சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 2 : நமது நண்பர்கள்
அலகு 2
நமது நண்பர்கள்
கற்றல் நோக்கங்கள்
* நமது நண்பர்கள் பற்றி அறிந்து கொள்ளல்
* அவர்களின் வேலையின் தன்மையைப் பற்றி புரிந்து கொள்ளல்
* சமூக தொழிலாளர்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளல்
சமுத்ரா என்ற ஏழு வயது சிறுமி தனது அம்மா வெண்ணிலாவுடன் மளிகைப்பொருள்கள் வாங்க அங்காடிக்கு செல்கிறாள். அவர்கள் நடந்து செல்லும்பொழுது பல்வேறு வகையான தொழில்கள் செய்பவர்களைக் கடந்து செல்கின்றனர்.
அம்மா வெண்ணிலா: செல்லமே சமுத்ரா நாம் சாலையில் செல்லும்போது இடது புறமாக மட்டுமே செல்ல வேண்டும். நடுவில் செல்லக்கூடாது. நாம் அங்காடியின் உள்ளே செல்லும் பொழுது கூட்டம் அதிகமாக இருக்கும் தனித்து செல்லாதே.
சமுத்ரா: அம்மா! ஏதோ ஒலி கேட்கிறதே! என்ன ஒலி அது? மணியோசையா?
அம்மா: முதலில் ஓரமாக வா. அது தீயணைப்பு வாகனத்தின் ஓசை. ஏதாவது ஒரு இடத்தில் தீப்பிடித்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
சமுத்ரா: அப்படியா!
அம்மா: நடந்து செல்லுபவர்களுக்கான எச்சரிக்கை மணி அது. அப்பொழுதுதான் தீயணைப்பு வாகனத்திற்கு வழி விடுவார்கள்.
சமுத்ரா: எதற்காக வழி விடவேண்டும் அம்மா?
அம்மா: அது மிகவும் அவசரத்தைக் குறிக்கும். பாதிக்கப்பட்ட இடத்திற்கு சரியான நேரத்திற்கு சென்றால்தான் மக்களையும் பொருள்களையும் காப்பாற்ற முடியும்.
சமுத்ரா: தீயணைப்பு வாகனம் எப்படி மனிதர்களைக் காப்பாற்றும்?
அம்மா: உனது ஆர்வத்தைக் கண்டு பெருமைப்படுகிறேன். அவ்வண்டியில் மக்களையும் பொருள்களையும் காப்பாற்றும் தீயணைப்பு வீரர்களுடன், நீர், நுரை, ஏணி மற்றும் சில தீயணைப்பு உபகரணங்கள் இருக்கும். தீவிபத்தைத் தவிர மற்ற அவசரக்காலங்களில் கூட உதவும்.
சமுத்ரா: அம்மா தீயணைப்பு வீரர்கள் பற்றி கூறுங்கள். அவர்கள் தீயைக் கண்டு பயப்படமாட்டார்களா?
அம்மா: தீயணைப்பு வீரர்கள் அதற்கென்று பயிற்சி பெற்று இருப்பார்கள். அவர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்திருப்பார்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் தண்ணீர் கொண்டு அணைப்பார்கள். மக்களையும், பொருள்களையும் பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பார்கள்.
சமுத்ரா: அவர்கள், தீக்காயம் அடைந்தவர்களை எப்படிக் காப்பாற்றுவார்கள்?
அம்மா: அவர்களை உடனடியாக ‘அவசர ஊர்தியில்’ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள். அவசர ஊர்தியில் முதலுதவிக்கான அனைத்து உபகரணங்களும் இருக்கும். பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவர்.
செயல்பாடு
நாம் எழுதுவோம்
செவிலியர் என்பவர் மருத்துவருக்கு உதவியாக இருப்பவர். நோயாளிகளை அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர்.
செவிலியரின் பல்வேறு கடமைகளைப் பற்றி எழுதுக.
காயங்களைத் தைத்தல்.
நோயாளிகளுக்கு ‘ஊசிப் போடுதல்.
நோயாளிகளுக்கு மருந்து வழங்குதல்
நோயாளிகளை பராமரித்தல்
சமுத்ரா: யார் வேண்டுமானாலும் அந்த அவசர ஊர்தியில் செல்லலாமா?
அம்மா: அந்த அவசர ஊர்தியானது அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மட்டும்தான்.
சமுத்ரா: அவசர சிகிச்சையா?
அம்மா: அவசர சிகிச்சை என்பது மிகவும் அபாயக்கட்டத்தில் இருப்பவர்கள். அதாவது நெஞ்சுவலி, மயக்கம், நடக்க இயலாமை, விபத்தில் சிக்கியோர் போன்றவர்களுக்கு அளிப்பது.
சமுத்ரா: அந்த வாகனத்தில் எப்படி சிகிச்சை அளிப்பார்கள்?
அம்மா: அந்த வாகனத்தில் முதலுதவி மட்டும் அளிப்பார்கள்.
சமுத்ரா: முதலுதவியா?
அம்மா: முதலுதவி என்பது முறையான சிகிச்சைக்கு முன் அளிக்கப்படும் உயிர் காக்கும் உதவி. அந்த வாகனத்தில் மருத்துவர், செவிலியர் மற்றும் முதலுதவி உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருக்கும்.
ஒருவர் அவசர ஊர்தி வாகனத்தை எவ்வாறு தொடர்பு கொள்வர்?
❖ விபத்து நடந்த இடத்தைச் சரியான முறையில் 108 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
❖ விபத்தான நபருக்குத் தேவையான முதலுதவி செய்தல் வேண்டும்.
❖ 108 வரும் வரை விபத்தானவருடன் உடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று.
நாம் அறிந்து கொள்வோம்
கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்பவர்களின் சட்டம் (Good Samaritan Law)
கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்பவர்களின் (Good Samaritan Law) சட்டத்தை மத்திய அரசு 2014-இல் உருவாக்கியது. இச்சட்டமானது விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின்படி யார்வேண்டுமானாலும் விபத்தில் சிக்கியவர்களுடன் மருத்துமனைக்குச் செல்லலாம். அவர்களின் பெயரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தெரிவிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. சிகிச்சைக்கான பணம் அளிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. காவல்துறை மற்றும் இதர சட்ட விதிகளுக்குப் பயப்படாமல் எந்த ஒரு மனிதரும் தாமே முன்வந்து உதவி செய்ய இச்சட்டம் உதவுகிறது.
சிந்தனை செய்
அவசர காலத்தில் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
அவசரப் போலீஸ் (காவல்) – 100
தீயணைப்பு நிலையம் – 101
அவசர ஊர்தி (நோயாளி) – 108
சமுத்ரா: என்ன கட்டடம் அது?
அம்மா: அங்காடியை விரிவுபடுத்துவதற்கான கட்டடம் அது.
சமுத்ரா: ஆஹா! எவ்வளவு நீளமாக உள்ளது!
அம்மா: மக்களையும், வியாபாரிகளையும் சூரிய ஒளி மற்றும் மழைப் பொழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக கட்டப்படுகிறது. பொறியாளர் இக்கட்டடத்திற்கான வரைபடத்தையும் வடிவமைப்பினையும் உருவாக்குவார்
சமுத்ரா: வீட்டிற்கான வடிவமைப்பையும் உருவாக்குவாரா?
அம்மா: பொறியாளர் வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், பாலங்கள், கோயில்கள் தொழிற்சாலைகள் மற்றும் உயரமான கட்டடங்கள் போன்றவற்றை வடிவமைக்கிறார்.
சமுத்ரா: ஓ அப்படியா! அம்மா நாம் ஏன் இந்த மண் பாதையில் நடக்கிறோம்? இது நமது வழியல்லவே.
அம்மா: நம் வழக்கமான பாதையில் சாலை தொழிலாளர்கள் சாலை போடுகின்றனர்.
சமுத்ரா: சாலைகள் நமக்காகத்தான் போடப்படுகிறதா?
அம்மா: ஆமாம், சாலைத் தொழிலாளர்கள் வாகனங்கள் மற்றும் மக்கள் வசதியாக செல்ல சாலைகளைப் போடுகின்றனர்.
சமுத்ரா: இப்பக்கம் பார்!
சமுத்ரா: ஏன் அம்மா?
அம்மா: இப்பச்சை வயல்கள் எவ்வளவு அழகாக உள்ளன?
சமுத்ரா: ஆம் அம்மா. மிகவும் அழகாக உள்ளன. அங்கு யார் வேலை செய்கிறார்கள் அம்மா?
அம்மா: அவர்கள் விவசாயிகள். அவர்களால்தான் நாம் உணவு பெற்று உண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.
செயல்பாடு
நாம் எழுதுவோம்
விடைகாண்
1. எனக்கு முன்னே எனது மணியோசை வரும் தீயிலிருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பேன்.
நான் யார் : தீயணைப்பு வாகனம்
குறிப்பு: ப்புயணைதீ வாம்கன
விடை : தீயணைப்பு வாகனம்
2. நான் மக்களை பாதுகாப்பேன். குற்றங்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பேன். மக்கள் விதிகளைப் பின்பற்றுகிறார்களா என உறுதிப்படுத்துவேன்.
நான் யார்.காவல்காரர்
குறிப்பு :ல்காவர்கார
விடை : காவல்காரர்
3. நான் மண்ணில் கடுமையாக உழைப்பேன். விதைப்பேன். ஆதலால் அம்மண் நமக்கு உணவு தரும்
நான் யார்,விவசாயி
குறிப்பு :விசாவபி
விடை : விவசாயி
சமுத்ரா: அம்மா அங்கே பாருங்கள் பேருந்து!
அம்மா: பேருந்து நமது போக்குவரத்துச் சேவைகளில் ஒன்று. தீயணைப்பு வீரர்கள், விவசாயிகள், பொறியாளர்கள் போன்று ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் சேவை மிகவும் மகத்துவமானது. அவர்கள்தான் போக்குவரத்து எளிதாக நடைபெற உதவுகிறார்கள்.
சமுத்ரா: அம்மா ஏதோ ஒரு வித்தியாசமான எச்சரிக்கை ஒலி கேட்கிறதே?
அம்மா: ஆம், அது காவல்துறை வாகனத்தின் எச்சரிக்கை ஒலி.
சமுத்ரா: காவல்துறை வாகனமா ஏன்?
அம்மா: இது காவல்துறையின் வழக்கமான ரோந்து பணி, மக்களைப் பாதுகாக்கவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் வருகிறார்கள். மக்களையும், பொருள்களையும் பாதுகாப்பார்கள். அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என உறுதிப்படுத்துவார்கள்.
சமுத்ரா: அம்மா.
அம்மா: என்ன?
சமுத்ரா: நம் அண்டை வீட்டு அண்ணா, நம் நாட்டு எல்லையில் வேலை செய்கிறார் என்று சொன்னீர்களே.
அம்மா: அவர் இராணுவ வீரராக இந்திய எல்லையில் பணிபுரிகிறார். இராணுவ வீரர்கள் நம் நாட்டையும், மக்களையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றனர். தமது உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் அவர்கள் நமக்காக குடும்பங்களைத் துறந்து பணிபுரிகிறார்கள்.
நாம் அறிந்து கொள்வோம்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கினார்.
சமுத்ரா: எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது. எங்களின் ஆசிரியர் நேற்று இராணுவப் படையைப் பற்றிக் கூறினார்.
அம்மா: சமுத்ரா உனக்குத் தெரியுமா? ஆசிரியர்களின் பணி மிகவும் புனிதமானது. அவர்கள் மாணவர்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் போதித்து சிறந்த குடிமக்களாகத் திகழ உதவி புரிகிறார்கள்.
செயல்பாடு
நான் யார்?
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. நான் துணிகளைத் தைப்பவள்
(தையல்காரர்)
நான் ஒரு தையல்காரி
2. நான் சுவரில் வண்ணம் தீட்டுபவன்
நான் ஒரு வண்ணம் பூசுபவர்
(வண்ணம் தீட்டுபவர்)
3. நான் குழாய்களை பழுது பார்ப்பவன்
நான் ஒரு பொதுப்பணித்துறை வேலையாள்.
(குழாய் செப்பனிடுபவர்)
4. நான் வீடுகளையும் மக்களையும் காப்பவன்
நான் ஒரு காவலாளி
(காவலாளி)
5. நான் மின் சாதனங்களைப் பழுதுபார்ப்பவன்
நான் ஒரு மின் பொறியாளர்.
(மின் அமைவு செப்பனிடுபவர்)
சமுத்ரா: அம்மா சாலையின் நடுவே நிற்பது யார்?
அம்மா: ஓ அவர்தான் போக்குவரத்துக் காவலர்.
சமுத்ரா: ஏன் அவர் அங்கு நிற்கிறார்?
அம்மா: அவரின் பணி மிகவும் முக்கியமானது. அவர்தான் வாகனங்களைக் கட்டுப்படுத்தி சரியான திசையில் செல்லுமாறு அறிவுறுத்துவார். நடந்து செல்பவர்களைப் பாதுகாப்பார்.
சமுத்ரா: அம்மா அந்த உயரமான கட்டடம் என்ன கட்டடம் அம்மா?
அம்மா: அதுதான் நீதிமன்றம்.
சமுத்ரா: நீதிமன்றம் என்றால் என்ன?
அம்மா: அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் சட்டப்படி தீர்வுகாணும் இடமாகும். நீதிபதி மக்களுக்குச் சரியான தீர்ப்பு வழங்குவார். நமது உரிமைகளைப் பாதுகாப்பார்.
சமுத்ரா: அம்மா எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது. இத்தனை மனிதர்களும் நமக்காக பணிபுரிகிறார்கள். எனக்கு இவர்களை நினைத்துப் பெருமையாக உள்ளது.
நாம் அறிந்து கொள்வோம்.
உச்சநீதிமன்றம் நமது அரசியல் அமைப்பின் பாதுகாவலன்.
அம்மா: சமுத்ரா, நீ என்னவாக விரும்புகிறாய்?
சமுத்ரா: எனக்கும் ஒரு ஆசை உள்ளது. நான் நன்றாக படித்து நல்ல வேலையைத் தேடவேண்டும். அதே நேரத்தில் நான் நமது தோட்டத்தையும் வயலையும் பராமரிப்பேன்.
அம்மா: நாம் வீட்டிற்கு வந்துவிட்டோம், செல்லம் கதவைத் திற.
மீள்பார்வை
* நமது நண்பர்களாகிய ஆசிரியர், மருத்துவர், பொறியாளர், காவல்காரர் போன்றோர் நமக்காகப் பணிபுரிகின்றனர்.
* தீயணைப்பு வீரர்கள் மக்களையும், உடைமைகளையும் தீயிலிருந்து காப்பாற்றுகின்றனர்.
* ஒரு பொறியாளர் கட்டடத்திற்கு வடிவமைப்பினைத் தருகிறார்.
* சாலைப்பணியாளர்களால் சாலைகள் போடப்படுகின்றன.
* விவசாயிகளிடமிருந்து நாம் உணவைப் பெறுகிறோம்.
* இராணுவ வீரர்கள் நமது நாட்டைப் பாதுகாக்கின்றனர்.
* நமக்காகவும் நமது நாட்டிற்காகவும் சேவை செய்யும் மக்களை எண்ணி பெருமை கொள்வோம்.
மதிப்பீடு
I. அடைப்பு குறியிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
(சாலை, நீதிபதி, முதலுதவி, ஆசிரியர், மருத்துவர்)
1. முறையான சிகிச்சைக்கு முன் அளிப்பது __________.
விடை: முதலுதவி
2. செவிலியர் __________ க்கு உதவி புரிவார்.
விடை: மருத்துவர்
3. மக்கள் வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லுபவர் __________
விடை: நீதிபதி
4. நமக்கு அறிவை மேம்படுத்துபவர் __________
விடை: ஆசிரியர்
5. சாலைப்பணியாளர்கள் __________ போடுகின்றனர்.
விடை: சாலை
II. சரியா / தவறா என்று எழுது.
1. தையல்காரர் என்பவர் துணி தைப்பவர். (✓)
2. மின்பழுது செய்பவர் குழாய்களை சரிசெய்வார். ( x )
3. போக்குவரத்து காவல்காரர்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்துவார். (✓)
4. மருத்துவர் மக்களையும் உடமைகளையும் காப்பாற்றுவார். ( x )
5. உச்சநீதிமன்றம் நமது அரசியல் அமைப்பின் பாதுகாவலன். (✓)
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி:
1. நமக்கு சேவை புரிபவர்கள் சிலரைக் குறிப்பிடு.
ஆசிரியர், மருத்துவர், பொறியாளர், காவல்காரர் போன்றோர் நமக்கு சேவை புரிபவர்கள்
2. தீயணைப்பு வீரர்கள் என்பவர் யார்?
மக்களையும், உடைமைகளையும் தீயிலிருந்து பாதுகாக்கின்றனர்.
3. ஒரு பொறியாளரின் பணி யாது?
கட்டிடம், கட்டுவதற்கு சரியான வடிவமைப்பை செய்கின்றனர்.
4. விவசாயிகள் பற்றி எழுது.
விவசாயிகள் நமது உணவு தானியங்களை பயிரிடுகின்றனர்.
5. இராணுவ வீரர்கள் நமது நாட்டை எவ்வாறு பாதுகாப்பார்கள்?
இராணுவ வீரர்கள் நமது நாட்டையும் மக்களையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றனர்.
செயல்பாடு நாம் எழுதுவோம்
செவிலியர் என்பவர் மருத்துவருக்கு உதவியாக இருப்பர். நோயாளிகளை அக்கறையுடன் கவனித்து கொள்வர்.
ஒருவர் அவசர ஊர்தி வாகனத்தை எவ்வாறு தொடர்பு கொள்வர்?
❖ விபத்து நடந்த இடத்தைச் சரியான முறையில் 108 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
❖ விபத்தான நபருக்குத் தேவையான முதலுதவி செய்தல் வேண்டும்.
❖ 108 வரும் வரை விபத்தானவருடன் உடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று.
சிந்தனை செய்
அவசரத் தேவைகளுக்கு கீழ்க்காணும் தொலைபேசி எண்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அவசரப் போலீஸ் (காவல்) – 100
தீயணைப்பு நிலையம் – 101
அவசர ஊர்தி (நோயாளி) – 108
செயல்பாடு நாம் எழுதுவோம்
விடை காண்:
1. எனக்கு முன்னே எனது மணியோசை வரும். தீயிலிருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பேன்
நான் யார்? – ப்புயணைதீ வாம்கன
விடை: தீயணைப்பு வாகனம்
2. நான் மக்களை பாதுகாப்பேன். குற்றங்களிலிருந்து சமூகத்தை பாதுகாப்பேன். மக்கள் விதிகளை பின்பற்றுகிறார்களா என உறுதிப்படுத்துவேன்.
நான் யார் – ல்காவர்கார
விடை: காவல்காரர்
3. நான் மண்ணில் கடுமையாக உழைப்பேன். விதைப்பேன். ஆதலால் அம்மண் நமக்கு உணவு தரும். நான் யார்? – விசாவயி
விடை: விவசாயி
செயல்பாடு
நான் யார்?
கோடிட்ட இடங்களை நிரப்புக.
நான் துணிகளைத் தைப்பவள்
நான் ஒரு தையல்காரி
நான் சுவற்றிற்கு வண்ணம் தீட்டுபவன்
நான் ஒரு வண்ணம் பூசுபவர்
நான் குழாய்களை பழுது பார்ப்பவன்
நான் ஒரு பொதுப்பணித்துறை வேலையாள்.
நான் வீடுகளையும் மக்களையும் காப்பவன்
நான் ஒரு காவலாளி
நான் மின் சாதனங்களைப் பழுதுபார்ப்பவன்
நான் ஒரு மின் பொறியாளர்.
செயல்பாடு
செயல்திட்டம்
சமூக பணியாளர்களுடன் அவர்களின் உபகரணங்களை பொருத்தி, அவர்களின் பணியை எழுதுக.