் சேர்ந்து சிங்கத்தைத் தம் கொம்புகளால் குத்தித் தாக்கின. வலியால் துன்புற்ற சிங்கத்திடம் நரி வந்து பேசியது. தந்திரமாக எப்படியாவது நான்கு எருதுகளையும் பிரிப்பதாகக் நரி கூறியது. அதேபோல் ஓர் எருதிடம் சென்று “உன் வலிமையால்தான் சிங்கம் பயந்து ஓடியது.
மற்ற எருதுகளால் இல்லை ” என்று கூறியது. இதேபோல் ஒவ்வொரு எருதிடமும் கூறியது. எருதுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுப் பிரிந்தன. அச்சமயம் பார்த்து சிங்கம் ஒவ்வொரு எருதாய்க் கொன்றது. எருதுகள் ஒற்றுமையாய் இல்லாததால் கொல்லப்பட்டன.
குறிப்புகளைக் கொண்டு கட்டத்திலிருந்து விடை காண்போமா?
இடமிருந்து வலம்
1. பழைமை என்பது இதன் பொருள்
2. வீட்டின் முகப்பில் உள்ளது.
3. தும்பிக்கை உள்ள விலங்கு
மேலிருந்து கீழ்
2. உடலின் ஓர் உறுப்பு
4. வேளாண் தொழில் செய்பவர்
செயல் திட்டம்
வார இதழ்கள், செய்தித்தாள்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் கிடைக்கும் யானை பற்றிய செய்திகளைத் தொகுத்து, செய்தித் தொகுப்பு உருவாக்குக.