தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்
கவிதைப்பேழை: அழியாச் செல்வம்
நுழையும்முன்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பல்வகையான செல்வங்களைச் சேர்த்து வைக்கின்றனர். அவற்றுள் சில செல்வங்கள் களவு போகவோ, அழியவோ கூடும். ஆகையால் பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வங்களுள் சிறந்ததும், அழியாததும் ஆகிய செல்வத்தைப் பற்றி அறிவோம்.
வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன
விச்சைமற்று அல்ல பிற.*
-சமண முனிவர்
சொல்லும் பொருளும்
வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது
வாய்த்து ஈயில் – வாய்க்கும்படி கொடுத்தலும்
விச்சை – கல்வி
வவ்வார் – கவர முடியாது
எச்சம் – செல்வம்
பாடலின் பொருள்
கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.
நூல் வெளி
நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது நானூறு வெண்பாக்களால் ஆனது. இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர். திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் ________
அ) வீடு
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) அணிகலன்
[விடை : ஆ. கல்வி]
2. கல்வியைப் போல் ________ செல்லாத செல்வம் வேறில்லை.
அ) விலையில்லாத
ஆ) கேடில்லாத
இ) உயர்வில்லாத
ஈ) தவறில்லாத
[விடை : அ. விலையில்லாத]
3. ‘வாய்த்தீயின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________
அ) வாய்த்து + ஈயின்
ஆ) வாய் + தீயின்
இ) வாய்த்து + தீயின்
ஈ) வாய் + ஈயீன்
[விடை : அ. வாய்த்து + ஈயின்]
4. ‘கேடில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) கேடி + இல்லை
ஆ) கே + இல்லை
இ) கேள்வி + இல்லை
ஈ) கேடு + இல்லை
[விடை : ஈ. கேடு + இல்லை]
5. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
அ) எவன் ஒருவன்
ஆ) எவன்னொருவன்
இ) எவனொருவன்
ஈ) ஏன்னொருவன்
[விடை : இ. எவனொருவன்]
குறுவினா
1. கல்விச் செல்வத்தின் இயல்புகளாகி நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் பிறரால் கொள்ளப்படாது. கொடுத்தாலும் குறையாது, அரசரால் கவர முடியாது.
சிறுவினா
1. கல்விச்செல்வம் குறித்த நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
கல்வியைப் பொருள் போலக் குவித்து வைத்தாலும் பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்குக் கொடுத்ததலும் குறையாது. அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்கவேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது.
சிந்தனை வினா
1. கல்விச்செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்? – சிந்தித்து எழுதுக.
1. நீர், நெருப்பு ஆகியவற்றால் கல்வி அழியாது.
2. திருடர்களால் கல்வியைத் திருடமுடியாது.
3. கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் குறையாது.
– எனவே, பிற செல்வங்கள் அழியும். ஆனால் கல்விச் செல்வம் அழியாதது ஆகும்.
கற்பவை கற்றபின்
1. கல்வியின் சிறப்பை விளக்கும் பிற பாடல்களைத் திரட்டி எழுதுக.
1. ஓதுவது ஒழியேல்! – ஔவையார்
2. கல்விக்கு அழகு கசடற மொழிதல் – அதிவீரராம பாண்டியன்
3. உடலின் சிறுமைகண் டொண்பிலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார். – நன்னெறி
4. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. – திருக்குறள்
2. கல்வியின் சிறப்பை விளக்கும் கதை ஒன்றினை அறிந்து வகுப்பறையில் கூறுக.
இரு அரசர்களுக்கு இடையே பயங்கரப் போர் நடக்கின்றது. இதில் தோல்வியுற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னனால் கைது செய்யப்படுகின்றான். தோல்வியுற்ற மன்னன் அரசவையில் நிறுத்தப்படுகின்றான். வெற்றி பெற்ற மன்னர் உனக்குத் தூக்கு தண்டனை உன் கடைசி ஆசை என்ன? என்று கேட்கின்றார். அதற்கு தோற்ற மன்னர் கண்ணாடிப் பாத்திரத்தில் பருக நீர் வேண்டும் என்றார். அதன் படி மன்னர் ஆணையிட, பணியாள் தண்ணீரைக் கொடுத்தார்.
அதைக் குடிக்காமல் தோற்ற மன்னன் தயங்குகின்றான். மேலும் இதைக் குடிப்பதற்குள் உன் வீரர்கள் கொன்று விடுவார்களோ என்று பயமாக உள்ளது என்றார். இந்த நீரைக் குடிக்கும் வரை உன்னைக் கொல்ல மாட்டோம் என்றார். கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து, அந்தத் தண்ணீரை எடுத்துத் தாருங்கள் குடிக்கின்றேன் என்றார். மன்னர் கல்வியால் வந்த நுண்ணறிவு கண்டு அம்மன்னனை விடுதலை செய்து மீண்டும் நாட்டைக் கொடுத்தான்.
3. பின்வரும் பாடலைப் படித்து மகிழ்க.
வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
வேகாது வேந்த ராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறைவு றாது
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
மிகஎளிது கல்வி யென்னும்
உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்
பொருள்தேடி உழல்கின் றீரே
– தனிப்பாடல் திரட்டு.