Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 5

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 5

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல்

இலக்கணம்: ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

ஓரெழுத்து ஒருமொழி

ஈ, பூ, கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள்.

இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு. இவ்வாறு ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.

நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.

தெரிந்து தெளிவோம் 

ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்

1. ஆ- பசு 2. ஈ- கொடு 3. ஊ- இறைச்சி 4. ஏ- அம்பு 5. ஐ- தலைவன் 6. ஓ – மதகுநீர் தாங்கும் பலகை 7. கா- சோலை 8. கூ- பூமி  9. கை- ஒழுக்கம் 10. கோ-அரசன் 11. சா- இறந்துபோ 12. சீ- இகழ்ச்சி 13. சே- உயர்வு 14. சோ- மதில்   15. தா – கொடு 16. தீ- நெருப்பு 17. தூ- தூய்மை 18. தே- கடவுள் 19. தை- தைத்தல் 20. நா- நாவு 21. நீ- முன்னிலை ஒருமை 22. நே- அன்பு  23. நை- இழிவு 24. நோ வறுமை 25. பா- பாடல் 26. பூ- மலர் 27. பே – மேகம் 28. பை- இளமை 29. போ- செல் 30. மா- மாமரம் 31. மீ- வான் 32. மூ – மூப்பு 33. மே- அன்பு 34. மை- அஞ்சனம் 35. மோ- மோத்தல் 36. யா- அகலம்  37. வா- அழைத்தல் 38. வீ- மலர் 39. வை- புல் 40. வௌ – கவர் 41. நொ- நோய் 42 . து- உண்.

பகுபதம்

வேலன், படித்தான் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.

வேலன் என்னும் சொல்லை வேல் + அன் எனப் பிரிக்கலாம்.

படித்தான் என்னும் சொல்லை படி + த் + த் + ஆன் எனப்பிரிக்கலாம்.

இவ்வாறு சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர். பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர்.

பெயர்ப்பகுபதம்

பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும். இதனை, பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படுத்துவர். 

(எ.கா.) 

1. பொருள் – பொன்னன் (பொன் + அன்)

2. இடம் – நாடன் (நாடு + அன்)

3. காலம் – சித்திரையான் (சித்திரை + ஆன்) 

4. சினை – கண்ணன் (கண் + அன்) 

5. பண்பு – இனியன் (இனிமை + அன்) 

6. தொழில் – உழவன் (உழவு + அன்)

வினைப்பகுபதம்

பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும். 

(எ.கா.) உண்கின்றான் – உண் + கின்று + ஆன்

பகுபத உறுப்புகள்

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியவையாகும்.

❖ பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும்.  வினை பகுபதத்தின் பகுதி கட்டளையாகவே அமையும்.

❖ பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும். 

❖ பகுதிக்கும் விகுதிக்கும்  இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும். 

❖ பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும். 

❖ பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும். 

❖ பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும். 

(எ.கா.) வந்தனன் – வா(வ) + த்(ந்) + த் + அன் + அன் 

வா – பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்

த் – சந்தி. இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்

த் – இறந்தகால இடைநிலை 

அன் –  சாரியை 

அன் –  ஆண்பால் வினைமுற்று விகுதி.

பகாப்பதம்

மரம், கழனி, உண், எழுது ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவற்றை மேலும் சிறிய உறுப்புகளாகப் பிரிக்க முடியாதல்லவா? இவ்வாறு பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும். இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.

பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு.

(எ.கா.) பெயர்ப் பகாப்பதம்   – நிலம், நீர், நெருப்பு, காற்று.

வினைப் பகாப்பதம் – நட, வா, படி, வாழ். 

இடைப் பகாப்பதம்  – மன், கொல், தில், போல்.

உரிப் பகாப்பதம் – உறு, தவ, நனி, கழி.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா –

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ________

அ) 40

ஆ) 42 

இ) 44 

ஈ) 46 

[விடை : ஆ. 42]

2. ‘எழுதினான்’ என்பது ________

அ) பெயர்ப் பகுபதம்

ஆ) வினைப்பகுபதம் 

இ) பெயர்ப் பகாப்பதம்

ஈ) வினைப் பகாப்பதம் 

[விடை : ஆ. வினைப்பகுபதம்] 

3. பெயர்ப் பகுபதம் ________ வகைப்படும். 

அ) நான்கு 

ஆ) ஐந்து 

இ) ஆறு 

ஈ) ஏழு 

[விடை : இ. ஆறு]

4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு 

அ) பகுதி

ஆ) விகுதி 

இ) இடைநிலை 

ஈ) சந்தி 

[விடை : இ. இடைநிலை]

பொருத்துக 

வினா : 

1. பெயர்ப் பகுபதம் – வாழ்ந்தான் 

2. வினைப்பகுபதம் – மன் 

3. பெயர்ப் பகாப்பதம் – நனி 

4. வினைப் பகாப்பதம் – பெரியார்

விடை : 

1. பெயர்ப் பகுபதம் – பெரியார் 

2. வினைப்பகுபதம் – வாழ்ந்தான் 

3. இடைப் பகாப்பதம் – மன் 

4. உரிப் பகாப்பதம் – நனி

சரியான பகுபத உறுப்பை எழுதுக.

போவாள் – போ + வ் + ஆள் 

போ – பகுதி

வ் – எதிர்கால இடைநிலை 

ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி 

நடக்கின்றான் – நட + க் + கின்று + ஆன் 

நட – பகுதி 

க் – சந்தி 

கின்று – நிகழ்கால இடைநிலை

ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

பின்வரும் சொற்களைப் பிரித்துப் பகுபத உறுப்புகளை எழுதுக.

பார்த்தான் – பார் + த் + த் +ஆன்

பார் – பகுதி

த் – சந்தி

த் – இறந்தகால இடைநிலை 

ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி 

பாடுவார் – பாடு + வ் + ஆர் 

பாடு – பகுதி 

வ் – எதிர்கால இடைநிலை 

ஆர் – ஆண்பால் வினைமுற்று விகுதி 

குறு வினா 

1. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?

ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒருமொழி ஆகும். எ.கா. பூ 

2. பதத்தின் இருவகைகள் யாவை?

பகுபதம், பகாப்பதம் என பதம் இருவகைப்படும். 

3. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவையாவன: பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

சிறு வினா

1. விகுதி எவற்றைக் காட்டும்?

❖ திணை 

❖ பால் 

❖ முற்று 

❖ எச்சம் 

2. விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும். 

(எ.கா.) வந்தனன் – வா(வ) + த்(ந்) + த் + அன் + அன் 

வா – பகுதி, இது ‘வ’ எனக் குறுகி இருப்பது விகாரம்.

த் – சந்தி, இது ‘ந்’ எனத் திரிந்து இருப்பது விகாரம். 

த் – இறந்தகால இடைநிலை 

அன் – சாரியை

அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி 

3. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? 

பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும். அவையாவன: 

1. பெயர் பெயர்ப்பகுபதம் 

2. இடப் பெயர்ப்பகுபதம் 

3. காலப் பெயர்ப்பகுபதம் 

4. சினைப் பெயர்ப்பகுபதம் 

5. பண்புப் பெயர்ப்பகுபதம் 

6. தொழில் பெயர்ப்பகுபதம்

கற்பவை கற்றபின்

1. பாடப்பகுதியில் இடம் பெற்ற சொற்களில் பகுபதம் பகாப்பதம் ஆகியவற்றைத் தனித்தனியே தொகுக்க. 

பகுபதம்

சிந்தித்தார், படைத்தார், குளிர்ந்த, வந்தது, இரக்கத்தை, எழுதுங்கள், எழுதியுள்ளார்.

பகாப்பதம் 

வானம், காட, ஓடு, தென்றல், மயில், ஏடு, தாமரை, வீரம், வேல்

2. உங்கள் வகுப்பு மாணவ – மாணவிகளின் பெயர்களைப் பகுபதம், பகாப்பதம் என வகைப்படுத்துக. 

பகுபதம்

1. கருப்பண்ணன்

2. கண்ணன்

3. எழிலன்

4. பூவழகன்

5. மலரவன்

பகாப்பதம் 

1. கலை 

2. ராணி 

3. கலா 

4. மலர் 

5. நகுல் 

6. செந்தில்

மொழியை ஆழ்வோம்

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடங்கள் பேசுக.

கல்வியின் சிறப்பு 

வணக்கம். கல்வியின் சிறப்பு பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். இளமையில் கல், கேடில் விழுச்செல்வம் கல்வி, கல்விக் கரையில, கற்பவர் நாள் சில, கற்க கசடற, ஓதுவது ஒழியேல் ஆகியன கல்வியின் அவசியத்தைக் கூறும் பாடல் வரிகளாகும். மனிதனை வேறுபடுத்துவது அவன் கற்ற கல்வியால் தான். பொருளை இழந்தால் சம்பாதிக்கலாம். ஆனால் கல்வியை இழந்தால் மீண்டும் கற்க இயலாது. அதனால் தான் பருவத்தே பயிர் செய் என்றனர். கல்வி ஓர் ஒளிவிளக்கு. இருக்கும் இடத்தை ஒளிமயம் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால், அப்படிப் பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி. கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு. விளக்கில்லாத வீட்டில் யார் குடியிருப்பார்கள்? வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள். கல்வியின் அவசியத்தை உணர்ந்து கற்க வேண்டும் .நன்றி.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு 

வணக்கம். குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு பற்றி என்னுடைய கருத்துகளை சில நிமிடங்கள் பேசுகின்றேன். ஓடி விளையாட வேண்டிய பருவத்தில் வேலைக்குச் செல்வதைக் கண்டால் மனம் வேதனை அடைகின்றது. இளமையில் கல் என்ற ஔவையின் வாக்கு என்னவானது. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் குழந்தைகளுக்குச் சிறுவயதில் இரத்தசோகை, இளைப்பு, காச நோய் ஆகியன ஏற்படும். படிக்கும் வயதில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கலாம். எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி என்பது வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடை முறையில் செயல்படுத்த நாம் போராட வேண்டும். நன்றி.

சொல்லக் கேட்டு எழுதுக.

1. இளமைப் பருவத்திலேயே கல்வி கற்க வேண்டும். 

2. கல்வியே அழியாத செல்வம். 

3. கல்வி இல்லாத நாடு விளக்கு இல்லாத வீடு. 

4. பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம். 

5. நூல்களை ஆராய்ந்து ஆழ்ந்து படிக்க வேண்டும்.

கீழ்க்காணும் சொற்களை அறுவகைப் பெயர்களை வகைப்படுத்துக.

நல்லூர், வடை, கேட்டல், முகம், அன்னம், செம்மை, காலை, வருதல், தோகை, பாரதிதாசன், பள்ளி, இறக்கை, பெரியது, சோலை, ஐந்து மணி, விளையாட்டு, புதன்.

பொருள் 

வடை 

அன்னம் 

பாரதிதாசன் 

இடம்

நல்லூர்

பள்ளி

சோலை

காலம்

காலை

புதன்

ஐந்து மணி

சினை

முகம்

தோகை

இறக்கை

குணம்

செம்மை

பெரியது

தொழில்

கேட்டல்

வருதல்

விளையாட்டு

அறிந்து பயன்படுத்துவோம்

மூவிடம் 

இடம் 3 வகைப்படும். அவை. 

1. தன்மை 

2. முன்னிலை 

3. படர்க்கை 

1. தன்னைக் குறிப்பது தன்மை. 

சான்று : நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.

2. முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை. 

சான்று : நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள். 

3. தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது படர்க்கை. 

சான்று : அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இவை.

சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

(அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், என், உன்) 

1. உன் பெயர் என்ன?

2. நாம் ஏழாம் வகுப்பு மாணவர்கள். 

3. அவை எப்படி ஓடும். 

4. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.

5. அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

பின்வரும் தொடர்களில் மூவிடப்பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக. 

1. எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது. 

2. இவர்தான் உங்கள் ஆசிரியர். 

3. நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை. 

4. எனக்கு, அது வந்ததா என்று தெரியவில்லை .நீயே கூறு. 

5. உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?

தன்மை 

எங்கள் 

எனக்கு  

நானும் 

முன்னிலை

நீர்

உங்கள்

நீ

உங்களோடு

படர்க்கை

இவர்

அது

கடிதம் எழுதுக. 

உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி நூலக ஆணையாளருக்குக் கடிதம் எழுதுக.

நூலகம் அமைத்துத் தர வேண்டி மடல் 

அனுப்புநர்

ச.முகிலன், 

பாரதிநகர்,

ஈரோடு. 

பெறுநர்

ஆணையர் அவர்கள், 

பொதுநூலகத் துறை, 

சென்னை – 600 002.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : நூலகம் அமைத்துத் தர வேண்டுதல்.

வணக்கம். எங்கள் பாரதி நகர் ஈரோட்டின் மையப் பகுதியை ஒட்டியே உள்ளது. இங்கு சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. 3000 மக்கள் வாழ்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் 1000 பேர் உள்ளனர். பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க எங்கள் பகுதியில் நூலகம் இல்லை. அறிவை வளர்த்துக் கொள்ளவும், உலக நடப்புகளை அறியவும் எங்களால் இயலவில்லை .எனவே எங்கள் அறிவுக் கண்களைத் திறக்க எங்கள் பகுதியில் நூலகம் அமைத்துத் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம். 

நன்றி பல. 

நாள் : 03.5.2019

இடம் : ஈரோடு.

இப்படிக்குத் தங்கள் உண்மையுள்ள, 

ச.முகிலன்.

உறைமேல் முகவரி 

பெறுநர்

ஆணையர் அவர்கள், 

பொது நூலகத் துறை, 

சென்னை – 600 002.

மொழியோடு விளையாடு

1. காலையில் பள்ளி மணி ————

விடை : ஒலிக்கும்

2. திரைப்படங்களில் விலங்குகள் ——- காட்சி குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

விடை : நடிக்கும்

3. கதிரவன் காலையில் கிழக்கே ——-.

விடை : உதிக்கும்

4. நாள்தோறும் செய்தித்தாள் ——- வழக்கம் இருக்க வேண்டும். 

விடை : வாசிக்கும்

ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக.

1. ——— புல் மேயும்.

விடை : ஆ

2. ——– சுடும்.

விடை : தீ

3. ——– பேசும்.

விடை : கை

4. ——- பறக்கும். 

விடை : ஈ

5. ———- மணம் வீசும்.

விடை : பூ

பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக. 

(எ.கா) தா – கொடு

தீ ——

விடை :நெருப்பு

பா ————

விடை : பாடல்

தை ———-

விடை : தைத்தல்

வை ——

விடை : புல்

மை ——

விடை : அஞ்சனம்

பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக. 

ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி 

(எ.கா.) ஆறு – ஈ ஆறு கால்களை உடையது. 

தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது. 

1. விளக்கு – பாடலின் பொருள் விளங்கியது. 

அகல் விளக்கைக் கோவிலில் ஏற்றுவர். 

2. படி – வாயிற் படியில் அமராதே! 

இளமையிலேயே படிக்க வேண்டும். 

3. சொல் – மூத்தோர் சொல் அமுதம். 

தஞ்சை சொல்(நெல்) வளம் மிகுந்தது. 

4. கல் – காய்த்த மரம் கல் அடிபடும். 

இளமையில் கல். 

5. மாலை – மாலைநேரத்தில் விளையாட வேண்டும். 

பூமாலை தொடுத்தாள். 

6. இடி – இடி மின்னலுடன் மழை பெய்தது. மரத்தின் மீது வண்டி இடித்துவிட்டது.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்….

1. பாடப்புத்தகங்கள் மட்டுமன்றிப் பிற புத்தகங்களையும் படிப்பேன். 

2. பெற்றோர், ஆசிரியர், மூத்தோர் இவர்களை எப்போதும் மதித்து நடப்பேன்.

கலைச்சொல் அறிவோம்

கோடை விடுமுறை – Summer Vacation 

குழந்தைத் தொழிலாளர் – Child Labour 

பட்டம் – Degree 

கல்வியறிவு – Literacy

நீதி – Moral 

சீருடை – Uniform 

வழிகாட்டுதல் – Guidence 

ஒழுக்கம் – Discipline

இணையத்தில் காண்க

அறநூல்களின் பெயர்களை இணையத்தில் தேடி எழுதுக.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *