தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்
பாடல் : உழவுப் பொங்கல் – நாமக்கல் வெ. இராமலிங்கனார்
இயல் மூன்று
பாடல்
தொழில் / வணிகம்
கற்றல் நோக்கங்கள்
❖ உழைப்பின் மேன்மையை அறிந்துகொள்ளுதல்
❖ உழவுத்தொழிலே உலகத்தின் அச்சாணி எனப் புரிந்துகொள்ளுதல்
❖ இயற்கை வேளாண்மையைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
❖ செய்யும் தொழிலில் நேர்மையின் இன்றியமையாமையை உணர்ந்துகொள்ளுதல்
❖ அடுக்குத் தொடர்களையும் இரட்டைக் கிளவிகளையும் இடமறிந்து பயன்படுத்துதல்
உழவுப் பொங்கல்
பொங்குக பொங்கல் பொங்குகவே
புதுவனம் நிறைந்தரம் தங்குகவே
எங்கணும் யாவரும் இன்பமுற
ஏர்த்தொழில் ஒன்றே தெம்புதரும்
உணவுப் பொருள்கள் இல்லாமல்
உயிரோ டிருப்பது செல்லாது
பணமும் அதுதரும் நலனெல்லாம்
பயிர்கள் விளைப்பதன் பலனேயாம்
உழவுத் தொழில்தான் உணவுதரும்
உடையும் அதனால் அணியவரும்
பழகும் மற்றுள தொழில்யாவும்
பயிர்த்தொழில் இன்றேல் விழலாகும்
தங்கமும் வெள்ளியும் இருந்தாலும்
தானியம் ஒன்றே விருந்தாகும்
இங்கிதன் உண்மையை உணர்ந்திடுவோம்
ஏர்த்தொழில் மிகுந்திடத் துணிந்திடுவோம்
உழவே செல்வம் உண்டுபண்ணும்
உழைப்பே இன்பம் கொண்டுவரும்
உழவைத் தொழுதிட வருநாளே
உற்றஇப் பொங்கல் திருநாளாம்
ஏழையும் செல்வரும் இங்கிதமாய்
இசைந்துளம் களித்திடும் பொங்கலிது
வாழிய பயிர்த்தொழில் வளம்பெருகி
வையகம் முழுதும் வாழியவே
– நாமக்கல் வெ. இராமலிங்கனார்
சொல்பொருள்
எங்கணும் – எங்கும்
களித்து – மகிழ்ந்து
ஏர்த்தொழில் – உழவுத்தொழில்
இசைந்து – ஏற்றுக்கொண்டு
விழலாகும் – வீணாகும்
வையகம் – உலகம்
பாடல் பொருள்
உழவுத்தொழிலின் மேன்மையை இப்பாடல் விளக்குகின்றது. உழவின் சிறப்பால் பொங்குகின்ற பொங்கலை அனைவரும் கொண்டாடி மகிழவேண்டும் எனக் கூறுகின்றது. எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு ஏற்ற தொழில் ஏர்த்தொழிலே. உணவுப்பொருள்கள் இல்லையென்றால் நாம் வாழ்வது அரிது. பயிர்கள்விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும். மற்ற தொழில்களைக் கற்றுக்கொண்டாலும், பயிர்த்தொழில் இல்லையெனில் எல்லாம் வீணாகும். தங்கம், வெள்ளிபோன்றவற்றை நாம் உண்ணமுடியாது. உணவுப்பயிர்களேநமக்கு உணவாக அமையும். இன்பத்தைத் தருவதும் உழவுத்தொழிலே ஆகும். பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே. ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவுப் பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்குவோம்.
நூல் குறிப்பு
உழவுப் பொங்கலின் சிறப்பை விளக்கும் இப்பாடலை இயற்றியவர், நாமக்கல் வெ. இராமலிங்கனார். அவருடைய கவிதைத் தொகுப்பிலிருந்து இப்பாடல் எடுத்தாளப் பெற்றுள்ளது. இந்திய விடுதலை குறித்தும், காந்தியடிகள் குறித்தும் பல பாடல்களைப் பாடியுள்ளார். காந்தியக் கவிஞர் என்றும் போற்றப்படுகிறார். இவருடைய ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்னும் பாடல் வரி மிகவும் புகழ்பெற்றதாகும். ‘தமிழன் என்றோர் இனமுண்டு’ என்றும் ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றும் அவர் பாடிய பாடல் வரிகள் என்றும் நிலைத்திருப்பவை. இவர், தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. வையகம் என்பதன் பொருள்
அ) ஊர்
ஆ) வயல்
இ) உலகம்
ஈ) கிராமம்
[விடை : இ) உலகம்]
2. நலனெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நலன் + எல்லாம்
ஆ) நல + னெல்லாம்
இ) நலன் + னெல்லாம்
ஈ) நலம் + எல்லாம்
[விடை : அ) நலன் + எல்லாம்]
3. நிறைந்தரம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நிறைந்து + அறம்
ஆ) நிறைந்த + அறம்
இ) நிறை + அறம்
ஈ) நிறை + தறம்
[விடை : அ) நிறைந்து + அறம்]
4. ‘இன்பம்‘ – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
அ) மகிழ்ச்சி
ஆ) களிப்பு
இ) கவலை
ஈ) துன்பம்
[விடை : ஈ) துன்பம்]
ஆ. பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எழுதுக.
விடை
பொங்குகவே உணவுதரும் உணர்ந்திடுவோம்
தங்குகவே அணியவரும் துணிந்திடுவோம்
இ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
பொங்குக தங்குகவே உணவு பழகும்
பொங்கல் எங்கணும் பணமும் உழவு
பொங்குகவே தங்கமும்
ஈ. பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
பொங்குக பொங்கல் பொங்குகவே
உணவு உயிரோடிருப்பது உழவு உடையும்
பழகும் பயிர்தொழில்
உ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. உழவுத்தொழிலால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?
விடை
(i) எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு உழவுத்தொழில் பயன்படுகிறது.
(ii) பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும்.
2. அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் எது?
விடை
அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் உழவுத்தொழில்.
3. பொங்கலை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டுமெனக் கவிஞர் கூறுகிறார்?
விடை
பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே. ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவு பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்க வேண்டுமென கவிஞர் கூறுகிறார்.
ஊ. சிந்தனை வினா
‘உழவர், சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கமுடியும்‘ இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
விடை
உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நாம் உணவின்றிதான் வாழ வேண்டும். உழவர்கள், பயிர்களை விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உணவுப் பயிர்களே நமக்கு உணவாக அமைகிறது. எனவே, உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்தாகும்.
கற்பவை கற்றபின்
. ● உழவுத் தொழிலின் பெருமையை உணர்ந்து போற்றுக.
● பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க.
● பாடலிலுள்ள நயங்களைப் பாராட்டுக.
விடை
எதுகை நயம் :
பொங்குக – எங்கணும்
உணவு – பணம்
உழவு – பழகு
தங்கம் – இங்கிதன்
உழவே – உழவை
ஏழையும் – வாழிய
மோனை நயம் :
பொங்குக – புதுவனம்
எங்கணும் – ஏர்த்தொழில்
உணவு – உயிரோ
பணமும் – பயிர்கள்
உழவும் – உடையும்
தங்கம் – தானியம்
இயைபு :
பொங்குகவே – தங்குகவே
உணவுதரும் – அணியவரும்
உணர்ந்திடுவோம் – துணிந்திடுவோம்
● உழவு நடக்கும் இடத்திற்குச் சென்று, செய்தி திரட்டுக.