தமிழ் : பருவம் 3 இயல் 2 : தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும்
2. தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும்
காட்டில் இருந்த பெரிய மரம் ஒன்றின் கிளையில் தன் குஞ்சுகளுடன் கூட்டில் தூக்கணாங்குருவி ஒன்று வசித்து வந்தது. அதன் குஞ்சுகள், கீச்…… கீச்…. என்று ஒலி எழுப்பி மகிழ்ச்சியுடன் இருந்தன. அப்போது அந்த வழியாக ஒட்டகச்சிவிங்கி ஒன்று வந்தது.
ஒட்டகச்சிவிங்கி: அப்பாடா… என்ன வெயில்… என்ன வெயில் …. இந்த மரத்தின் அடியில் கொஞ்ச நேரம் ஒதுங்கலாம். என நினைத்தது. அப்போது தூக்கணாங்குருவி குஞ்சுகள் மகிழ்ச்சியுடன் சத்தமிட்டுக் கொண்டிருந்தன… என்ன ஒரே சத்தம்! என ஒட்டகச்சிவிங்கி மேலே பார்த்தது. மரக்கிளையில் உள்ள கூட்டில் இருந்த தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் சத்தமிட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்து கோபம் கொண்ட, ஒட்டகச்சிவிங்கி மரக்கிளையைப் பிடித்து உலுக்கியது.
தூக்கணாங்குருவி: ஏ! ஒட்டகச்சிவிங்கியே! ஏன் மரக்கிளையை உலுக்குகிறாய்? என் கூட்டிலுள்ள குஞ்சுகள் பயப்படுகின்றன.
ஒட்டகச்சிவிங்கி: உன் குஞ்சுகள் கத்துவது எனக்குப் பிடிக்கவில்லை.
(அப்போது… தேனீ ஒன்று பறந்து வந்து மரத்தில் உள்ள பூவில் அமர்ந்தது)
தேனீ: ஒட்டகச்சிவிங்கியே! மரம் அனைவருக்கும் பொதுவானது. தூக்கணாங்குருவி கூடு கட்டி வாழ்கிறது. உனக்கு ஓய்வெடுக்க நிழல் தருகிறது. எனக்கு இம்மரத்தில் உள்ள பூக்களில் இருந்து தேன் கிடைக்கிறது. எனவே நாம் அனைவரும் நண்பர்களாக இருப்போம்.
ஒட்டகச்சிவிங்கி: இல்லை! இல்லை! நான் உங்களுடன் சேர முடியாது. எனக்கு இந்தக் குஞ்சுகள் கத்துவது பிடிக்கவில்லை.
(மீண்டும் மரக்கிளையை ஒட்டகச்சிவிங்கி உலுக்கியது)
தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் பயந்து, காப்பாத்துங்க…. காப்பாத்துங்க என மீண்டும் அலறின.
தேனீ: நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். அருகில் உள்ள குளத்தில் புத்திசாலித் தவளை வாழ்ந்து வருகிறது. அதனிடம் சென்று உதவி கேட்போம்.
(தேனீ, ஒட்டகச்சிவிங்கியின் அடாத செயலை தவளையிடம் கூறியது. தூக்கணாங்குருவியும் தன் நிலையைக் கூறித் தவளையிடம் உதவி கேட்டது)
தவளை: உங்களுக்குக் கட்டாயம் உதவுகிறேன். தண்ணீர் குடிக்க வரும் போதெல்லாம் இந்த ஒட்டகச்சிவிங்கியின் கால்களில் மிதிபட்டு எங்கள் இனம் அழிந்து போகிறது. அதனால், நாம் படும் துன்பம் அதற்குத் தெரியவில்லை. அதற்கும் அந்த நிலை ஏற்பட்டால்தான், தானாகவே புரிந்துகொள்ளும் போலிருக்கிறது.
(மறுநாள், ஒட்டகச்சிவிங்கி வழக்கம்போல் அந்த மரத்தின் அருகில் வருகிறது.)
ஒட்டகச்சிவிங்கி: அப்பாடா! இன்று கொஞ்சம் வெயில் பரவாயிலே. அட, அது என்ன? அந்தத் தேனீக்கூட்டம் எப்போது பார்த்தாலும் ஙொய்…ஙொய்..னு சத்தம் போடுதே. இரு, இரு, இப்ப உங்களை என்ன செய்றேன் பாருங்க.
தேனீக்களின் கூட்டை ஒட்டகச்சிவிங்கி, தன் தலையால் தட்டிக் கலைக்கிறது. சினம் கொண்ட தேனீக்கள், ஒட்டகச்சிவிங்கியின் காதைக் கடிக்கின்றன. வலி பொறுக்கமுடியாமல், ஒடகச்சிவிங்கி அருகிலிருந்த குளத்தில் விழுகிறது. அது விழுந்ததால் அங்கிருந்த தவளைகள், அதன் உடலின்மீது அங்குமிங்கும் ஓடுகின்றன. தண்ணீரிலிருந்து தட்டுத்தடுமாறி எழுந்த ஒட்டகச்சிவிங்கி, மீண்டும் மீண்டும் கூச்சம் தாங்காமல் தண்ணீரில் விழுகிறது. தேனீக்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன.
ஒட்டகச்சிவிங்கி: ஐயோ தேனீக்களே என்னை கொட்டாதீர்கள். தவளைகளே என் மீது ஏறாதீர்கள் – என்று கத்தியது
நமக்கு ஏற்பட்டதுபோலத்தானே அந்தத் தூக்கணாங்குருவிகளுக்கும் ஏற்பட்டிருக்கும். தங்கள் கூட்டைக் கலைத்ததால்தானே அந்தத் தேனீக்களும் என்னைக் கொட்டின. பாவம், அந்தத் தவளைகள் எத்தனை முறை அவற்றை நான் காலால் மிதித்திருக்கிறேன். எனக்கு வலித்ததுபோல அவற்றிற்கும் வலித்திருக்கும் என்று ஒட்டகச்சிவிங்கி, தான் செய்த தவற்றை எண்ணுகிறது. இனிமேல், யாருக்கும் தொல்லை தரமாட்டேன். துன்பம் செய்ய மாட்டேன் என்று உண்மையாகவே மனம் வருந்தியது ஒட்டகச்சிவிங்கி. மேலும், தன் தவற்றைப் பொறுத்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் வேண்டியது. பின்னர், அனைவரோடும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது.
நீதிக் கருத்து: நல்லதே நினைப்போம்! நன்மை பெறுவோம்!
பயிற்சி
வாங்க பேசலாம்
நட்பை வலியுறுத்தும் கதையை வகுப்பறையில் அங்க அசைவுகளுடனும் சரியான ஒலிப்புடனும் கூறுக.
மார்க் டிவெய்ன் ஒரு சமயம் குதிரைப் பந்தயத்தில் தோற்றுப் போய் வந்துகொண்டிருந்த தனது முன்னாள் நண்பரைச் சந்திக்க நேரிட்டது. அந்த நண்பர் குதிரைப் பந்தயத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகவும், ஊருக்குப் போகக்கூடப் பணமில்லை என்றும் கூறி மார்க் டிவெய்னிடம் உதவுமாறு வேண்டினார். மார்க் டிவெய்ன் அவரிடமும் என்னிடமும் அவ்வளவு பணமில்லை . ஆனால், ஓர் உதவி செய்யலாம் என்றார்.
இரயிலில் எனது சீட்டுக்கு கீழே என் காலுக்கடியில் நீ ஒளிந்துகொள்ளலாம் என்று ஐடியாக் கொடுத்தார். நண்பரும் ஒத்துக் கொண்டு பயணம் செய்ய ஆரம்பித்தார்கள், டிக்கெட் பரிசோதகர் வந்தார். மார்க் டிவெய்ன் தன்னிடமிருந்த இரண்டு டிக்கெட்டுகளைக் கொடுத்தார். பரிசோதகர், “மற்றொருவர் எங்கே”? என்று கேட்க, “அவர் கொஞ்சம் வித்தியாசமானவர். அவரது செயல்களும் வித்தியாசமானது. அதனால் என் காலுக்குக் கீழே உட்கார்ந்து இருக்கிறார்” என்று சொல்லி அறிமுகப்படுத்தினார். மார்க் டிவெய்னின் நண்பருக்குத் தனது சூதாட்டப் பழக்கத்தின் வேதனை இப்போது புரிந்தது. மீண்டும் இருவரும் உற்ற நண்பர்களாக மாறினர்.
தவளையின் நற்குணத்தை உன் சொந்த நடையில் கூறுக.
தூக்கணாங்குருவியும், தேனீயும் ஒட்டகச்சிவிங்கியின் செயலைத் தவளையிடம் கூறியதும், தவளை அவர்களுக்கு உதவி செய்ய எண்ணியது.
மறுநாள் ஒட்டகச்சிவிங்கி அவர்களைத் துன்புறுத்தியதும் தேனீக்கள் அதன் காதைக் கடித்தன. ஒட்டகச்சிவிங்கி வலிதாங்க முடியாமல் அருகிலுள்ள குளத்தில் விழுந்தது. குளத்திலிருந்த தவளைகள் ஒட்டகச்சிவிங்கியின் மீது ஏறி இறங்கின, மீண்டும் வெளிவந்த ஒட்டகச்சிவிங்கியை தேனீக்கள் கொட்ட அது மீண்டும் தண்ணீரில் விழ தவளைகள் அதன் மீது ஏறின. இச்செயலைக் கண்ட ஒட்டகச்சிவிங்கி தன் செயலை எண்ணி வருந்தியது. அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்களுடன் இணைந்து மகிழ்வாய் வாழத் தொடங்கியது.
சிந்திக்கலாமா?
* உன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரத்தில் பறவையோ, அணிலோ கூடு கட்டினால் அதற்குத் தொல்லை தராமல் எவ்விதம் நடந்துகொள்ளலாம்? சிந்தித்து விடை கூறுக.
வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் பறவையோ, அணிலோ கூடு கட்டினால் அதற்குத் தொல்லை தராமல் அதன் அருகில் செல்லவோ, பட்டாசு போன்றவற்றை வெடிக்காமலோ பார்த்துக்கொண்டாலே போதும். அவை மகிழ்வுடன் வாழும்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. மரக்கிளையை உலுக்கியது ______________.
அ) தேனீ
ஆ) ஒட்டகச்சிவிங்கி
இ) தவளை
ஈ) சிட்டுக்குருவி
விடை : ஆ) ஒட்டகச்சிவிங்கி
2. மரத்தூள் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.
அ) மரம் + தூள்
ஆ) மர + தூள்
இ) மரத்து + தூள்
ஈ) மரத் + தூள்
விடை : அ) மரம் + தூள்
3. திட்டம் + படி – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________.
அ) திட்டபடி
ஆ) திட்டப்படி
இ) திட்டம்படி
ஈ) திட்டுபடி
விடை : ஆ) திட்டப்படி
4. மிதிபட்டு – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________.
அ) மிதி + பட்டு
ஆ) மிதிப் + பட்டு
இ) மீதி + பட்டு
ஈ) மீதிப் + பட்டு
விடை : அ) மிதி + பட்டு
5. இணைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல் ___________.
அ) மகிழ்ந்து
ஆ) பிரிந்து
இ) சேர்ந்து
ஈ) சிறந்து
விடை : ஆ) பிரிந்து
வினாக்களுக்கு விடையளிக்க
1. தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ஏன் கத்தின?
ஒட்டகச்சிவிங்கி மரக்கிளையை உலுக்கியதால் தூக்கணாங்குருவி குஞ்சுகள் கத்தின.
2. தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் யார் யார்?
தவளையும் தேனீயும் தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் ஆவர்.
3. தேனீ எதன் காதருகே சென்று கடித்தது?
தேனீ ஒட்டகச்சிவிங்கியின் காதருகே சென்று கடித்தது.
4. இக்கதையின் மூலம் நீ அறியும் நீதிக்கருத்து யாது?
நல்லதே நினைப்போம்! நன்மை பெறுவோம்!
அகர முதலியைப் பார்த்து பொருள் அறிக.
புத்திசாலி – அறிவாளி
அடாத செயல் – முறையற்ற செயல்
குருவிக்கேற்ற கூட்டைத் தேர்ந்தெடுப்போமா?
1. பறவைகள் பறந்தன
2. ஆடு மேய்ந்தது
3. மாணவர்கள் வந்தனர்
4. மீன் நீந்தியது
சரியான சொல்லை நிரப்பிப் படித்துக்காட்டுக.
1. தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் __________ என ஒலியெழுப்பி மகிழ்ச்சியாக இருந்தன. (கீச்… கீச்… / கூக்கு… கூக்கு)
விடை : கீச்… கீச்…
2. மரத்தின் அடியில் ___________ ஒதுங்கியது. (ஒட்டகம் / ஒட்டகச்சிவிங்கி)
விடை : ஒட்டகச்சிவிங்கி
3. ‘தூக்கணாங்குருவிக்கு முதலில் _________ உதவிக்கு வந்தது. (மரங்கொத்தி / மீன்கொத்தி)
விடை : மரங்கொத்தி
4. ஒட்டகச்சிவிங்கி அருகில் இருந்த __________ தொப்பென்று விழுந்தது. (ஆற்றில் / குளத்தில்)
விடை : குளத்தில்
வினைமரபினை அறிந்துகொள்வோமா? பொருத்தமானதை உரிய கோட்டில் எழுதுக.
(மாத்திரை விழுங்குதல், உணவு உண்ணுதல், பழம் தின்னுதல், பால் பருகுதல். தண்ணீர்குடித்தல்)
சொல் விளையாட்டு.
ஒன்றை மாற்றினால் மற்றொன்று கிடைக்குமே!
1. ‘வெயில்’ – இச்சொல்லில் “வெ” வை மாற்றி ‘ம’ வை நிரப்பு.
ஆடும் பறவை வரும் அழகாய் இருக்கும் – மயில்
2. ‘மரம்’ இச்சொல்லில் ‘ம’ வை மாற்றி ‘அ’ வை நிரப்பு.
அறுக்க உதவும் கருவியைப் பெறுவாய் அரம்.
3. ‘கூச்சம்’ இச்சொல்லில் ‘கூ’ வை மாற்றி ‘ம’ வை நிரப்பு.
உன் அடையாளங்களில் ஒன்றைப் பெறுவாய் மச்சம்.
4. ‘குருவி’ இச்சொல்லில் ‘கு’ வை மாற்றி ‘அ’ வை நிரப்பு.
குளித்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவாய் அருவி.
5. ‘பணம்’ இச்சொல்லில் ‘ப’ வை மாற்றி ‘ம’ வை நிரப்பு.
மூக்கின் வழியே நுகர்ந்து மகிழ்வாய் மணம்.
உன்னை அறிந்துகொள்.
தலைகீழாகக் கூடுகட்டி வாழும் பறவை எது?
தலைகீழாக கூடுகட்டி வாழும் பறவை தூக்கணாங்குருவியாகும்.
கலையும் கைவண்ணமும்
வண்ண நூலினைப் படத்தின் மேல் ஒட்டி வண்ணம் தீட்டி வரைக.
அறிந்து கொள்வோம்
தலைகீழாகக் கூடுகட்டி வாழும் பறவை தூக்கணாங்குருவியாகும்
சிந்திக்கலாமா?
உன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரத்தில் பறவையோ, அணிலோ கூடு கட்டினால் அதற்குத் தொல்லை தராமல் எவ்விதம் நடந்துகொள்வாய்? சிந்தித்து விடை கூறுக.
செயல் திட்டம்
நாளிதழ்களில் வெளிவரும் விலங்குகளின் படங்களை ஒட்டிப் படத்தொகுப்பு ஒன்றை உருவாக்குக.