Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 4

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 4

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு

துணைப்பாடம்: உண்மை ஒளி

நுழையும்முன்

உலக மக்கள் அனைவரையும் உடன்பிறந்தவராகக் கருதுவதே உயர்ந்த மனிதப்பண்பு ஆகும். அப்பண்பைப் பெறுவதே சிறந்த அறிவாகும். அத்தகைய அறிவுடைய சான்றோர்கள் துன்பப்படும் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவியைச் செய்வார்கள். அவ்வாறு உதவும்போது தமக்கு இழப்பு ஏற்படினும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். இக்கருத்துகளை விளக்கும் ஜென் கதை ஒன்றைப் படக்கதையாகக் காண்போம்!

ஜென் குரு ஒருவர் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தைகளே! உண்மையான ஒளி எது என்பதைப் பற்றி இன்று அறிந்து கொள்ளப் போகிறோம்.

அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் ஐயா!

பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிரும் ஒன்றே . பசி, தாகம், தூக்கம் ஆகியவை எல்லா உயிர்களுக்கும் உண்டு

மேலும் இரவும் பகலும் மாறி மாறி வருவது போல வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இப்பொழுது உங்களை ஒரு கேள்வி கேட்கட்டுமா?

இருள் கலைந்து, வெளிச்சம் வந்துவிட்டது என்பதை எந்த நொடியில் நீங்கள் அறிவீர்கள்?

தொலைவில் நிற்கும் விலங்கு குதிரையா? கழுதையா? என்பதை அடையாளம் காணக்கூடிய நொடியில் வெளிச்சம் வந்துவிட்டதை நான் அறிவேன் ஐயா.

இல்லை . வேறு யாராவது கூறுங்கள் பார்ப்போம்.

தூரத்திலிருக்கும் மரம் ஆலமரமா? அரசமரமா? என்பதை அடையாளம் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்துவிட்டது என்பதை அறியலாம். சரிதானே ஐயா?

இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா?

எங்களுக்குத் தெரியவில்லை ஐயா. தாங்களே கூறி விடுங்கள்.

ஒரு மனிதரைக் காணும்போது இவர் என் உடன்பிறந்தவர் என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதுதான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள்.

இரவும் பகலும் வெறும் காலவேறுபாடுகள்தான். உண்மையான ஒளி உள்ளத்தின் உள்ளே ஏற்பட வேண்டியது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் ஐயா.

உள்ளுக்குள் ஒளி இல்லையென்றால் உச்சி வெயில்கூடக் காரிருளே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மீண்டும் நாளை சந்திப்போம்.

வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து செல்கின்றனர்.

குரு அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்படுகிறார். 

இருட்டுவதற்குள் ஊரை அடைய வேண்டும்.

வழியில்…..

ஆ! யாரது சாலையோரம் படுத்துக்கிடப்பது!

குதிரையை நிறுத்தி, கீழே இறங்கிய குரு அந்த மனிதனை எழுப்புகிறார்.

குழந்தாய்! எழுந்திரு. நீ யார்? ஏன் இங்கே படுத்திருக்கிறாய்?

இவன் மயக்கம் அடைந்திருக்கிறான்.

படுத்திருப்பவருக்கு நீரைப் பருகத் தருகிறார்.

குழந்தாய்! எழுந்திரு. இந்த நீரைக் கொஞ்சம் குடி.

மயக்கமடைந்தவர் எழுந்து உட்காருகிறார்.

பசியால் மயங்கி விழுந்து விட்டேன் ஐயா. நான் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டும்.

அப்படியா! சரி என்னிடம் குதிரையிருக்கிறது. நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்.

குரு, அவனைத் தன் குதிரையின்மீது உட்காரவைக்கிறார்.

மெதுவாக ஏறுப்பா! பார்த்து உட்கார்.

குதிரையில் ஏறிய அவன் குதிரையை அடித்து விரட்டத் தொடங்குகிறான்.

ஆ! என்ன இது? ஓ! இவன் திருடன் போல இருக்கிறது. என் குதிரையைத் திருடவே இப்படி நடித்திருக்கிறான்.

(குரு ஏமாற்றத்துடன் நடந்து ஊரை அடைகிறார்.)

இங்கு எப்படியாவது ஒரு குதிரையை வாங்கிக் கொண்டுதான் ஊருக்குத் திரும்ப வேண்டும்.

குரு குதிரைச் சந்தைக்குச் செல்கிறார்

ஆ! அதோ அங்கு நிற்பது என்னுடைய குதிரையைப் போல் உள்ளதே!

குருவிடம் குதிரையைத் திருடியவன் அங்கு நிற்கிறான். குரு அவன் தோளைத் தொடுகிறார்.

குழந்தாய்!

ஆ! நீங்களா?

குரு மெல்லச் சிரிக்கிறார்.

யாரிடமும் சொல்லாதே!

எதை? ஏன்?

குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால், இது உனக்கு எப்படிக் கிடைத்தது என்று யாரிடமும் சொல்லாதே.

இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.

நீ நினைப்பது எனக்குப் புரிகிறது குழந்தாய்! ஆனால், நான் ஏமாந்து போனது தெரிந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட அவர்களுக்கு யாரும் உதவ முன்வர மாட்டார்கள். புரிகிறதா? குறுகிய தன்னலத்துக்காக நல்ல கோட்பாடுகளை அழித்து விடக்கூடாது. இதை நீ தெரிந்துகொள்.

குருவின் பெருந்தன்மையை உணர்ந்த அவன் வெட்கித் தலைகுனிகிறான்.

நூல் வெளி 

ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருள். புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள். இவர்கள் பெரும்பாலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தமது சிந்தனைகளைச் சிறு நிகழ்ச்சிகள், எளிய கதைகள் ஆகியவற்றின் மூலம் விளக்கினர்.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

‘உண்மை ஒளி’ படக்கதையைக் கதையாகச் சுருக்கி எழுதுக. 

முன்னுரை :

சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த துறவிகள் ஜென் துறவிகள். அவர்களின் சிந்தனைக் கதையே ஜென் கதைகள். அக்கதைகளுள் ஒன்று ‘உண்மை ஒளி.’ 

குருவும் சீடர்களும் :

ஜென் குருவிடம் சிலர் பாடக் கற்றுக் கொண்டு இருந்தனர். ஒரு நாள் உண்மை ஒளி எது? என்பதைப் பற்றிப் பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். பசி, தாகம், தூக்கம் ஆகியவை அனைத்து உயிர்களுக்கும் ஒன்றே. இரவு பகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்று குரு சொல்லிக் கொடுத்தார். பிறகு சீடர்களிடம், ”இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது” என்று எப்படி அறிவீர்கள்? என்றார். 

உண்மை ஒளி :

அதற்கு சீடன் ஒருவன், “தொலைவில் தெரிவது குதிரையா? கழுதையா? என்பதைக் காணக்கூடிய அளவு வெளிச்சம் நான் அறிவேன்” என்றான். மற்றொருவன், “தொலைவில் தெரிவது ஆலமரமா? அரசமரமா? என்பதைக் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்ததை நான் அறிவேன்” என்றான். இவை எல்லாம் தவறு என்றார் குரு. ஒரு மனிதரைக் காணும் போது என் உடன் பிறந்தவர் என்று எப்போது உணர்கிறீர்களோ, அப்போது தான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள் என்றார் குரு. 

குருவை ஏமாற்றிய திருடன் :

ஒரு நாள் குரு குதிரையில் அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்பட்டுச் செல்கின்றார். சாலையோரத்தில. ஒருவன் மயங்கிக் கிடந்தான். குரு அவனிடம் தண்ணீர் கொடுத்து’ நீ யார்?’ என்று கேட்க, அவன் ‘பக்கத்து ஊர் செல்ல வேண்டும். பசியால் மயங்கி விழுந்துவிட்டேன்.’ என்றான். குரு இரக்கம் கொண்டு அவனை குதிரை மீது அமரச்செய்தார். குதிரையை அடித்து அவன் வேகமாகச் சென்று விட்டான். அவன் திருடன் என்பதையும், தான் ஏமாற்றப்பட்டதையும் அறிந்தார். 

திருடனுக்கு அறிவுரை :

குதிரை வாங்க குரு குதிரைச் சந்தைக்குச் சென்றார். அங்கு அந்தத் திருடன் குதிரையை விற்றுக் கொண்டிருந்தார். குரு யாரிடமும் எதையும் சொல்லாதே! என்றார். அதற்கு திருடன், இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கின்றாரோ? என்று மனதில் நினைத்தான். அதற்கு குரு, நான் ஏமாந்து போனது தெரிந்தால் உண்மையில் சாலையில் மயக்கம் அடைந்து யார் கிடந்தாலும் அவருக்கு யாரும் உதவ மாட்டர்கள் என்றார்.குருவின் பெருமையை நினைத்து தலைகுனிந்தான் திருடன்.

முடிவுரை :

ஒருவரை ஏமாற்றுவது மற்றவர்களுக்குச் செய்யும் உதவியைக்கூட தடுக்கும் என்பதை இக்கதை மூலம் அறியமுடிகின்றது.

கற்பவை கற்றபின்

1. ஜென் கதைகளில் வேறு சிலவற்றை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.

மன நிறைவு 

ஓர் ஊரில் செல்வன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் அளவுக்கதிகமாகச் செல்வம் இருந்தது. வேலையாட்கள் நிறைய பேர் இருந்தனர்.ஆனால் அவனால் மனம் நிறைவுடன்வாழ முடியவில்லை . ஒரு நாள் அந்த ஊருக்கு ஜென் துறவி ஒருவர் வந்தார். அவரிடம் செல்வந்தன் தனக்கு மனநிறைவுக்கு வழி சொல்ல வேண்டினான். துறவி மூன்று கல்லைச் செல்வந்தனைத் தூக்கத் செய்து மலை மீது அவனால் ஏறமுடியவில்லை. மிகவும் கனமாக உள்ளது, என்னால் தூக்க முடியவில்லை என்றான். துறவி ஒருகல்லைத் தூக்கிப் போடச் சொன்னார். இதே போலவே ஒவ்வொரு முறையும் கூற ஒவ்வொரு கல்லாய் தூக்கிப் போடச் சொன்னார். இறுதியில் துறவி இப்போது பாரம் குறைந்ததா? என்றார். செல்வந்தரும் ,ஆம்! என்றார். உன்னிடம் உள்ள அளவில்லாத செல்வம்தான் பாரம். அதனை ஏழைகளுக்கு கொடுத்துவிட பாரம் குறைந்து உன்மனம் நிறைவடையும் என்றார். அவனும் அப்படியே செய்து மன நிறைவு அடைந்தேன்.

2. ‘உண்மை ஒளி’ படக்கதையைக் நாடகமாக நடித்துக் காட்டுக.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *