தமிழ் : பருவம் 1 இயல் 9 : கரிகாலன் கட்டிய கல்லணை
கரிகாலன் கட்டிய கல்லணை
மணிமொழியும் கனிமொழியும் தங்களது முதல் பருவ விடுமுறையில், திருச்சியிலுள்ள தம் மாமா வீட்டிற்குச் சென்றனர். கல்லணையைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தினை மாமாவிடம் கூறினர். மாமாவும் அதற்கு இசைந்து தம் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு கல்லணைக்குச் செல்கிறார்.
மணிமொழி : எனக்கு இந்தப் பயணம் மகிழ்ச்சியைத் தருகிறது மாமா.
கனிமொழி : எனக்கும் தான். ஏனென்றால் நம்மோடு அத்தையும் கபிலனும் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அத்தை : நாம் பார்க்கப் போகும் கல்லணையை நெருங்கிவிட்டோம்.
மாமா : வாருங்கள்! கல்லணையைச் சுற்றிப் பார்ப்போம்.
கனிமொழி : மாமா, கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
மாமா : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இந்தக் கல்லணையைக் கரிகாலன் என்ற மன்னன் கட்டினான்.
மணிமொழி : கல்லணை கட்டிய கரிகாலனைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் மாமா, உங்களுக்குத் தெரிந்த செய்திகளைக் கூறுங்கள்.
அத்தை : எனக்குத் தெரியும். நான் கூறுகிறேன் கேளுங்கள். சோழ அரசர்களில் சிறப்புமிக்க அரசன் கரிகாலன் ஆவார். இவரது இயற்பெயர் வளவன் என்பதாகும்.
கனிமொழி : இவரது பெயர் வளவன் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கரிகாலன் என்ற பெயர் எப்படி வந்தது?
மாமா : கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று
மணிமொழி : ஐ! கல்லணை எவ்வளவு நீளமாகவும், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாகவும் இருக்கிறது. இந்தக் கல்லணையைக் கட்ட கரிகாலன் எடுத்துக் கொண்ட முயற்சியைக் கூறுங்கள் மாமா.
மாமா : சரி கூறுகிறேன். எனது ஆசிரியர் எனக்குச் சொன்ன செய்திகளை நான் உங்களுக்குக் கூறுகிறேன். தற்போது பயன்பாட்டில் உள்ள மிகப் பழைமையான ஒரே அணை கல்லணை. இதுவே உலகின் மிகப் பழைமையான நீர்ப்பாசனத்திட்டம் எனவும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ளார்கள். இது பழந்தமிழரின் கட்டுமானத் திறனுக்குச் சான்றாகும். இது இன்று வரை வியத்தகு சாதனையாக உள்ளது.
மணிமொழி : ஓ! அப்படியா மாமா…….
மாமா : ஆம், காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வரும், ஆனால் அந்த நீர் எதற்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்றுவிடும். மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்காலும், கோடைக்காலத்தில் நீர் இன்றியும் மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனைத் தடுக்கும் பொருட்டு பெரியதோர் அணையைக் கட்ட முடிவெடுத்தான் கரிகாலன்.
மணிமொழி : அப்போதே இரும்புக் கம்பிகள், பைஞ்சுதை (சிமெண்ட்) இருந்தனவா?
மாமா : இல்லையம்மா, அணை கட்டப்பட்ட முறையைச் சொல்கிறேன் கேள். காவிரி ஆற்றின்மீது பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அந்தப் பாறையின் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒரு வித ஒட்டும் களிமண்ணைப் பூசி, இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்படி செய்தனர். இது பல நூற்றாண்டுகள் கடந்தும், இன்றளவும் உறுதியோடு நிற்கிறது. கல்லணை தமிழர்களின் கட்டுமானத் திறனைப் பறை சாற்றுவதாக உள்ளது.
கபிலன் : இதோ, இங்கே பாருங்கள். ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் என்ன எழுதியிருக்கிறது என்று படிப்போம் வாருங்கள்.
மாமா : இவ்வணை இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காவிரி ஆறானது காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, புதுஆறு என நான்காகப் பிரிகிறது. காவிரியாறு பிரியும் இடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது. இதனால்தான் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள் வளமாகின்றன. இது உழவுப் பாசனத்திற்கான மிகப்பெரிய திட்டமாகும்.
அத்தை : மதிய உணவு கொண்டு வந்துள்ளேன், மரநிழலில் அமர்ந்து அனைவரும் உணவு உண்போம் வாருங்கள்!
கனிமொழி : கல்லணை, பார்ப்பதற்குக் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. எனவே கரிகாலனுக்கு நன்றி கூறுவோம்.
மணிமொழி : கல்லணை உள்ளவரை கரிகாலனின் புகழ் நிலைத்துநிற்கும்.
வாங்க பேசலாம்
• கல்லணை பற்றி உனக்குத் தெரிந்த செய்திகளை உன் சொந்த நடையில் கூறு.
விடை
(i) கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.
(ii) கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு. 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயம் ஆகும். 1839-இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது.
(iii) பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
(iv) இநத் அணையைக் கரிகாலன் என்ற சோழமன்னன் கட்டினான். தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போது புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத்திட்டம் என்றும் கூறப்படுகிறது.
(v) இவ்வணை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டது. கல்லணையைப் பற்றிய செய்தி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.
• உமது ஊரில் உள்ள மிகப் பழைமையான இடம் எது? அதுபற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
விடை
கலை : பாண்டி! நமது ஊரில் உள்ள மிகப்பழமையான இடம் என்று எதை நினைக்கிறாய்?
விமல் : மதுரை மீனாட்சியம்மன் கோவில் தான் என்று நினைக்கின்றேன்.
கலை : சரி, கோவிலைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?
விமல் : தெரியுமே. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
கலை : ஆமாம், இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலகோயிலாக உள்ளது.
விமல் : இக்கோயில் திராவிடக் கட்டக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாவும் விளங்குகிறது. 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது.
கலை : தேவலோகத்தின் அரசனான இந்திரனால் கட்டப்பட்டது என்பது நம்பிக்கையாக உள்ளது.
கலை : இக்கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
விமல் : இக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோயிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது.
கலை : அவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.
விமல் : உண்மையிலேயே இக்கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றி பாண்டி!
சிந்திக்கலாமா!
• கோடைக்காலங்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன?
விடை
கோடைக்காலங்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக்காரணம், கோடைக் காலங்களில் மழை பொழிவது இல்லை. அதனால் நீர்நிலைகளில் நீர் வற்றி விடுகிறது வறண்டும் போய் விடுகிறது. இந்த நேரங்களில் தான் அதிகமாக நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது. மனிதனின் பேராசையாலும் நீர் சுரண்டப்படுவதாலும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது. பெரும்பாலான ஆறுகள், குளங்கள், ஏரிகள் தூர்வாரப்படாமல் இருப்பதும் காரணமாகும். இங்கு அதிகமான நீர்நிலைகள் இல்லாததும் இருப்பதை முறையாக பராமரிக்காமல் விட்டதாலும் பற்றாக்குறை ஏற்படுகிறது.
• நீர்ப்பற்றாக்குறையைப் போக்க என்ன செய்வாய்?
விடை
நீர்ப்பற்றாக்குறையைப் போக்க பல அணைகள் கட்டலாம். ஆற்றின் குறுக்கே பல தடுப்பணைகளைக் கட்டலாம். நீர்நிலைகளைக் கோடைக்காலங்களில் முறையாக தூர்வாரி பராமரித்து, மழைக்காலங்களில் அதிக நீரை சேகரித்து வைக்கலாம். புதிய புதிய நீர்நிலைகளை உருவாக்கி நீரைச் சேமித்து நிலத்தடி நீரையும் உயர்த்தலாம். இருக்கின்ற நீரை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
பிறர் கூறுவதைக் கவனமுடன் கேட்டல் / வினாக்கள் எழுப்புதல், அவற்றின் மீதான தங்கள் கருத்துகளை / எதிர் வினைகளை வெளிப்படுத்துதல்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான பழத்தைத் தேர்ந்தெடுக்க
1. துயரம் இச்சொல் குறிக்கும் பொருள் துன்பம்
2. வியத்தகு இச்சொல் குறிக்கும் பொருள் ஆச்சரியம் தரும்.
3. முறியடித்து இச்சொல் குறிக்கும் பொருள் தகர்த்து
4. சூழ்ச்சி இச்சொல் குறிக்கும் பொருள் தந்திரம்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. பெருவெள்ளம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பெருமை + வெள்ளம்
ஆ) பெரு + வெள்ளம்
இ) பெரு + வுள்ளம்
ஈ) பெரிய + வெள்ளம்
[விடை : அ) பெருமை + வெள்ளம்]
2. தங்கியிருந்த இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தங்கி + இருந்த
ஆ) தங்கி + யிருந்த
இ தங்கியி + ருந்த
ஈ) தங்கு + இருந்த
[விடை : அ) தங்கி + இருந்த]
3. அமைந்துள்ளது இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அமைந் + துள்ளது
ஆ) அமைந்து + உள்ளது
இ) அமைந்து + ள்ளது
ஈ) அமைந் + உள்ளது
[விடை : ஆ) அமைந்து + உள்ளது]
4. அரசு ஆட்சி என்பதைச் சேர்த்து கிடைக்கும் சொல்
அ) அரசஆட்சி
ஆ) அரசாட்சி
இ) அரசுசாட்சி
ஈ) அரசு ஆட்சி
[விடை : ஆ) அரசாட்சி]
5. நீர் + பாசனம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நீர்பாசனம்
ஆ) நீர்ப்பாசனம்
இ) நீரப்பசனம்
ஈ) நீர்பாசனம்
[விடை : ஆ) நீர்ப்பாசனம்]
பந்தை அதன் எதிர்ச்சொல் கூடையில் போடலாமா?
சரியானதை எடுத்து எழுதுக
1. கல்லணை அமைந்துள்ள மாவட்டம் ………………………… (திருச்சி/ தஞ்சாவூர்)
விடை : தஞ்சாவூர்
2. தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணையாறு ………………………… (வைகை / கொள்ளிடம்)
விடை : கொள்ளிடம்
3. கல்லணையைக் கட்டிய அரசன் ………………………… . (கரிகாலன்/இராசராசன்)
விடை : கரிகாலன்
4. கல்லணை ………………………… தொழில்நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. (பழந்தமிழர்/இன்றைய)
விடை : பழந்தமிழர்
கல்லணை அமைந்துள்ள மாவட்டம்
வினாவிற்கு ஏற்ற விடையளிக்க.
1. கரிகாலனின் இயற்பெயர் என்ன?
விடை
கரிகாலனின் இயற்பெயர் வளவன்.
2. கரிகாலன் என்று பெயர் வரக் காரணம் என்ன?
விடை
கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.
3. கரிகாலன் கல்லணையைக் கட்ட காரணம் யாது ?
விடை
காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வரும். ஆனால் அந்த நீர் எதற்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்றுவிடும். மக்கள் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்காலும், கோடைக்காலத்தில் நீர் இன்றியும் மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனைத் தடுக்கும் பொருட்டு பெரியதோர் அணையைக் கட்டினான்.
4. கல்லணையின் சிறப்பாக நீ நினைப்பதை எழுதுக.
விடை
தற்போது பயன்பாட்டில் உள்ள மிகப்பழமையான ஒரே அணை கல்லணை. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத்திட்டம் எனவும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ளார்கள். இது பழந்தமிழரின் தொழில் நுட்பத்திற்குச் சான்றாகும். இன்று வரை இது வியத்தகு சாதனையாக உள்ளது.
மொழியோடு விளையாடு
ஓர் எழுத்தைக் கண்டுபிடி, நான்கு சொல்லைப் பெறலாம்
அறிந்து கொள்வோம்
தமிழ்நாட்டிலுள்ள முக்கிய அணைகள்
• .கல்லணை
• மேட்டூர் அணை
• வைகை அணை
• சாத்தனூர் அணை
• பவானி சாகர் அணை
செயல் திட்டம்
• நூலகத்திற்குச் சென்று வரலாற்று நூல்களைப் படித்து யாரேனும் ஐந்து அரசர்களின் பெயர்களையும், அவர்கள் செய்த நற்செயல்களையும் தெரிந்து கொண்டு அட்டவணையை நிரப்பி வருக
அகர முதலி
1. அண்டை நாடு – பக்கத்து நாடு
2. அண்ணல் – கருணை உடையவர்
3. ஆசி – வாழ்த்து
4. ஆட்டாந்தொழு – ஆடு கட்டும் இடம்
5. ஆல் – ஆலமரம்
6. ஆவி – உயிர்
7. ஆயத்தப்படுத்துதல் – தயார் செய்தல்
8. இலகுவான – எளிமையான
9. எண்ணும் – நினைக்கும்
10. என்னில் – எனக்குள்
11. ஓலைக்கொட்டான் – ஓலையால் முடையப்பட்ட சிறு கூடை
12. கனிந்து – பழுத்து
13. முறியடித்து – தகர்த்து
14. கொடியடுப்பு – பக்க அடுப்பு
15. சூழ்ச்சி – தந்திரம்
16. சேதாரம் – வீணாதல்
17. துயரம் – துன்பம்
18. துளிர் – இளம் இலை
19. தையலர் – பெண்கள்
20. தொலைவு – தூரம்
21. மன்னர் – அரசர்
22. மாட்டாந்தொழு – மாடுகட்டும் இடம்
23. முளைப்பாரி – நவதானியங்கள் முளைத்துச் சிறிது வளர்ந்து நிறைந்துள்ள மண்பாண்டம்
24. பொதி – மூட்டை
25. வல்லமை – வலிமை
26. வியப்பு – ஆச்சரியம்
27. விரைவில் – வேகமாக
28. வெட்டவெளி – திறந்த வெளி
29. வேளை – நேரம்