அறிவியல் : பருவம் 3 அலகு 1 : பசுமை சுற்றுச்சூழல்
அலகு 1
பசுமை சுற்றுச்சூழல்
கற்றலின் நோக்கங்கள்
இந்த பாடப்பகுதியினைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன
❖ கழிவு மேலாண்மை முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளல்.
❖ கழிவு மேலாண்மையின் 3R களின் பங்கைப் புரிந்துகொள்ளல்.
❖ நல்ல பழக்கங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் நமது சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்துகொள்ளல்.
❖ சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உணர்தல்.
அறிமுகம்
இயற்கை நமக்குப் பல பயனுள்ள பொருள்களை வழங்குகிறது. தொழிற்சாலைகள் இந்த இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, நாம் கடைகளில் வாங்கும் பொருள்களை உருவாக்குகின்றன. இவற்றை நாம் பயன்படுத்திய பின், அவை கழிவுகளாக மாறுகின்றன. பயன்படுத்திய ஒரு பொருள் மீண்டும் தேவைப்படாதபோது, அதைக் ‘கழிவு’ என்கிறோம். அது உடைந்து, தேய்ந்து அல்லது மீண்டும் பயன்படுத்த முடியாததினால், நமக்கு உபயோகப்படுவதில்லை. கழிவு என்பது திட திரவ அல்லது வாயு நிலையில் இருக்கலாம். மேலும், அவை வீடுகள், பள்ளிகள், சந்தைகள், மருத்துவமனைகள், கடைகள் போன்ற பல இடங்களிலிருந்து பெறப்படலாம். பொதுவாகக் கழிவுகள் நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.
கழிவு மேலாண்மை
சிருஸ்திக்கா : நமது சுற்றுச்சூழலில் அதிக அளவில் குப்பைகளைக் காண்கிறேன். நாம் இவற்றைக் குறைக்க ஏதேனும் வழி உள்ளதா?
ஆசிரியை : ஆம். குப்பைகளான இந்தக் கழிவுகளைக் குறைக்க பல வழிகள் உள்ளன. கழிவுகளைக் குறைத்தல் கழிவு மேலாண்மையில் மிக முக்கியமான படிநிலை ஆகும். :
விமல் : கழிவு மேலாண்மை என்றால் என்ன?
ஆசிரியை : சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாப்பதற்காக, கழிவுகளை முறையாகக் கையாளுவதற்கு நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் கழிவு மேலாண்மை’ ஆகும். இது மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகளைப் பிரித்தெடுக்கும் செயல்களை உள்ளடக்கியது.
ஜனனி : கழிவு மேலாண்மையின் படிநிலைகளைக் கூறுங்களேன்.
ஆசிரியை : அதைப்பற்றிக் கூறுகிறேன். கேளுங்கள். கழிவு மேலாண்மையில் நான்கு படிநிலைகள் உள்ளன. அவை,
1. கழிவுகளைப் பிரித்தல்
2. கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்
3. கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்
4. கழிவுகளை அகற்றுதல்
1. கழிவுகளைப் பிரித்தல்:
கழிவுகளை வெவ்வேறு கழிவுத் தொட்டிகளில் பிரித்து வைப்பதே கழிவுகளைப் பிரித்தல் எனப்படும். ஒவ்வொரு தொட்டியிலும் வெவ்வேறு கழிவுகள் இருக்க வேண்டும். மட்கும் கழிவிற்கு பச்சை, மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவிற்கு நீலம், மறுசுழற்சி செய்ய இயலாத கழிவிற்கு சிவப்பு என மூன்று வெவ்வேறு நிற தொட்டிகளில் பிரிப்பது சிறந்தது. மட்காத கழிவினை, ‘மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு’ என்றும் ‘மறுசுழற்சி செய்ய இயலாத கழிவு’ என்றும் பிரிக்கலாம்.
2. கழிவுகளைச் சேசுரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்:
வீடுகளிலும் பள்ளிகளிலும், கழிவுகளைப் பிரித்தவுடன், ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியினால் அக்கழிவுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு கழிவுகளை எடுக்கும் செயலை ‘கழிவு சேகரிப்பு’ என்கிறோம். கழிவுகளை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது ‘கழிவுகளை எடுத்துச் செல்லுதல்’ எனப்படும்.
3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்:
மட்கும் கழிவு உரமாக மாற்றப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரமாக்கப்படுகிறது. உரம் தாவரங்களுக்கு உணவாகிறது. மேலும் இது மண்ணை வளமாக்குகிறது. புதிய பொருள்களைத் தயாரிப்பதற்காக மட்காத கழிவு (மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவு) மறுசுழற்சி தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
4. கழிவுகளை அகற்றுதல்:
இது மறுசுழற்சி செய்ய இயலாத கழிவினை அகற்றும் நிகழ்வாகும். இம்முறையில் கழிவுகள் திறந்த வெளியிலோ, நிலத்தின் அடிப்பகுதியிலோ நிரப்புவதற்காக அனுப்பப்படுகிறது.
செயல்பாடு
கழிவு மேலாண்மையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
(கழிவுகளை அகற்றுதல், கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல், கழிவுகளைப் பிரித்தல், கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்)
1. கழிவுகளைப் பிரித்தல்
2. கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்,
3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்
4. கழிவுகளை அகற்றுதல்
ராகுல் : நாம் வீட்டில் கழிவுகளை எவ்வாறு கையாளுவது?
ஆசிரியை : வீட்டிலுள்ள கழிவுகளை முறையாகக் கையாளுவதற்கு மூன்று முறைகள் உள்ளன. இதை சுருக்கமாக 3R என்பார்கள்.
கோமதி : ‘3R’ கள் என்றால் என்ன?
ஆசிரியை : குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse) மற்றும் மறுசுழற்சி (Recycle) ஆகிய செயல்களை 3R கள் என்கிறோம். முதலில் கழிவுப் பொருள்களைக் குறைத்து, பின் அவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும். அதன் பிறகே மறுசுழற்சி செய்ய வேண்டும். இச்செயல்முறைகளை எளிதில் மனதில் வைத்துக்கொள்ள பின்வருமாறு குறிக்கலாம்.
3Rகள்
குறைத்தல் என்பது பொருள்களைக் குறைவாக உருவாக்குவது மற்றும் குறைவாகப் பயன்படுத்துவது எனப் பொருள்படும். அதாவது குறைவான கழிவினை உருவாக்கும் பொருள்களைத் தயாரிப்பது, வாங்குவது மற்றும் பயன்படுத்துவதாகும். இதுவே கழிவுகளைக் குறைப்பதற்கு செய்யப்படும் முதன்மையான செயலாகும். குறைவான கழிவுகளை நாம் எப்படி உருவாக்க முடியும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. நீங்கள் ஒரு மை பேனா வாங்கிப் பயன்படுத்தும்போது, அதில் மை தீர்ந்தால் மீண்டும் நிரப்பி அதே பேனாவைப் பயன்படுத்தலாம்.
2. உங்கள் பெற்றோருடன் கடைவீதிக்குச் செல்லும்போது, நீங்கள் ஒரு துணிப் பையை எடுத்துச் செல்வதால் அங்கு நீங்கள் நெகிழிப் பைகளை வாங்குவதைத் தவிர்க்க முடியும்.
3. வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்துச் சென்று தின்பண்டங்களை வாங்கலாம்.
4. வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் உணவுப்பொருள்களை நாம் மொத்தமாக சந்தைகளில் வாங்குவதால் கழிவுகளைக் குறைக்கலாம்.
செய்து மகிழ்வோம்
காலியான நீர் குடுவையைப் பயன்படுத்தி பறவை உணவுக்கலன் (Bird Feeder), மலர்க்குவளை (Flower vase), எழுதுபொருள் தாங்கி மற்றும் வீட்டில் தொங்கவிடும் அலங்கார ஜாடி போன்றவற்றைப் படத்தில் காட்டியுள்ளவாறு தயாரிக்கலாம்.
மறுபயன்பாடு என்பது ஒரு பொருளை மீண்டும் மீண்டும் ஒரே பயன்பாட்டிற்கோ அல்லங வெவ்வேறு பயன்பாடுகளுக்கோ உபயோகப்படுத்துவதாகும். மறுபயன்பாட்டில் குறைந்த கழிவுகளை உருவாக்குவதனால், அவற்றைக் குப்பைகளாகக் குவிப்பதைத் தவிர்க்கலாம். மேலும், மறுபயன்பாட்டினால் செலவு, ஆற்றல் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது. வீட்டில் உள்ள பொருள்களை மறுபயன்பாடு செய்வதற்கான சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. வீட்டைச் சுத்தம் செய்ய பழைய துணிகளைப் பயன்படுத்தலாம்.
2. ஜாம் மற்றும் ஊறுகாய் ஜாடிகளைப் பொருள்கள் சேமித்து வைக்க பயன்படுத்தலாம்.
3. நல்ல நிலையிலுள்ள பழைய ஆடைகளை ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
4. நீங்கள் பழைய பொருளை மறுபயன்பாடு செய்யலாம் மற்றும் புதிய பொருள் ஒன்றை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, நெகிழிக்குடுவையை எழுதுபொருள் தாங்கியாகவோ அல்லது பறவை உணவுக்கலனாகவோ செய்து பயன்படுத்தலாம்.
மறுசுழற்சி என்பது பயன்படுத்தியபின் தூக்கி எறியும் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்குவதாகும். மறுசுழற்சி, ஆற்றலையும் நேரத்தையும் எடுத்துக்கொண்டாலும் புதிய பொருள்களை உருவாக்கத் தேவைப்படும், நீர், தாதுக்கள், மரம் போன்ற வளங்களைச் சேமிக்க உதவுகிறது. சில பொருள்கள் எவ்வாறு மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
1. பழைய செய்தித்தாள்கள், குறிப்பேடுகள் மற்றும் மாத இதழ்கள் புதிய காகிதங்களாக உருவாக்கப்படுகின்றன.
2. நெகிழி நீர்க்குடுவைகள் (PET குடுவை), நெகிழி நூல்களாக மறுசுழற்சி செய்யப்பட்டு, பின்னர் விளையாட்டு ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
3. பழைய கண்ணாடிக் குடுவைகள் மற்றும் உடைந்த கண்ணாடித் துண்டுகள் உருக்கப்பட்டு, புதிய கண்ணாடிப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
4. உடைந்த உலோகப்பொருள்கள் உருக்கப்பட்டு, புதிய பொம்மைகளாக மாற்றப்படுகின்றன.
நிரப்புவோம்
நீங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைக்கக்கூடிய, மறுபயன்பாடு செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய நான்கு பொருள்களைப் பட்டியலிடுக.
குறைத்தல்
நெகிழிப் பைகள்
ஜெல் பேனா
நெகிழி தண்ணீர் பாட்டில்கள்
மறுபயன்பாடு
சணல் பை
பழைய துணிகள்
ஜாம் மற்றும் ஊறுகாய் ஜாடிகள்
மை பேனா
மறுசுழற்சி
PET குடுவைகள்
பழைய செய்தி
பழைய கண்ணாடி குடுவைகள்
குறிப்பு புத்தகம்
சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
ராகுல் : சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றால் என்ன?
ஆசிரியை : சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இயற்கையில் காணப்படும் அனைத்தையும் பாதுகாப்பதாகும். அதாவது, நமது பூமியில் காணப்படும் இயற்கை வளங்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் பொருளாகும். நீர், மண், தாதுக்கள், வனவிலங்குகள் மற்றும் காடுகள் போன்றவை இயற்கை வளங்களாகும்.
விமல் : சுற்றுச்சூழலை நாம் எவ்வாறு பாதுகாப்பது?
ஆசிரியை : கழிவு மேலாண்மை முறைகளை அனைவரும் பின்பற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம். SR இல் உள்ள முதல் ‘R’ எதனைக் குறிக்கிறது?
கனிமொழி : கழிவுகளைக் குறைத்தல்.
ஆசிரியை : ஆம். நாம் முதலில் கழிவு உருவாக்குவதைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் சுற்றுச்சூழலை எளிதில் பாதுகாக்கலாம்.
கழிவுகளைப் பிரித்தல்
வீட்டுக் கழிவுகளை மட்கும் தன்மை கொண்டவை, மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாதவை எனப் பிரிக்க வேண்டும். மிஞ்சிய உணவு மற்றும் காய்கறிக்கழிவு போன்ற மட்கும் தன்மை கொண்ட கழிவுகள் உரங்களாக மாற்றப்படுகின்றன. மறுசுழற்சி செய்யக்கூடிய காகிதம், கண்ணாடி மற்றும் அலுமினிய கழிவுகளைக் கொண்டு புதிய பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்கலாம். மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகளைத் தனியாகப் பிரித்த பிறகு அவற்றைத் திறந்த வெளியில் குவிப்பதற்கோ தவிப்பதற்கோ அல்லது நிலப்பகுதியில் நிரப்புவதற்கோ அனுப்பப்படுகின்றன. இதனை முடிந்தவரை குறைக்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா
உணவு மற்றும் பானங்கள் உள்ள கண்ணாடி கொள்கலன்கள் 100% மறுசுழற்சி செய்யப்படக்கூடியவை. மேலும் அவற்றை பலமுறை நல்ல தரத்துடன் மறுசுழற்சி செய்யலாம்.
செயல்பாடு
கீழே உள்ள படங்களை உற்றுநோக்கி, ஒவ்வொரு கழிவு வகையிலும் உங்கள் வீட்டில் உள்ள மூன்று பொருள்களின் பெயர்களை எழுதுக.
1. மட்கும் தன்மை கொண்ட கழிவுகள் :
விடை:
வாழைத்தண்டு, காய்கறிகள், பாக்கு மட்டைத் தட்டு
2. மறுசுழற்சி செய்யர் கூடிய கழிவுகள்:
விடை:
காகிதம், அட்டை, நெகிழி, உலோகங்கள், கண்ணாடி
3. மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள்:
விடை:
நெகிழி பை, மருத்துவ கழிவு, CFL விளக்கு, பாலிஸ்டர்.
சிருஸ்திக்கா : நெகிழி, நமது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற செய்தியை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மைதானா?
ஆசிரியை : நெகிழி மோசமானதன்று. ஆனால், நாம் அதை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துகிறோம். அதிகப்படியான நெகிழிப் பயன்பாடு சுற்றுச்சூழல் மாசுபாட்டினை ஏற்படுத்துகிறது. ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்குக் காரணமாகின்றன. எனவே அவற்றைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது. இத்தகைய நெகிழிகளை உபயோகப்படுத்துவது நல்லதா என நம்மை நாமே கேட்டுக்கொள்வது சுற்றுச்சூழலை வளமாக வைப்பதற்கான நல்ல தொடக்கமாகும். இத்தகைய பொருள்களை வாங்கக்கூடாது என நாம் அனைவரும் உறுதி ஏற்போம்!
தமிழ்நாட்டில் நெகிழி
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களைத் தடைசெய்வதில் இந்தியாவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பட்டியலும், அவற்றால் ஏற்படும் விளைவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
விலங்குகள் உணவுப் பொருள்களை உடைய நெகிழிப் பைகளைத் தற்செயலாக சாப்பிடுகின்றன. 50 கிலோவிற்கு மேற்பட்ட நெகிழிப் பொருள்கள், ஒரு பசுவின் வயிற்றில் கண்டறியப்பட்டுள்ளன.
பயன்படுத்தப்பட்ட நெகிழித் தட்டுகள் சுற்றுச்சூழலில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக மட்காமல் அப்படியே இருக்கும்.
நெகிழி நீர்ப் பைகள், நிலத்தை குப்பையாக்குவதுடன், மறுசுழற்சி செய்வதற்கும் கடினமானவை.
நாம் பழரசத்தை உறிஞ்சும் நெகிழிக் குழாய்களை மறுசுழற்சி செய்ய இயலாத காரணத்தால், அவை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.
சூடான உணவு வகைகள், நெகிழித்தாள்களில் அடைக்கப்படும்போது நெகிழித்தாள்களிலிருந்து இரசாயனங்கள் கசிந்து உணவுடன் கலக்கின்றன.
ஏகலைவன் : நகிழிக்குப் பதிலாக என்னென்ன பொருள்களைப் பயன்படுத்தலாம்?
ஆசிரியை : சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பொருள்களை நாம் பயன்படுத்தலாம். இவை சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை மட்கும் தன்மை கொண்டவைகளாகவோ அல்லது மறுபயன்பாடு செய்யக்கூடியவைகளாகவோ இருக்கலாம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள்
நுண்ணுயிரிகளால் சிதையக்கூடிய பொருள்கள் ‘உயிரி சிதைவிற்கு உட்படும் பொருள்கள்’ அல்லது ‘மட்கும் பொருள்கள்’ எனப்படும். மட்கும் இப்பொருள்கள் மீண்டும் தாவரங்களுக்கு உணவாக மாறுகின்றன. இவை போன்ற மட்கும் பொருள்கள், சுற்றுச்சூழல் நட்பு பொருள்கள் அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இலைகளை உணவு உண்ணப் பயன்படுத்தப்படுவது தமிழ்நாட்டின் பாரம்பரிய முறையாகும். எ.கா. வாழை இலை. தெர்மோகோல், நெகிழி பூசப்பட்ட காகிததீ தட்டுகள் போன்று இல்லாமல் இந்த இலையானது. உயிரி சிதைவிற்கு முழுமையாக உட்படும். கைப்பைகள், குப்பைக்கூடைகள் மற்றும் பல் துலக்கிகள் போன்ற பல பொருள்களை உருவாக்க மூங்கில் பயன்படுகின்றது.
நாம் செய்ய வேண்டிய சுற்றுச்சூழலுக்கு உகந்த சில செயல்கள்:
● மூன்று R களின் படி கழிவுகளைக் கையாளுதல்.
● எப்போதும் கழிவுகளை திறந்த இடங்களில் போடாமல் குப்பைத்தொட்டியில் போடுதல்.
● ஒவ்வொரு தாளின் இருபுறமும் எழுதி காகிதப் பயன்பாட்டைக் குறைத்தல்,
● மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளையும் புட்டிகளையும் பயன்படுத்துதல்
● கழிவுகளை மட்கும் கழிவுகள், மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் எனப் பிரித்தல்.
● ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பொருள்களைத் தவிர்த்தல்.
உங்களுக்குத் தெரியுமா
லியோ பேக்லேண்டு என்பவரால் 1907 ஆம் ஆண்டு முதன் முதலில் முழுமையான செயற்கை நெகிழி கண்டுபிடிக்கப்பட்டது.
முயற்சிப்போம்
பள்ளி மாணவர்களை சிறிய குழுக்களாகப் பிரித்து பள்ளி மைதானத்தில் ஊரின் தெருக்களில் காணப்படும் நெகிழிகளைச் சேகரித்து, 3R இன் படி பிரிக்கச் செய்க.
ஆசிரியை : சில பொருள்கள் உயிரி சிதைவிற்கு உட்படாமல், நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த ஏற்றதாக உள்ளன. இதனால் கழிவுகளைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம்.
ராகுல் : அப்பொருள் எவையெவை எனக் கூறுங்களேன்?
ஆசிரியை : நிச்சயமாக. சில்வர் நீர்க்குடுவை மற்றும் சிற்றுண்டிப் பாத்திரம் போன்றவை சூழலுக்கு உகந்த பொருள்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இப்பாத்திரங்கள் உணவு அல்லது தண்ணீரில் இரசாயனங்களைக் கசிய விடாது. எனவே, இவை நெகிழியைவிட பாதுகாப்பானவை. இவற்றை நீண்ட காலத்திற்குப் பலமுறை பயன்படுத்தலாம்.
முயற்சிப்போம்
நீங்கள் பயன்படுத்தும் அல்லது கடையில் பார்த்த மறுசுழற்சி செய்ய முடியாத ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை:
நெகிழிப்பைகள், நெகிழித்தட்டுகள், CFL விளக்கு, பல அடுக்கு நெகிழி, பாலிஸ்டர்.
குப்பை இல்லா சுற்றுச்சூழல்
குப்பைகள் பார்வைக்கு அருவருப்பாகவும், அவற்றில் சில மட்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றுச்சூழலுக்கு மாசினை ஏற்படுதுவதாகவும் உள்ளன. மேலும், இக்குப்பைகள் காற்று மற்றும் மழையினால் அடித்துச் செல்லப்பட்டு ஆறுகள், ஓடைகள், ஏரிகள் வழியே கடலை அடைந்து கடல் நீரை மாசுபடுத்துகின்றன. சில நேரம் இக்குப்பைகளை விலங்குகள் உண்பதால், அவற்றின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது. குப்பைகளைப் போடாமல் இருப்பதே, சமூகம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழி.
தேசிய பசுமைப் படை (NGC)
இது இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு தேசிய செயல் திட்டமாகும். இத்திட்டத்தின் குறிக்கோள்,
“பசுமை எங்கோ வளமை அங்கே”
தேசிய பசுமைப் படை மூலம் பள்ளி மாணவர்கள் காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் கழிவுகளைக் கையாளுதல் போன்ற செயல்களில் பங்கேற்று, இயற்கை வளங்களைப் பேணிப்பாதுகாப்பதில் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
எப்போதும் குப்பைகளைக் குப்பைத்தொட்டியில் போடுவது சிறந்தது. மேலும், நீங்கள் பயணங்களின்போது பயன்படுத்தியபின் தூக்கி எறிய நினைக்கும் பொருள்களைச் சேமிக்க கையில் ஒரு பையை எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் குப்பைகளைக் கண்டால், அதை எடுத்து ஒரு குப்பைத்தொட்டியில் எறிந்து விடுங்கள். உங்களின் இந்த செயல் மற்றவர்களும் இதைச் செய்ய ஊக்குவிக்கும்.
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கழிவு மேலாண்மை செயல்களில் முதல் படி எது?
(அ) கழிவுகளை அகற்றுதல்
(ஆ) கழிவுகளைப் பிரித்தல்
(இ) கழிவு சேகரித்தல்
[விடை : (ஆ) கழிவுகளைப் பிரித்தல்]
2. மட்காத அல்லது உயிரி சிதைவு அடையாத கழிவு எது?
(அ) காகிதக் குவளை
(ஆ) நெகிழித் தட்டு
(இ) தேங்காய் ஓடு
[விடை : (ஆ) நெகிழித் தட்டு]
3. எப்போதும் கழிவுகளை ஒரு தொட்டியில் போடுவது முக்கியம். இது ———– பாதுகாப்பிற்கு அவசியம்.
(அ) கழிவு சேகரிப்பு
(ஆ) சுற்றுச்சூழல்
(இ) குப்பை
[விடை : (ஆ) சுற்றுச்சூழல்]
4. ———— என்பது 3R இல் உள்ள முதல் R ஆகும்.
(அ) மறுபயன்பாடு
(ஆ) குறைத்தல்
(இ) மறுசுழற்சி
[விடை : (ஆ) குறைத்தல்]
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ———— கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
(ஊறுகாய்க்குப் பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல் / நெகிழிப்பை வேண்டாம் என்று சொல்வது)
விடை
ஊறுகாய்க்குப் பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல்
2. எளிதில் மட்கக்கூடிய பைகள், குப்பைக் கூடைகள் மற்றும் பல் துலக்கிகள் தயாரிக்க பயன்படுகிறது. (நெகிழி / மூங்கில்)
விடை : மூங்கில்
3. ————– நமது சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மாசுபாட்டிற்கு எடுத்துக்காட்டு ஆகும். (நெகிழி மாசுபாடு / ஒளி மாசுபாடு)
விடை : நெகிழி மாசுபாடு
4. ———– ஒரு மறுசுழற்சி செய்ய முடியாத பொருள் ஆகும். (கண்ணாடி / பல அடுக்கு நெகிழி)
விடை : பல அடுக்கு நெகிழி
III. பின்வருவனவற்றைப் பொருத்துக.
1. நெகிழிக் கழிவுகள் – 3R கள்
2 கழிவுகளைப் பிரித்தலின் நான்காம் படி – சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்
3. குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம் – சுற்றுச்சூழலைப் பாதிக்கும்
4. சில்வர் பாத்திரம் – கழிவுகளை அகற்றல்
விடை:
1. நெகிழிவுக் கழிவுகள் – சுற்றுச்சூழலை பாதிக்கும்
2. கழிவுகளை பிரித்தலின் நான்காம்படி – கழிவுகளை அகற்றல்
3. குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம் – 3Rகள்
4. சில்வர் பாத்திரம் – மக்கும் தன்மை அற்றது
V. சரியா, தவறா என எழுதுக.
1. 3R செயல்முறைகளினால் நிலப்பகுதியில் நிரப்புவதற்குச் செல்லும் கழிவுகளின் அளவு குறைக்கப்படுகின்றது. [சரி]
2. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பவை. [தவறு]
3. நெகிழிப்பை, தெர்மோகோல் மற்றும் பலஅடுக்கு நெகிழி ஆகியவை மறுசுழற்சிப் பொருள்களாகும். [தவறு]
4. குப்பைகளை முறையாகப் பிரிக்கக்கூடாது. [தவறு]
VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.
1. 3R என்றால் என்ன?
விடை:
குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse) மற்றும் மறுசுழற்சி (Recycle) போன்ற செயல்களை 3Rகள் என்கிறோம்.
2. மட்கும் கழிவு என்றால் என்ன?
விடை:
நுண்ணுயிரிகளால் சிதையக்கூடிய பொருள்கள் ‘உயிரி சிதைவிற்கு உட்படும் பொருள்கள்’ அல்லது மக்கும் பொருள்கள் எனப்படும்
3. கழிவு மேலாண்மையின் வெவ்வேறு படிநிலைகளை எழுதுக.
விடை:
1. கழிவுகளை பிரித்தல்.
2. கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்.
3. கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்.
4. மறுசுழற்சி செய்யக்கூடிய ஏதேனும் ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை:
காகிதம், அட்டை, PET பாட்டில்கள் , உலோகங்கள், கண்ணாடி
VII. பின்வருவனவற்றுக்கு விடை தருக.
1. நீங்கள் வீட்டில் எவ்வாறு குப்பைக்கழிவுகளைக் கையாளுவீர்கள்?
விடை:
வீட்டிலுள்ள கழிவுகளை மக்கும் தன்மை கொண்டவை, மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாதவை எனப் பிரிக்க வேண்டும். இயற்கையாக மக்கும் தன்மை கொண்ட கழிவுகளை உரங்களாக மாற்றவேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடிய கண்ணாடி கழிவுகள் மற்றும் கழிவுகளைக் கொண்டு புதிய பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்கலாம்.
2. தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் யாவை?
விடை :
நெகிழிப் பைகள், நெகிழி தட்டுகள், நெகிழி நீர் பைகள், நெகிழிக் குழாய்கள், நெகிழித் தாள்கள்.
3. மறுசுழற்சியின் நன்மைகளை எழுதுக.
விடை:
மறுசுழற்சி, புதிய பொருள்களை உருவாக்க தேவைப்படும் நீர், தாதுக்கள், மரம் போன்ற வளங்களை சேமிக்க உதவுகிறது.
4. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்றால் என்ன?
விடை:
நாம் பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருள்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன
செயல்பாடு
கழிவு மேலாண்மையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
(கழிவுகளை அகற்றுதல், கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல், கழிவுகளைப் பிரித்தல், கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்)
1. கழிவுகளைப் பிரித்தல்
2. கழிவுகளைச் சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்,
3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரமாக்குதல்
4. கழிவுகளை அகற்றுதல்
செய்து மகிழ்வோம்
காலியான நீர் குடுவையைப் பயன்படுத்தி பறவை உணவுக்கலன் (Bird Feeder), மலர்க்குவளை (Flower vase), எழுதுபொருள் தாங்கி மற்றும் வீட்டில் தொங்கவிடும் அலங்கார ஜாடி போன்றவற்றைப் படத்தில் காட்டியுள்ளவாறு தயாரிக்கலாம்.
நிரப்புவோம்
நீங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைக்கக்கூடிய, மறுபயன்பாடு செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய நான்கு பொருள்களைப் பட்டியலிடுக.
குறைத்தல்
நெகிழிப் பைகள்
ஜெல் பேனா
நெகிழி தண்ணீர் பாட்டில்கள்
மறுபயன்பாடு
சணல் பை
பழைய துணிகள்
ஜாம் மற்றும் ஊறுகாய் ஜாடிகள்
மை பேனா
மறுசுழற்சி
PET குடுவைகள்
பழைய செய்தி
பழைய கண்ணாடி குடுவைகள்
குறிப்பு புத்தகம்
செயல்பாடு
கீழே உள்ள படங்களை உற்றுநோக்கி, ஒவ்வொரு கழிவு வகையிலும் உங்கள் வீட்டில் உள்ள மூன்று பொருள்களின் பெயர்களை எழுதுக.
1. மட்கும் தன்மை கொண்ட கழிவுகள் :
விடை:
வாழைத்தண்டு, காய்கறிகள், பாக்கு மட்டைத் தட்டு
2. மறுசுழற்சி செய்யர் கூடிய கழிவுகள்:
விடை:
காகிதம், அட்டை, நெகிழி, உலோகங்கள், கண்ணாடி
3. மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள்:
விடை:
நெகிழி பை, மருத்துவ கழிவு, CFL விளக்கு, பாலிஸ்டர்.
முயற்சிப்போம்
பள்ளி மாணவர்களை சிறிய குழுக்களாகப் பிரித்து பள்ளி மைதானத்தில் ஊரின் தெருக்களில் காணப்படும் நெகிழிகளைச் சேகரித்து, 3R இன் படி பிரிக்கச் செய்க.
முயற்சிப்போம்
நீங்கள் பயன்படுத்தும் அல்லது கடையில் பார்த்த மறுசுழற்சி செய்ய முடியாத ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை:
நெகிழிப்பைகள், நெகிழித்தட்டுகள், CFL விளக்கு, பல அடுக்கு நெகிழி, பாலிஸ்டர்.