தமிழ் : பருவம் 1 இயல் 7 : சான்றோர் மொழி
7. சான்றோர் மொழி
இனியவை நாற்பது
கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது
– பூதஞ்சேந்தனார்
பாடல் பொருள்
கற்றவர்களின்முன் தான் கற்ற கல்வியைக் கூறுதல் இனிமையானது. அறிவில் மேம்பட்டவர்களுடன் சேர்ந்திருப்பது மிகவும் இனிமையானது. எள் அளவு சிறியதாயினும் தான் பிறரிடம் கேட்டுப் பெறாமல், பிறருக்குக் கொடுத்தல் எல்லாவற்றையும்விட இனிமையானதாகும்.
பொருள் அறிவோம்
மிக்கார் : அறிவில் மேம்பட்டவர்
எள்துணை : எள் அளவு
எத்துணையும் : எல்லாவற்றிலும்
மாண்பு : பெருமை
நூலைப்பற்றி….
இந்நூல் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனாரால் எழுதப்பட்டது. வாழ்க்கைக்கு நன்மை தரும் இனிய கருத்துகளைக் கூறுவது. நாற்பது பாடல்களைக் கொண்டது. எனவே இனியவை நாற்பது என்று அழைக்கப்படுகிறது.
செய்யுளைத் தெளிவான உச்சரிப்புடன் படித்தல், அதன் சரியான பொருளைப் புரிந்து கொண்டு கருத்தை வெளிப்படுத்துதல்.
பயிற்சி
வாங்க பேசலாம்
1. பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்துக்காட்டுக.
2. கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் உள்ள வேறுபாடுகள் – கலந்துரையாடல்
உலகு : கற்றவரே உலகில் பெரியவர்; அனைத்தும் அறிந்தவர்.
கணேஷ் : காமராசர் என்ன மெத்தப் படித்தவரா?
உலகு : அதனால் தான், காமராசர் தான் படிக்காததால் தமிழ்நாட்டு மக்கள் படிக்க வேண்டும் என்பதற்காக 30,000 பள்ளிக்கூடங்களை உருவாக்கினார்.
கிருஷ்ணராஜ் : கொத்தனார், தச்சர், கொல்லர் போன்றவர்கள் என்ன படித்து வந்தார்கள்?
சதீஷ் : நீ சொல்கிறவர்கள் படித்திருந்தால் தங்கள் தொழிலை மேம்பட்ட நிலைக்கு கொண்டு சென்றிருப்பார்கள்.
செல்வி : கல்வி இல்லாதவர்கள் விளைச்சல் இல்லாத தரிசு நிலத்தைப் போன்றவர்கள் என்கிறார் வள்ளுவர்.
கலையரசி : அறிவில்லாதவரின் அழகு பொம்மைக்குச் சமம் என்கிறார் வள்ளுவர்.
சுந்தர் : கற்றவர் ஒரு செயலைச் செய்யும் முன் நன்மை, தீமை, பயன்கள், விளைவுகள், வளர்ச்சி போன்றவற்றை ஆராய்ந்து செய்ய தொடங்குவார்கள்.
மலர்விழி : கற்றவர்கள் உடல் உழைப்பு செய்ய தயங்குகிறார்களே?
உதயகுமார் : அப்படியெல்லாம் இல்லை. கற்றவர்கள் வேலை செய்தால் செயலை விரைந்தும் பிழையின்றியும் செய்வார்கள் கல்லாதவர் சரியாகச் செய்தாலும் அதற்குரிய செல்வத்தைப் பெற மாட்டார்கள்.
3. உன் நண்பனின் தேவை அறிந்து அவன் கேட்காமலேயே உதவிய அனுபவம் உனக்கு உண்டா ? அதில் உனக்கு மகிழ்ச்சியா? வருத்தமா? ஏன்? கலந்துரையாடு….
செல்வம் : நான் துரைப்பாண்டிக்கு பென்சில் கொடுத்தேன். அவனுடைய பென்சில் சீவும்போது உடைந்துவிட்டது.
கோபி : நான் ஆறுமுகத்திற்கு அழிப்பான் (ரப்பர்) கொடுத்தேன். அவன் வீட்டில் இருந்து எடுத்து வர மறந்து விட்டான்.
மகேஷ் : நீங்கள் இருவரும் கேட்காமலேயே கொடுத்தீர்களா! மிக்க மகிழ்ச்சியாக உள்ளதே!
தேன்மொழி : நான் செங்கொடிக்கு வண்ணப் பென்சில் கொடுத்தேன்.
கமலா : உனக்கு வண்ணமிட வேறு பென்சில் வைத்திருந்தாயா?
தேன் மொழி : செங்கொடி வண்ணமிட்டபின் நான் வாங்கி வண்ணமிட்டேன்.
ராகுல் : என் நண்பன் கதிரேசனுக்கு நான் ப்ரௌன்ஷீட் கொடுத்தேன். அவனுடைய புத்தகத்தில் மேலட்டை கிழிந்து இருந்தது.
விஜய் : நான் என் நண்பன் ஆனந்துக்கு கடலை உருண்டை கொடுத்தேன்.
தானப்பன் : நாம் அனைவருமே கேட்காமலேயே கொடுத்துள்ளோம். மிக்க மகிழ்ச்சி.
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் ___________.
அ) பாடுதல்
ஆ) வரைதல்
இ) சொல்லுதல்
ஈ) எழுதுதல்
விடை : இ) சொல்லுதல்
2. ஈதல் என்ற சொல் குறிக்கும் பொருள்
அ) கொடுத்தல்
ஆ) எடுத்தல்
இ) தடுத்தல்
ஈ) வாங்குதல்
விடை : அ) கொடுத்தல்
3. மிக்காரை என்ற சொல்லின் எதிர்ச்சொல்___________.
அ) அறிவிலாதார்
ஆ) அறிந்தோரை
இ) கற்றோரை
ஈ) அறிவில்மேம்பட்டவர்
விடை : அ) அறிவிலாதார்
4. இரவாது என்ற சொல் குறிக்கும் பொருள் _____________.
அ) பிறரிடம் கேட்டுப் பெறாது
ஆ) பிறரிடம் கேட்டுப் பெறுவது
இ) பிறரிடம் கொடுப்பது
ஈ) பிறருக்கு கொடுக்காது
விடை : அ) பிறரிடம் கேட்டுப் பெறாது
5. சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் _______________.
அ) தேடுதல்
ஆ) பிரிதல்
இ) இணைதல்
ஈ) களைதல்
விடை : இ) இணைதல்
பொருள்பட எழுதிப் படித்து மகிழ்க
1. என க்குஇனி ப்புபி டிக்கும்
எனக்கு இனிப்பு பிடிக்கும்
2. உழை ப்புஉ யர்வுத ரும்
உழைப்பு உயர்வு தரும்
3. மர ம் வள ர்ப்போம்ம ழைபெ றுவோம்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
4. சுத் தம்சு கம்த ரும்
சுத்தம் சுகம் தரும்
5. இனி யதமி ழில்பே சுங்கள்
இனிய தமிழில் பேசுங்கள்
நீ எதை விரும்புவாய்? ஏன்? கலந்துரையாடுக
பசுமையான தோட்டத்தோடு கூடிய வீட்டையே நான் விரும்புவேன்.
தாரிகா : எங்கள் வீட்டில் இரண்டு தென்னை மரம், இரண்டு எலுமிச்சை மரம், மூன்று கொய்யா மரம், ஒரு சப்போட்டா மரம் மற்றும் ஒரு முருங்கை மரம் உள்ளது.
வேதிக் : எங்களுடைய வீட்டில் இரண்டு நெல்லி மரம், இரண்டு வாழை மரம், ஒரு மா மரம், இரண்டு கறிவேப்பிலை மரம் உள்ளது.
வித்யா : எங்கள் வீட்டில் செடி கொடிகள் வைக்க இடமே இல்லை. அனைத்து இடத்தையும் சிமெண்ட்டால் பூசிவிட்டார்கள்.
ஓவியா : இப்படி அனைத்து இடத்தையும் கான்கிரீட் ஆக மாற்றினால் மழைத்தண்ணீர் எப்படி பூமிக்கடியில் செல்லும்?
ரம்யா : எங்கள் வீட்டில் எல்லாம் மழைநீரை சேமிக்க தொட்டி அமைத்துள்ளோம். அதில் கூழாங்கற்கள், மணல் சேர்த்துள்ளோம்.
கமலா : எங்கள் வீட்டில் துளி மழைநீரையும் வீணாக்காமல் அனைத்தையும் தோட்டத்திற்குள் செலுத்தி காய்கறிகள் பயிரிட்டு வருகிறோம். மாடித் தோட்டம் போட்டிருக்கிறோம். கத்திரி, வெண்டை, புடலை, தக்காளி போன்ற வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை மாடித் தோட்டத்திலிருந்தே பறிக்கிறோம். நான் தினமும் காலை, மாலை வேளைகளில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவேன்.
ரஞ்சித் : நான் எங்கள் வீட்டில் பூஞ்செடிகள் வளர்த்து வருகிறேன்.
கண்ணன் : நாம் அனைவருமே மழை நீரைச் சேமிக்கும் முறையை அறிந்துள்ளோம். ஆகவே, ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்போம்!
உன்னை அறிந்துகொள்
1. உன் நண்பனை உனக்குப் பிடிக்கக் காரணங்கள் எவை?
1. அன்பாகப் பழகுவான்
2. பகிர்ந்து உண்ணுவான்
3. சண்டை போட மாட்டான்
4. ஓடி ஆடி விளையாடுவான்
2. உன்னிடத்தில் உனக்குப் பிடிக்காதது எது?
கோபம், பிடிவாதம், கீழ்படியாமை.
சிந்திக்கலாமா?
காதரும் அப்துலும் சகோதரர்கள், இருவரும் தங்களுக்குக் கிடைக்கும் சிறு தொகையைச் சேமித்து வருகின்றனர். அந்த ஆண்டு ஏற்பட்ட புயல் பாதிப்பினை அறிந்த காதர் புயல் நிவாரண நிதிக்காக, தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொடுக்க நினைக்கிறான். அவனின் தம்பி அப்துல், தனது சேமிப்பில் இருந்து கிடைத்த தொகையினைக் கொண்டு பிடித்தமான பொருளை வாங்கிக் கொள்ள நினைக்கிறான். இவர்கள் இருவரில் நீ யாராக இருக்க விரும்புகிறாய்? அதற்குரிய காரணங்களைக் கூறு.
நான் காதராக இருக்க விரும்புகிறேன்.
1. பிறருக்கு உதவி செய்வது.
2. துயருற்றோருக்கு ஆறுதல்.
3. பிணியுற்றோருக்கு உதவி
4. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுதல்
5. வருந்தியோருக்கு வாழ்வு
6. சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது போல சின்னச்சின்ன உதவிகள் பெரிய பலன் தரும்.
7. இன்னல்களில் இணைந்திருத்தல்
8. உடனிருத்தல்
போன்ற செயல்களில் கடவுள் நம்மோடு உள்ளார் என்பதால் தான்.
செயல் திட்டம்
‘கல்வி’ என்ற அதிகாரத்தில் இருந்து எவையேனும் ஐந்து ‘திருக்குறள்களைப் படித்து, எழுதி வருக.
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
3. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
4. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
5. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.