தமிழ் : பருவம் 1 இயல் 1 : மொழி
உரைநடை : அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்
இயல் ஒன்று
உரைநடை
கவிதைப் பட்டிமன்றம்
கவிதைப் பட்டிமன்றத்துக்கான அறிமுகம்
பேசுதல் என்பது அடிப்படைத்திறன் எனில், பேச்சாற்றல் என்பது உயர்நிலைத் திறன். பேசுதவின் வளர்நிலையே பேச்சாற்றல் அத்தகைய பேச்சாற்றல் திறனை வளர்க்கும் பாடங்களு ஒன்று, இக்கவிதைப் பட்டிமன்றம்.
பலர் நிறைந்த அவையினிலே தாம் இயற்றிய கவிதையை வெளியிட்டபோது, பாரதியாருக்கு 11 வயதுதான். ஆதலால், கவி பாடும் திறமையை இளமையிலேயே வளர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது. இங்கு உரைநடைப் பாடமாக அமைந்துள்ள இப்பகுதி, இலக்கியத்தின் ஒரு வடிவமான கவிதை நடையில் அமைந்துள்ளமை, புதுமையின் நுழைவாயில். கவிதைக்குரிய சொல்லாடல், உவமைச்சிறப்பு, மோனை, எதுகை போன்ற நயங்கள் மேலும் பாடப்பகுதியைச் சிறப்புடையதாக்குகின்றன. மாணவர்கள், குரல் ஏற்றஇறக்கத்தோடும் தங்குதடையின்றியும் வாய்விட்டுப் படிக்கும் போதுதான் இக்கவிதைப் பட்டிமன்றப் பேச்சு, ஆற்றல் வாய்ந்த பேச்சுக்கலையாக மிளிரும். அதற்கான வாய்ப்பை ஆசிரியர்கள் ஏற்படுத்தித் தரவேண்டும்.
இடம் : பள்ளிவளாகம்
காலம்: பிற்பகல் 3.00 மணி
உறுப்பினர்கள் : நடுவராகச் சிறப்பு விருந்தினர், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இன்சுவை, அருளப்பன், மதியொளி, சலீமா.
அறிவா? பண்பா?
நடுவர் : செந்தமிழே ! நறுந்தேனே!
செகம் போற்றும் செம்மொழியே !
முத்தமிழ் சொல்லெடுத்து
நற்றமிழ்ப் பட்டி மண்டபத்தின்
நடுவராக நான் வந்துள்ளேன்.
வணக்கம்
தித்திக்கும் தேன்தமிழில்
எத்திக்கும் புகழ்பரப்பும்
வித்தகக் கவிதையால்,
பெரிதும் தேவை அறிவா? பண்பா?
எனக் கவிதை வாசிக்க வருகின்றனர்
பாராட்டுக்குரிய நால்வர்,
தனித்துவமிக்க இன்சுவை,
சொல்லழகி சலீமா
அருமையான அருளப்பன்
ஒப்பற்ற மதியொளி….
முதல் கவிதை முத்தாய்ப் பாட
இனிதே அழைக்கின்றேன் இன்சுவையை……
இன்சுவை : புவி காக்கும் தமிழ்த் தாய்க்கும்
கவியரங்கத் தலைமைக்கும்
ஆன்றோருக்கும் சான்றோருக்கும்
அறிவுதான் முன்னேற்றத்தின்
ஆணிவேர் என்றே
அடித்துக் கூற வந்துள்ளேன்
‘அக்னி‘ தந்த அப்துல்கலாம்
அசத்தியதும் அறிவாலே! அறிவாலே!
அறிவின் துணை கொண்டே
ஆயிரம் கண்டுபிடிப்பால் தாமஸ்
ஆல்வா எடிசனும் வாழ்கின்றார் அறிவாலே!
அறிவுமிகு மனிதனாக
அகிலத்தில் உயர்ந்து நின்றால்
அத்தனையும் நம் கையில்
என்று கூறி விடை பெறுகின்றேன்…….
நடுவர் : இன்சுவையின் கவிதை அறிவாயுதம்…….
அடுத்து, ஒளிரும் கவிதையுடன் மதியொளி கவிபாட வருகின்றார்
மதியொளி : அகிலமெல்லாம் தமிழே மணக்கும்!
பண்புதான் வெற்றிப்படி என்றே
பறை சாற்ற வந்துள்ளேன்.
நற்பண்பு தூக்கிவிடும்
நம்மை உயரத்திலே
நற்பண்பு புகுந்து விட்டால்
நாவினிலே இனிமை வரும்
பண்பாலே சிறந்தவர் தாம்
பலருண்டு நம்மிடையே
புத்தரோடு வள்ளுவரும்
போதித்ததும் நற்பண்பே….
நன்னெறியால் நிலைத்து
நிற்போம் உலகினிலே….
நடுவர் : மிளிர்கின்ற தமிழ்க் கவிதை
மதியொளியின் அரும் கவிதை….
அறிவாற்றல் பயன் பேச
அருளப்பன் வருகின்றார்
செறிவாற்றல் கவிதையொன்றைச்
செப்பிடவே வருகின்றார்.
அருளப்பன் : அறிவாற்றல் உள்ளவன்தான்
ஆளுகின்றான் அண்டத்தை
வெறும் பண்பை வைத்துக்கொண்டு
பெரும் பந்தல் போடலாமோ?
கூறும் பண்பில் நம்
வயிறும் நிறைந்திடுமோ?
நல்லவன் இருந்தால்
நாடென்ன முன்னேறுமோ?
வல்லவன் வகுத்ததன்றோ
வளமான இவ்வுலகு…..
தூண் போன்ற அறிவேதான்
வான் முகத்தைத் தொட்டிடுமே!……
நடுவர் : பண்பின் பெருஞ்சிறப்பைப் பொழிந்திடவே வருகின்றார் சொல்லழகி சலீமா……
சலீமா : பண்பிலான் பெற்ற செல்வம்
பயனில்லை உலகோர்க்கே
பண்பேதான் அன்பை நல்கும்
பன்மடங்கு உயர்வைத் தரும்
உண்மை சொன்னேன் யாவர்க்கும்
அன்பின் மிகுதியால் அதியமான்
உயிர் காக்கும் நெல்லிக்கனியை
உவந்தளித்தான் ஔவைக்கு
அத்தனையும் எளியோர்க்கு
அன்னை தெரசா பெற்றுத் தந்தார்
குணமென்னும் நற்பண்பே
குன்றிலிட்ட விளக்கன்றோ…..
நடுவர் : எல்லோரும் சிறப்பாக
நல்லோரே போற்றும் வண்ணம்
நற்கவிதை வாசித்தார்கள்….
என்னுடைய தீர்ப்பிற்கு
இசைந்தே தான் வருகின்றேன்….
கண்ணுக்கு இருவிழி
கல்வியின் நேர்விழி
அறிவும் பண்பும்
சமமாக வைத்தேதான்
உறு புகழ் பெறுவோமே….
பொறி ஐந்தும் பண்பாகப்
பார் முழுவதும் அறிவாக
வலம் வருவோம் நாமே
உளம் நிறை வாழ்த்தோடு
நலம் இரண்டும் தானென்று
நல்ல தீர்ப்பு கூறி
நானும் விடைபெறுகின்றேன் …..
நன்றி வணக்கம்!
மதிப்பீடு
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1. நற்றமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நல் + தமிழ்
ஆ) நற் + றமிழ்
இ) நன்மை + தமிழ்
ஈ) நல்ல + தமிழ்
[விடை : இ) நன்மை + தமிழ்]
2 ‘உலகம்‘ என்னும் பொருளைக் குறிக்காத சொல்
அ) வானம்
ஆ) அண்டம்
இ) செகம்
ஈ) அகிலம்
[விடை : அ) வானம்]
3. அறிவு + ஆயுதம் என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) அறவாயுதம்
ஆ) அறிவாயுதம்
இ) அறிவு ஆயுதம்
ஈ) அறிவாய்தம்
[விடை : ஆ) அறிவாயுதம்]
4 புகழ் இச்சொல்லின் எதிர்ச்சொல்
அ) இகழ்
ஆ) மகிழ்
இ) திகழ்
ஈ) சிமிழ்
[விடை : அ) இகழ்]
5. வெளிச்சம் – இச்சொல்லைக் குறிக்காத சொல் ……
அ) ஒளி
ஆ) தெளிவு
இ) விளக்கு
ஈ) இருள்
[விடை : ஈ) இருள்]
ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) செந்தமிழ் – செம்மை + தமிழ்
ஆ) கவியரங்கம் – கவி + அரங்கம்
இ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. அறிவால் உயர்ந்தவர்களாக இன்சுவை யார் யாரைக் குறிப்பிடுகிறார்?
விடை
● அப்துல் கலாம்
● தாமஸ் ஆல்வா எடிசன்.
2. பண்பால் சிறந்தவர்களாக மதியொளி எவரையெல்லாம் குறிப்பிடுகிறார்?
விடை
● புத்தர்
● திருவள்ளுவர்.
3. உயிர் காக்கும் நெல்லிக்கனியை யார், யாருக்குக் கொடுத்தார்?
விடை
உயிர் காக்கும் நெல்லிக்கனியை அதியமான், ஔவையாருக்குக் கொடுத்தார்.
4. நடுவர் கூறிய தீர்ப்பை உன் சொந்த நடையில் கூறுக.
விடை
அறிவும் பண்பும் கண்ணின் இருவிழிக்கும் சமம் ஆகும். ஐம்பொறிகள் பண்பாகவும், உலகம் முழுவதும் அறிவாகவும் கொண்டு சுற்றி வரும். எனவே இவை இரண்டுமே சிறப்பு என்று நடுவர் தீர்ப்பு கூறினார்.
5. ஐம்பொறிகளுள் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கையும் எழுதுக. கண்,
விடை
கண், காது, வாய், மூக்கு, மெய்(உடல்).
6. தமிழைச் சிறப்பிக்கும் பெயர்களைப் பாடப்பகுதியிலிருந்து எடுத்தெழுதுக. சிந்தனை வினாக்கள்
விடை
● செந்தமிழ்
● நறுந்தேன்
● செகம் போற்றும் செந்தமிழ்
● முத்தமிழ்
● நற்றமிழ்.
ஈ. சிந்தனை வினாக்கள்.
1. கல்வி, செல்வம், வீரம் இவற்றுள் எது சிறந்தது என நீ கருதுகிறாய்? ஏன்?
விடை
(i) கல்வி, செல்வம், வீரம் இவற்றுள் கல்வியே சிறந்தது என நான் கருதுகின்றேன்.
ஏனென்றால், செல்வம் அழிந்து விடும். வீரம் வயதானால் குறைந்து விடும். அழியாமல், குறையாமல் இருப்பது கல்வி மட்டுமே! எனவே கல்வியே சிறந்தது என்பேன்.
(ii) நிலையற்ற செல்வம், வீரம் ஆகியவற்றைவிட நிலையான கல்வியே சிறந்தது.
2. “வெறும் பண்பை வைத்துக்கொண்டு பெரும் பந்தல் போடலாமா?” இத்தொடருக்கான பொருளை உம் சொந்தநடையில் வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
விடை
“வெறும் பண்பை வைத்துக் கொண்டு பெரும் பந்தல் போடலாமா?” இத்தொடருக்கான பொருள் வெற்றுப் பண்பை வைத்து பெரிய பந்தல் போடமுடியுமா? என்பதே! வெறும் பண்பை வைத்துக் கொண்டு கீற்றுப் பந்தல் போட முடியாமல் போகலாம். ஆனால் வாழ்க்கைப் பந்தல் போடலாம்.
படித்து அறிக
இலக்கிய மன்றத் தொடக்க விழா
நிகழ்ச்சி நிரல்
• தமிழ்த்தாய் வாழ்த்து
• வரவேற்புரை : க.காவியா, ஐந்தாம் வகுப்பு
• தலைமை உரை : தலைமையாசிரியர்
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அரியலூர்.
• சிறப்பு உரை : சிறப்பு விருந்தினர்
முனைவர். இரா. அன்பழகன்
மாவட்ட இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.
• நன்றி உரை : செ. முத்து நிலவன், நான்காம் வகுப்பு
• நாட்டுப் பண்
கற்பவை கற்றபின்
• அறிவு, பண்பு – இவற்றில் எது சிறந்தது என நீ கருதுகிறாய்?
விடை
அறிவு, பண்பு- இவற்றில் பண்பே சிறந்ததாக நான் கருதுகிறேன்.
• ‘அறிவுதான் முன்னேற்றத்தின் ஆணிவேர்‘ – இது பற்றி உன் கருத்து என்ன?
விடை
‘அறிவு தான் முன்னேற்றத்தின் ஆணிவேர்’ என்பது உண்மை . மனிதனின் அறிவு தான் அவனைச் சிந்திக்க வைத்து, இன்று நாகரிக மனிதனாக உருவாக்கியது. ஆதிகால மனிதன் படிப்படியான அறிவு வளர்ச்சியால் தான் இன்று மாற்றம் கொண்டு உலகம் ஆள்கின்றான்.
• நாட்டின் [ஊரின், வீட்டின்] வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் நல்லவர்களா? வல்லவர்களா? வகுப்பறையில் சொற்போர் நிகழ்த்துக.
விடை
நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பவர்கள்
நல்லவர்களா? வல்லவர்களா?
நல்லவர்கள் : வணக்கம்! தந்தை பெரியார், சுவாமி விவேகானந்தர், காந்தியடிகள், புத்தர், திருவள்ளுவர் ஆகியோர் தங்கள் நற்பண்புகளால் சிறந்து, தன்னலம் இல்லாமல் நாட்டுமக்கள் நலனுக்காகவே பாடுபட்டவர்கள். நாடு விடுதலை பெறவும், தீய வழிகளில் மக்களைச் செல்லவிடாமல் நல்வழி காட்டி உழைத்தவர்களால் தான் நம் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு
வகிப்பவர்கள் நல்லவர்களே!
வல்லவர்கள் : வணக்கம் ! தாமஸ் ஆல்வா எடிசன், சர்.சி.வி. இராமன், கணித மேதை இராமானுஜம், டாக்டர் அப்துல்கலாம் ஆகியோர் வல்லவர்கள். தங்கள் கண்டுபிடிப்பால் உலகமே போற்றும் வண்ணம் நம் நாட்டை அறிவியல் துறையில் உயர்த்தி இருக்கிறார்கள். எனவே, நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பவர்கள், வல்லவர்களே!