தமிழ் : பருவம் 1 இயல் 4 : முளைப்பாரி – பாடல்
4. முளைப்பாரி – பாடல்
தன்னா னன்னே னானே தன
தானே னன்னே னானே
ஒண்ணாந்தான் நாளையிலே
ஓசந்த செவ்வா கிழமையிலே
ஓலைக்கொட்டான் இரண்டெடுத்து
ஓடும் பிள்ளை தொண்டலிட்டு – தன்னா
வாங்கியாந்த முத்துகளை
வாளியிலே ஊற வச்சி
கம்மந்தட்டை இரண்டெடுத்து
கணுக்கணுவா முறிச்சி வச்சி
சோளத்தட்டை இரண்டெடுத்து
சுளை சுளையா முறிச்சி வச்சி
மாட்டாந்தொழு தெறந்து
மாட்டெருவு அள்ளி வந்து – தன்னா
ஆட்டாந்தொழு தெறந்து
ஆட்டெருவு அள்ளி வந்து
கடுகுலயுஞ் சிறுபயிறு
காராமணிப் பயிறு
மிளகுளயுஞ் சிறுபயிறு
முத்தான மணிப்பயிறு
மொள போட்ட ஒண்ணா நாளு
ஓரெலையாம் முளைப்பாரி
ஓரலைக்குங் காப்புக்கட்டி
ஒரு பானை பொங்கலிட்டு
முளைப்பாரி போடுங்கம்மா —–(2)
தன்னா னன்னே போடுங்கம்மா ——–{2)
தையலரே ஒரு குலவை – தன்னா
– நாட்டுப்புறப் பாடல்
பாடல்களைச் சொந்த நடையில் தாம் விரும்பும் வகையில் கருத்துகளை இணைத்துப்பாடுதல்
வாங்க பேசலாம்
● பாடலை ஓசை நயத்துடன் பாடிக்காட்டுக.
● முளைப்பாரி பற்றி அறிந்து வந்து வகுப்பறையில் பேசுக
விடை
ஒரு பானையில் மண் நிரப்பி அதில் நவதானியங்களை நெருக்கமாக தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் நாலைந்து நாட்களுக்கு வைத்துவிடுவார்கள்.
தினமும் பானையில் இருக்கும் மண்ணிற்கு நீர் ஊற்றி வருவார்கள். எனவே, பயிர் வகை, விதைகள் நெருக்கமாக பானையில் முளைத்து, வளர்ந்து நிற்கும் பானையை நோன்பிருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். இதையே முளைப்பாரி என்கிறோம். முளைப்பாரி இல்லாத மாரியம்மன் விழா இல்லை. முளைப்பாரி பல்லாயிரம் வருட விவசாய வாழ்க்கையின் தொடர்ச்சியான விவசாய சடங்கு.
● இது போன்று வேறு பாடல்களைக் கேட்டறிந்து வந்து வகுப்பறையில் பாடி மகிழ்க.
விடை
மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசா
இலையைநம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவைநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சைநம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா
பழத்தைநம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா
மகனை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா
உன்னைநம்பி ஏலேலோ நான் இருக்க ஐலசா
என்னைநம்பி ஏலேலோ எமன் இருக்க ஐலசா
எமனைநம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா
காட்டைநம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா
சிந்திக்கலாமா!
● மாட்டு எருவையும், ஆட்டு எருவையும் வயலுக்கு இடவேண்டும் என்று தாத்தா கூறுகிறார் ஆனால் அப்பாவோ, உடனே பலன் தருவது செயற்கை உரம் தான் என்கிறார். யார் கூறுவது சரி?
விடை
இருவரும் கூறுவது சரிதான். மாட்டு எருவையும், ஆட்டு எருவையும் வயலுக்கு இடுவதனால் அவைகள் இயற்கை உரமாக இருப்பதனால், இயற்கை வேளாண்மைக்கு உதவுகிறது. உடலுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தருகிறது. மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகள் வாழவும் வழிவகை செய்கிறது.
செயற்கை உரம் இடுவதால் உடனே பலனைத்தரும். ஆனால், அதனால் வேதிப்பொருட்கள் மண்ணில் கலந்து மண் வளம் பாதிக்கப்படுகிறது. நுண்ணுயிரிகளும் அழிந்து விடுகிறது. மனித உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலந்த உணவையே தருகிறது. அதனால் மனிதன் தனது ஆரோக்கியத்தை இழந்து பல நோய்களுக்கு உட்படுகிறான். இருவர் கூறுவதும் சரியாக இருந்தாலும், இயற்கை உரங்களை வயலுக்கு இடுவதே நல்லது. அதுவே மனித ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
பொருள் தருக
1. முளைப்பாரி = _________
விடை : முளையிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மண்பாண்டம்
2. தையலர் = _________
விடை : பெண்கள்
3. ஓலைக்கொட்டான் = _________
விடை : ஓலையால் முடையப்பட்ட சிறு கூடை
4. மாட்டாந்தொழு = _________
விடை : மாடு கட்டும் இடம்
5. ஆட்டாந்தொழு = _________
விடை : ஆடு கட்டும் இடம்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. இரண்டெடுத்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) இரண் + டெடுத்து
ஆ) இரண்டு + எடுத்து
இ) இரண்டெ + டுத்து
ஈ) இரண்டெ + எடுத்து
[விடை : ஆ) இரண்டு + எடுத்து]
2. பொங்கலிட்டு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) பொங்கல் + இட்டு
ஆ) பொங்கல் + லிட்டு
இ) பொங்க + இட்டு
ஈ) பொங் + கலிட்டு
[விடை : அ) பொங்கல் + இட்டு]
3. ஆடு + எரு என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) ஆடு எரு
ஆ) ஆடெரு
இ) ஆட்டெரு
ஈ) ஆடொரு
[விடை : இ) ஆட்டெரு]
4. செவ்வாய் + கிழமை என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் …………….
அ) செவ்வாய்கிழமை
ஆ) செவ்வாய்க்கிழமை
இ) செவ்வாகிழமை
ஈ) செவ்வாக்கிழமை
[விடை : அ) செவ்வாய்க்கிழமை]
5. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக
அ) சோளத்தட்டை = சோளம் + தட்டை
ஆ) மாட்டெரு = மாடு + எரு
இப்பாடலில் ஒரேசொல் இரண்டு முறை அடுத்தடுத்து வருவதைக் கண்டறிந்து எழுதுக – அடுக்குத்தொடர்
எ.கா கணுக்கணுவா
விடை : சுளை சுளையா
இப்பாடலில் இடம்பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
எ.கா: நாளையிலே, கிழமையிலே
விடை
ஊறவச்சி – முறிச்சிவச்சி
கம்மந்தட்டை – சோளத்தட்டை
மாட்டாந்தொழு – ஆட்டாந்தொழு
இப்பாடலில் இடம்பெற்றுள்ள முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
எ.கா: ஓலைக்கொட்டான் ஓடும் பிள்ளை
விடை
வாங்கியாந்த – வாளியிலே
கம்மந்தட்டை – கணுக்கணுவா
மாட்டாந்தொழு – மாட்டெருவு
ஆட்டாந்தொழு – ஆட்டெருவு2.
மேகத்திலுள்ள பேச்சு வழக்குச் சொற்களைக் குடையிலுள்ள எழுத்து வழக்குச் சொற்களுடன் இணைத்துக் காட்டுக.
விடை
1. ஒசந்த – உயர்ந்த
2. செவ்வா – செவ்வாய்
3. வாங்கியாந்த – வாங்கிவந்த
4, ஊற வச்சி – ஊற வைத்து
5. முறிச்சி – முறித்து
6. மொளபோட்ட – முளைக்க வைத்த
கலையும் கைவண்ணமும்
முளைப்பாரியை வண்ணமிட்டு மகிழ்க!…
அறிந்து கொள்வோம்
நவதானியங்கள் எவை என அறிந்து கொள்வோமா…
● நெல்
● கோதுமை
● பாசிப்பயறு
● துவரை மொச்சை
. ● எள்
● கொள்ளு
● உளுந்து
● கடலை
செயல் திட்டம்
● மாணவர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து கொள்க. ஒவ்வொரு குழுவும் தமக்குக் கிடைக்கும் சிறு தானியங்களைக் கொண்டு முளைப்பாரியிட்டுக் கொண்டு வருக.
● பேச்சுவழக்குச் சொற்களுக்கு இணையான எழுத்துவழக்குச் சொற்களை எழுதுக
பேச்சுவழக்கு எழுத்துவழக்கு
1. படிச்சான் – படித்தான்
2. ஆப்பை – அகப்பை
3. கூப்டியா? – கூப்பிட்டாயா?
4. இன்னா சொல்லுற? என்ன சொல்கிறாய்?
5. நோம்பு – நோன்பு
6. காத்தால – காலையில்
7. சாந்தரம் – மாலையில்
8. பதட்டம் – பதற்றம்
9. நேத்து – நேற்று
10. சிலவு – செலவு