தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி
செய்யுள் : மூதுரை
இயல் இரண்டு
கல்வி
கற்றல் நோக்கங்கள்
❖ கல்வியின் அவசியத்தை உணர்வர்
❖ கற்றவர்களின் குணம் மேம்பட்டு நிற்கும் என்பதை உணர்வர்
❖ பொறுமையால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர்வர்
❖ பெயர்ச்சொல் வினைச்சொல் வேறுபாடு அறிவர்
❖ மொழித்திறன் பெறுவர்
செய்யுள்
மூதுரை
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு
– ஒளவையார்
சொல்பொருள்
அடக்கம் – பணிவு
கடக்க – வெல்ல
மடைத்தலை – நீர் பாயும் வழி
அறிவிலர் – அறிவு இல்லாதவர்
கருதவும் – நினைக்கவும்
உறுமீன் – பெரிய மீன்
பாடல் பொருள்
மடையில் பாய்கின்ற நீரில் ஓடுகின்ற சிறுமீன்கள் ஓடிக் கொண்டிருக்க, கொக்கானது தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கும். அதுபோலத் தமக்குரிய காலம் வரும்வரை சிலர் அடங்கியிருப்பார்கள். அவர்களை அறிவில்லாதவர் என எண்ணி வெல்ல நினைக்க வேண்டா.
ஆசிரியர் குறிப்பு
இந்நூலை இயற்றியவர் ஔவையார். இவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலிய பிற நீதிநூல்களையும் இயற்றியுள்ளார். முதுமையான அறிவுரைகளைக் கொண்டது, மூதுரை. இந்நூலுக்கு வாக்குண்டாம் என மற்றொரு பெயரும் வழங்கப்படுகிறது. இந்நூலில் நீதிக்கருத்துகள் எளிமையான நடையில் கூறப்பட்டுள்ளன.
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. என்றெண்ணி என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
அ) என் + றெண்ணி
ஆ) என்று + எண்ணி
இ) என்றெ + எண்ணி
ஈ) என்று + றெண்ணி
[விடை : ஆ) என்று +எண்ணி]
2. மடை + தலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மடைதலை
ஆ) மடத்தலை
இ) மடைத்தலை
ஈ) மடதலை
[விடை : ஆ) மடத்தலை]
3. வரும் + அளவும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வருமளவும்
ஆ) வருஅளவும்
இ) வரும்மளவும்
ஈ) வரும் அளவும்
[விடை : அ) வருமளவும்]
4. அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல் ………………….
அ) அறிவில்லாதவர்
ஆ) அறிவுடையார்
இ) அறியாதார்
ஈ) படிக்காதவர்
[விடை : ஆ) அறிவுடையார்]
5. எண்ணுதல் – இச்சொல்லுக்குரிய பொருள் ………..
அ) வாடுதல்
ஆ) வருந்துதல்
இ) நனைத்தல்
ஈ) நினைத்தல்
[விடை : ஈ) நினைத்தல்]
ஆ. இப்பாடலில் இரண்டாம் எழுத்து (எதுகை) ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
விடை:
அடக்கம்
உடையார்
வருமளவும்
கடக்கக்
மடைத்தலையில்
இருக்குமாம்
இ. ‘மடைத்தலை இச்சொல்லில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.
விடை:
மடை, தலை, மலை, தடை, மதலை.
பொருத்துக.
1. உறுமீன் – நீர் பாயும் வழி
2. கருதவும் – பணிவு
3. அறிவிலர் – நினைக்கவும்
4. மடைத்தலை – பெரிய மீன்
5. அடக்கம் – அறிவு இல்லாதவர்
விடை:
1. உறுமீன் – பெரிய மீன்
2. கருதவும் – நினைக்கவும்
3. அறிவிலர் – அறிவு இல்லாதவர்
4. மடைத்தலை – நீர் பாயும் வழி
5. அடக்கம் – பணிவு
உ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. கொக்கு எதற்காகக் காத்திருக்கிறது?
விடை
கொக்கு தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கின்றது.
2. யாரை அறிவில்லாதவராக எண்ணக் கூடாது என ஔவையார் குறிப்பிடுகிறார்?
விடை
தமக்குரிய காலம் வரும் வரை சிலர் அடங்கி இருப்பர். அவர்களை அறிவில்லாதவர் என எண்ணிவிடக்கூடாது.
ஊ. சிந்தனை வினா
அடக்கமாக இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி வெல்ல நினைக்கக் கூடாது. ஏன்? கலந்துரையாடுக.
விடை:
மாணவன் 1 : வணக்கம்! அடக்கம் இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி வெல்ல நினைக்கக் கூடாது.
மாணவன் 2 : ஆம். சரியாக கூறினாய். அடக்கமாக இருப்பவர்கள் தனக்கு தகுந்த நேரம் வரும் வரை பொறுமையாக இருப்பர்.
மாணவன் 3 : தனக்கு ஏற்ற நேரம் வந்தவுடன் விரைவாகச் செயலை முடித்து வெற்றி பெற்று விடுவார்கள். ஆதலால் அடக்கமானவரை அறிவில்லாதவராக எண்ணுதல் கூடாது.
கற்பவை கற்றபின்
1. பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்து மகிழ்க.
2. கல்வியின் சிறப்பை உணர்த்தும் வேறு பாடல்களை அறிந்து வந்து பாடுக.
விடை
நீதிவெண்பா
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
– கா.ப. செய்குதம்பிப் பாவலர்
3. மூதுரைப் பாடலுடன் தொடர்புடைய திருக்குறள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பொருளை ஆசிரியரிடம் கேட்டு அறிந்துகொள்க.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
விடை
குறளின் பொருள் :
ஒரு கொக்கு தன் இரைக்காகக் காலங்கருதி சிறிதும் அசைவில்லாமல் வாடியிருப்பது போல இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தவுடன் அந்தக் கொக்கு நறுக்கென்று பெரிய மீன் வந்தவுடன் கொத்திக் கொள்வது போல செயல்களை முடித்துக் கொள்ள வேண்டும்.