சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 4 : பகலும் இரவும்
அலகு 4
பகலும் இரவும்
கற்றல் நோக்கங்கள்
கற்போர்
❖ பகலுக்கும் இரவுக்கும் இடையேயான வேறுபாட்டை அறிதல்
❖ சூரியன்,நிலா, நட்சத்திரம், மின்னல், இடி போன்றவற்றை விவரித்தல்
பகல்
அம்மா : கண்மணி, கண்ணன் எழுந்திருங்கள் வானத்தில் சூரிய உதயம் எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்களேன்!
கண்ணன் மற்றும் கண்மணி : “ ஆம் அம்மா”.
அவர்கள் என்ன பார்த்தார்கள் என்பதை நீங்கள் படத்தைப் பார்த்துக் கூறுகிறீர்களா?
சூரியன் ஒரு நட்சத்திரம். சூரியனிடமிருந்து ஒளியும் வெப்பமும் நமக்குக் கிடைக்கிறது. பூமியில் சூரிய ஒளி இல்லாமல் எந்த உயிரினங்களும் வாழ இயலாது.
உங்களுக்குத் தெரியுமா
சூரியகாந்தியின் மொட்டுகள் சூரியனை நோக்கி தரும்
சூரிய உதயத்திற்கு சற்றுமுன் உள்ள அதிகாலை நேரமே விடியல். இந்த நேரத்தில் விழிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
சொற்களஞ்சியம்
சூரியன், பூமி, ஒளி, வெப்பம், விடியல், காலை, நண்பகல், பிற்பகல், மாலை, அந்திப்பொழுது வானம், பகல்
விடியலைத் தொடர்ந்து வருவது காலை. காலை வேளையில் பல் துலக்கி, குளித்து, சாப்பிட்டபின் பள்ளிக்கு கிளம்ப வேண்டும்.
மதிய உணவு உண்ணும் வேளை நண்பகல். அதைத் தொடர்ந்து வரும் நேரம் பிற்பகல்.
சூரியன் மறையும் நேரமே மாலை நேரம். அந்நேரத்தில் குழந்தைகள் விளையாடுவர்.
மாலை நேரச் செயல்பாடுகள்
பறவைகள் கூட்டிற்கு திரும்புதல்
பசுக்கள் கொட்டகைக்குத் திரும்புதல்
குழந்தைகள் வெளியில் விளையாடுதல்
சூரியன் மறைந்து இரவு துவங்குவதற்கு முன் உள்ள நேரமே அந்திப்பொழுது. விடியலுக்கும் சூரிய உதயத்திற்கும் இடைப்பட்ட நேரத்தையும் கூட அந்திப்பொழுது என்கிறோம்.
இரவு நேரம் என்பது தூங்கும் நேரம்.
காலைச் செயல்பாடுகளுக்கு “கா” எனவும் மாலைச் செயல்பாடுகளுக்கு “மா” எனவும் எழுதுவோமா!
இரவு
அம்மா: இது அழகிய குளிர்ந்த இரவு நேரம்.
இந்த நேரத்தில் வெளியில் அமர்ந்து நிலவொளியில் இரவு உணவை உண்போமா!
சொற்களஞ்சியம்
நிலா (சந்திரன்), விண்மீன் (நட்சத்திரம்), குளிர்ச்சி, இரவு
கண்ணன்: சூரியனைப் போல் நிலா வெளிச்சமாக இல்லையே ஏன் அம்மா?
கண்மணி: ஏன் என்று எனக்குத் தெரியும். சூரியனைப் போல் நிலவிற்கு சுய ஒளி (வெளிச்சம்) இல்லை. அது சூரியனிடமிருந்து தான் ஒளியைப் பெறுகிறது. நிலாவிற்கு சந்திரன் என்ற பெயரும் உண்டு.
கண்ணன்: அங்கே பார். வானத்தில் நிறைய நட்சத்திரங்கள் (விண்மீன்) தெரிகின்றன. விண்மீனிற்கு சுய ஒளி உள்ளதால் இரவில் மின்னுகிறது. இது அளவில் பெரியதாக இருந்தாலும் வெகு தொலைவில் இருப்பதால் சிறியதாகத் தெரிகிறது.
உங்களுக்குத் தெரயுமா
ஆந்தை மற்றும் வௌவால் இரவில் செயல்படும் விலங்குகள்.
அம்மா : வாருங்கள் நேரமாகிறது அனைவரும் சென்று தூங்கலாம். நேரத்தோடு தூங்கி எழுவது நல்ல பழக்கம்.
பொருந்தாதைக் கண்டுபிடித்து.( ✔) குறியிடுவோமா!;
மழை, இடி, மின்னல்
சொற்களஞ்சியம்
மழை, மழை மேகங்கள், மின்னல், இடி, வானவில்
கண்ணனுக்கும் கண்மணிக்கும் வானத்தைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.
கண்மணி: இன்று வானம் முழுவதும் மழை மேகங்களாகத் தெரிகிறதே!
கண்ணன்: மழை வர ஆரம்பிக்கிறது.
இருவரும் திடீரென வானத்தில் தோன்றிய வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதைத் தொடர்து வந்த பெருத்த சத்தத்தையும் கேட்டு, அது என்ன அம்மா? என்றனர்.
அம்மா : அதுவா! இடி மற்றும் மின்னல் இவை. இரண்டும் மழைக்காலத்தில் தோன்றும்.
மழை நின்ற சிறிது நேரத்திற்குப் பின் கண்ணன், கண்மணி இருவரும் அழகான வானவில்லைக் கண்டனர்.
இடி மற்றும் மின்னலின் போது,
❖ மரங்கள், மின் கம்பிகளின் கீழே நிற்கக் கூடாது.
❖ அறுந்து தொங்கும் மின் கம்பிகளைத் தொடக்கூடாது.
❖ ‘மின் செருகிகளைத் தொடக்கூடாது.
மழையின் போது செய்யக்கூடாத செயல்களை (X) குறியிட்டுக் காட்டுக.
மதிப்பீடு
1. சரியா, தவறா? சரி எனில் “ச” எனவும், தவறு எனில் “த” எனவும் எழுதுக.
அ. சூரியன் ஒரு நட்சத்திரம். [ச]
ஆ. நிலா தன் சுய ஒளியால் ஒளிர்கிறது. [த]
இ. நட்சத்திரங்களை எண்ண முடியும். [த]
ஈ.. மழைநாளில் வானவில்லைக் காணலாம். [ச]
உ. சூரியன் ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது. [ச]
2. பகல், இரவிற்குத் தொடர்புடைய படங்களைக் கோடிட்டு இணைக்க.
3. கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைக் கண்டுபிடித்து வட்டமிடுக.
(ஒளி,நட்சத்திரம், பகல், நிலா, இரவு,சூரியன்)
தன் மதிப்பீடு
❖ என்னால் பகலுக்கும் இரவுக்கும் இடையேயான வேறுபாட்டை அறிய முடியும்.
❖ என்னால் சூரியன், நிலா, நட்சத்திரம், மின்னல், இடி போன்றவற்றை விவரிக்க முடியும்.