தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி
உரைநடை : கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்
இயல் இரண்டு
உரைநடை
கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்
மலர்விழியும் தமிழரசியும் தோழிகள். இருவரும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் வந்ததும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிப் பேசிக் கொண்டு வருகிறார்கள். அப்போது மலர்விழி தன் தோழியிடம் தொலைக்காட்சியில் நேற்று கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மின்சாரம் போய்விட்டது அதனால், நடுவரின் தீர்ப்பை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை எனக்கு வருத்தமாக இருந்தது என்று கூறினாள்.
தமிழரசி: வருத்தப்படாதே மலர்விழி, இந்தப் பட்டிமன்றம் பார்த்தவர்களிடம் முடிவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
மலர்விழி: சரி தமிழரசி. வா, போய்க் கொண்டே பேசலாம்.
தமிழரசி: கல்விச் செல்வமா? பொருட் செல்வமா? எது சிறந்தது என நீ நினைக்கிறாய்?
மலர்விழி: நான் கல்விச் செல்வம்தான் சிறந்தது என்று கூறுவேன்.
தமிழரசி: அதெப்படி? அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகிறாய்?
மலர்விழி: கல்வி கற்காதவன் “களர்நிலத்திற்கு ஒப்பாவான் ” என்று பாரதிதாசனாரும் “கேடில் விழுச் செல்வம் கல்வி” என்று திருவள்ளுவரும் கூறியிருக்கிறார்கள்.
தமிழரசி: கல்வியின் சிறப்பைக் கூறிய திருவள்ளுவர்கூடப் “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்றே கூறியிருக்கிறார். பொருட்செல்வம் இல்லை என்றால் நமது தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாது. கல்வி கற்பதற்குக்கூட பணம் வேண்டும் அல்லவா!
மலர்விழி: “பணம் பத்தும் செய்யும்” என்பது எனக்குத் தெரியும். வாழ்க்கையை நடத்துவதற்குப் பணம் தேவைதான். பணம் படைத்தவருக்குச் சொந்த ஊரில் தான் மதிப்பு. “கல்வி கற்றவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு” பெறுவர்.
தமிழரசி: கல்வி கற்றவர், செல்வம் படைத்தவர்களின் தயவில்தாம் வாழ வேண்டியுள்ளது.
மலர்விழி: பொருட் செல்வம் நிலையில்லாதது, கல்விச் செல்வமே ‘இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது’ என்றும் அழியாதது. பொருட்செல்வம் கொடுக்கக் கொடுக்கக் குறையக் கூடியது. கள்வர்களால் கவர்ந்து செல்லக் கூடியது.
தமிழரசி: ‘பணமில்லாதவன் பிணம்’, பணமென்றால் பிணம்கூட வாயைத்திறக்கும்’ என்ற பழமொழிகளை எல்லாம் நாம் அறிந்ததுதானே! கற்றவரால் என்ன செய்ய முடியும்?
மலர்விழி: இன்றைய கல்வி வளர்ச்சிதான் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். அதனால்தான் இன்று நாம் எல்லாரும் வசதியாக வாழ முடிகின்றது.
தமிழரசி: புதுமைகளைக் கண்டறிய கற்றவர்களுக்குப் பணமும் தேவைப்படும் அல்லவா?
மலர்விழி: ஆம், அதற்காகப் பணம்தான் உயிர்நாடி என்று கூறுவது தவறு. கல்விதான் அறிவை வளர்க்கிறது. நன்மை,தீமைகளைப் பகுத்தறிந்து நல்வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வழி செய்கிறது.
தமிழரசி: ‘பசி வந்திடப் பத்தும் போகும்’ வறுமைதான் சமூகத் தீமைகளுக்கும் காரணமாகின்றது.
மலர்விழி: வறுமையிலும் செம்மையாக வாழ்பவன் கற்றறிந்தவன்; கல்லாதவன் அறியாமையால் தவறு செய்கிறான்.
தமிழரசி: அறியாமை உள்ளவன் பணக்காரனாகவே இருந்தாலும் அமைதியான வாழ்வுக்குக் கல்வி அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். வசதியான வாழ்விற்குப் பொருட்செல்வம் அவசியம் என்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா?
(விவாதம் நீண்டு கொண்டிருக்கிறது.)
மறுநாள் இருவரும் தமிழாசிரியரைச் சந்தித்து விவாதத்தைக் கூறுகிறார்கள்
தமிழாசிரியர்: மக்களிடம் அறியாமை இருளை நீக்கி, அறிவு (கல்வி) \கல்வியாலை நாம் நீக்கி, அறிவு ஒளிபெறச் செய்வது இளமையிலேயே பெறுவதுதான் சிறந்த வழி. ‘இளமையில் கல்வி, சிலையில் எழுத்து’ என்னும் முதுமொழியை நாம் மறந்துவிடக்கூடாது.
மலர்விழி: ஐயா, கல்வியின் சிறப்பைப் புரிந்துகொண்டோம். ஆயினும், கல்வியோடு பொருளும் இருக்கவேண்டுமா?
தமிழாசிரியர்: ஆம். கல்வியும் பொருளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் எனலாம். பொருளுடையவரால் ஆகாதது ஒன்றுமில்லை. பொருளுடைமை, வெற்றி தரும்; பெருமை தரும்; அழகு தரும். அவை மட்டுமா? உயர்கல்வி பெறும் வாய்ப்பையும் தரும். இல்லாரை எல்லாரும் எள்ளுவர்’ என்று வள்ளுவர் கூறியதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே, அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்குப் பொருள் கட்டாயம் தேவை. ஆனால், நம்மை மேன்மைப்படுத்துவது கல்விதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை
தமிழரசியும் மலர்விழியும்: உண்மைதான் ஐயா, கல்வியால் அறிவுத்தெளிவு உண்டாகும். பொருளால் நம் வாழ்வு வளம் பெறும் என்பதைப் புரிந்து கொண்டோம்.
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள்
அ) இப்பிறப்பு
ஆ) மறுபிறப்பு
இ) பிறப்பு
ஈ) முற்பிறப்பு
[விடை : அ) இப்பிறப்பு]
2. காரணமாகின்றது என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது …………………………
அ) காரண + மாகின்றது
ஆ) காரண + ஆகின்றது
இ) காரணம் + மாகின்றது
ஈ) காரணம் + ஆகின்றது
[விடை : ஈ) காரணம் + ஆகின்றது]
3. வறுமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ………………………….
அ) செழுமை
ஆ) இன்மை
இ) செம்மை
ஈ) ஏழைமை
[விடை : அ) செழுமை]
4. பொருள் + செல்வம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………
அ) பொருள்செல்வம்
ஆ) பொருள்ச்செல்வம்
இ) பொருட்செல்வம்
ஈ) பொருட்ச்செல்வம்
[விடை : இ) பொருட்செல்வம்]
5. பொருள் + இல்லார்க்கு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) பொருளில்லார்க்கு
ஆ) பொருள்ளில்லார்க்கு
இ) பொருலில்லார்க்கு
ஈ) பொருள் இல்லார்க்கு
[விடை : ஆ) பொருள்ளில்லார்க்கு]
ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக
1. பழைமை + மொழி = பழமொழி
2. நன்மை + வழி = நல்வழி
இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக
1. பணமென்றால் = பணம் + என்றால்
2. தொலைக்காட்சி = தொலை + காட்ச
ஈ. தொடரை முழுமை ஆக்குக (பத்தும், வளம், கல்வி)
1. பசி வந்திடப் பத்தும் போகும்.
2. கேடில் விழுச்செல்வம் கல்வி.
3. பொருளால் நம் வாழ்வு வளம் பெறும்.
உ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. களர்நிலத்துக்கு ஒப்பாவர் – யார்?
விடை
கல்வி கற்காதவரே களர்நிலத்துக்கு ஒப்பாவர் ஆவர்.
2. கள்வரால் கவர்ந்து செல்லக் கூடியது எது?
விடை
பொருட்செல்வம் கள்வரால்(திருடரால்) கவர்ந்து செல்லக்கூடியது ஆகும்.
3. ‘கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம் என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்களை உம் சொந்தநடையில் எழுதுக.
விடை
● கற்காதவன் பயன்படாத நிலம் போன்றவன்.
● கல்வி கற்றவருக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கும்.
● பொருட்செல்வம் கொடுத்தால் குறையும், திருடரும் திருடுவர். ஆனால் கல்வி குறையாது. திருடவும் முடியாது.
● இப்பிறப்புக்கும் மறுபிறப்புக்கும் பயன் தருவது கல்வியே. ஆகியவை ‘கல்விச் செல்வமே மிகவும் சிறந்த செல்வம்’ என்பதற்கு மலர்விழி கூறிய காரணங்கள் ஆகும்.
4. பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்குத் தமிழரசி கூறிய காரணங்களைத் தொகுத்து எழுதுக
விடை
● வள்ளுவரும் பொருள் இல்லாதவருக்கும் உலகம் இல்லை என்கிறார்.
● கல்வி கற்பதற்கும் பணம் தேவை.
● பணம் இல்லாதவன் பிணம் ஆகியவை பொருட்செல்வமே மிகவும் அவசியம் என்பதற்குத் தமிழரசி கூறிய காரணங்கள் ஆகும்.
சிந்தனை வினாக்கள்
1. கல்விச் செல்வம் அல்லது பொருட்செல்வம் இரண்டில் ஒன்றுதான் உனக்கு வழங்கப்படும் எனில், நீ எதைத் தெரிவு செய்வாய்? ஏன்?
விடை
நான் கல்விச் செல்வத்தைத் தான் வாங்குவேன். ஏன் என்றால், கல்வியால் பொருட்செல்வத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம்.
2. நம்மை மேன்மைபடுத்துவது கல்வி இதைப் பற்றி உன் சொந்த நடையில் பேசு.
விடை
வணக்கம்! ‘நம்மை மேன்மைப்படுத்துவது கல்வி’ என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன். மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்களிடையே நிலவுகிறது.
நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் இன்பம் தோன்றுகிறது. கல்வி, அறியாமையைப் போக்குவது என்பதை நான்மணிக் கடிகையும் தெரிவித்துள்ளது. கற்றபடி வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறளில் திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.
‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ (391) என்னும் அடியில் இதே கருத்து இடம் பெற்றிருப்பதை நீங்கள் காணமுடியும். கற்றவர்க்குக் கல்வியே ஒரு செல்வமாக உதவும் தன்மை கொண்டது.
கல்வி ஒன்று மட்டுமே ஒருவனை நல்லவனாகவும், அறிவுள்ளவனாகவும் ஆக்கும். எனவே ‘நம்மை மேன்மைப்படுத்துவ கல்வி’ என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.
கூடையிலுள்ள சொற்களுக்கு உரிய எதிர்ச் சொற்களைத் தொட்டியிலிருந்து கண்டறிந்து எழுதுக
விடை
1. இம்மை × மறுமை
2. நல்வழி × தீயவழி
3. வருத்தம் × மகிழ்ச்சி
4. நேற்று × இன்று
5. புதுமை × பழமை
6. வறுமை × செழுமை
7. நன்மை × தீமை
கற்பவை கற்றபின்
1. கல்விச் செல்வமா? பொருட்செல்வமா? எது அவசியம் என்று நீ நினைக்கிறாய்? ஏன்?
விடை
கல்விச் செல்வத்தையே அவசியம் என்று நினைக்கின்றேன். ஏனென்றால், பொருளால் புகழ் அடைந்தவர் மக்கள் மனதில் இருப்பதில்லை. கல்வியால் புகழ் அடைந்தவர் மட்டுமே மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பர்.
2. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை – இது பற்றி உன் கருத்து என்ன?
விடை
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். ஏனென்றால், இறைவன் மனிதனைப் படைக்கும்போது, எந்த ஒரு பணத்தையும் படைக்கவில்லை. அவன் ஒவ்வொன்றாகக் கற்று தான், பணத்தை உண்டக்கினான். பணம் இல்லாமல் வாழ முடியாது என்ற மாயை உருவாக்கியவன் மனிதன். எனவே இக்கூற்றை நான் ஏற்க மாட்டேன்.
3. கல்வியால் சிறந்தவர்கள், பொருளால் சிறந்தவர்கள் – யாரால் நம் நாடு முன்னேற்றம் அடையும்? வகுப்பறையில் விவாதம் செய்க.
விடை
கல்வியால் சிறந்தவர்களால் நம் நாடு முன்னேற்றம் அடையும் :
கல்வி ஒரு மனிதனை நற்பண்புள்ளவனாகவும், நல்லறிவு உடையவனாகவும் ஆக்கும். பாரதியும்கூட கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்று பாடியிருக்கின்றார். பொருளால் ஒன்றை வாங்க முடியுமே தவிர, அதனை உருவாக்க கல்விதான் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கணித மேதையாலும் அறிவியல் மேதைகளாலும் தொழில்நுட்ப வல்லுநர்களாலும் என எத்தனையோ கற்றறிந்த சான்றோர்களால் இன்று நம்நாடு வளர்ச்சியின் முன்னணியில் உலகில் உள்ளது. கல்வியால் சிறந்தவர்களால் தான் நாடு வளர்ச்சி அடையும்.
பொருளால் சிறந்தவர்களால் நம் நாடு முன்னேற்றம் அடையும் :
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றார் வள்ளுவர். பொருள் இல்லை என்றால் ஒரு சிறு துரும்புகூட அசையாது.
பல தலைவர்கள் வாழ்ந்து நம் நாட்டை உயர்த்தி இருந்தாலும் பல தலைவர்கள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பல லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் நம் நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம். அந்த நிறுவனங்களை உருவாக்கியவர்கள் பொருள் படைத்தவர்கள். பொருளால் சிறந்தவர்களால் நம் நாடு முன்னேற்றம் அடையும்.