Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 5

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 5

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம்

இலக்கணம்: இலக்கியவகைச் சொற்கள்

பூ, வா, அறம், புத்தகம் இச்சொற்களை நோக்குங்கள்.

இவற்றில் முதல் இரு சொற்கள் ஓரெழுத்தைக் கொண்டவை. அடுத்த இரண்டு சொற்களும் மூன்று, நான்கு எழுத்துகளைக் கொண்டவை. இவை அனைத்தும் பொருள் தருகின்றன.

இவ்வாறு ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது சொல் எனப்படும். மொழி, பதம், கிளவி என்பன சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களாகும்.

இலக்கண முறைப்படி பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பதை முன் வகுப்பில் கற்றீர்கள். அதேபோல் இலக்கிய வகையில் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

இயற்சொல்

கடல், கப்பல், எழுதினான், படித்தான் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவற்றின் பொருள் இயல்பாகவே எளிதில் விளங்குகிறது. இவ்வாறு எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள்  இயற்சொற்கள் எனப்படும். இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.

(எ.கா.) 

மண், பொன்       – பெயர் இயற்சொல் 

நடந்தான், வந்தான் – வினை இயற்சொல்

அவனை, அவனால் – இடை இயற்சொல்

 மாநகர்            – உரி இயற்சொல்

திரிசொல்

வங்கூழ், அழுவம், சாற்றினான், உறுபயன் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இச்சொற்கள் இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களாகும். இவை முறையே காற்று, கடல், சொன்னான், மிகுந்த பயன் எனப் பொருள் தரும். இவ்வாறு கற்றோர்க்கு மட்டுமே விளங்குபையாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.

திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.

(எ.கா.)

அழுவம், வங்கம் – பெயர்த் திரிசொல்

இயம்பினான், பயின்றாள் – வினைத் திரிசொல்

அன்ன, மான – இடைத் திரிசொல்

கூர், கழி – உரித் திரிசொல்

திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படுத்தலாம்.

வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்.

இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்இமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.

திசைச் சொல்

சாவி, சன்னல், பண்டிகை, இரயில் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கி வருபவையாகும். இவ்வாறு வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.

முற்காலத்தில் பாண்டிநாட்டைத் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழங்கிய கேணி(கிணறு), பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச்சொற்கள் என்றே வழங்கினர்.

வடசொல்

வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. இவை வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழிச்சொற்கள் ஆகும். இவ்வாறு வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.

வடசொற்களைத் தற்சமம், தற்பவம் என இருவகையாகப் பிரிப்பர்.

கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர். லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதைச் தற்பவம் என்பர்.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ——-

அ) இயற்சொல் 

ஆ) திரிசொல் 

இ) திசைச்சொல் 

ஈ) வடசொல் 

[விடை : அ. இயற்சொல்] 

2. பலபொருள் தரும் ஒரு சொல் என்பது ——-

அ) இயற்சொல் 

ஆ) திரிசொல் 

இ) திசைச்சொல் 

ஈ) வடசொல் 

[விடை : ஆ. திரிசொல்]

3. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி ——

அ) மலையாளம் 

ஆ) கன்னடம் 

இ) சமஸ்கிருதம் 

ஈ) தெலுங்கு 

[விடை : இ. சமஸ்கிருதம்] 

பொருத்துக. 

வினா

1) இயற்சொல் – பெற்றம்

2) திரிசொல் – இரத்தம்

3) திசைச்சொல் – அழுவம்

4) வடசொல் – சோறு

விடை 

1) இயற்சொல் – சோறு 

2) திரிசொல் – அழுவம் 

3) திசைச்சொல் – பெற்றம் 

4) வடசொல் – இரத்தம்

குறு வினா

1. மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்? 

மண், பொன் என்பன பெயர் இயற்சொல்வகைச் சொற்கள் ஆகும்.

2. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?

1. பெயர் இயற்சொல் 

2. வினை இயற்சொல் 

3. இடைஇயற்சொல் 

4. உரி இயற்சொல் 

3. குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?

குங்குமம், கமலம் என்பன தற்சமம் வகை வடசொற்கள் ஆகும்.

சிறு வினா

1. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

இலக்கிய வகைச் சொற்கள் நான்கு வகைப்படும். அவை யாவன: 

1) இயற்சொல் 

2) திரிசொல் 

3) திசைச்சொல் 

4) வடசொல்

2. திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக. 

திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு நிலையில் வரும். 

ஒரு பொருள் குறித்த பல திரிசொல், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இரு வகைப்படுத்தலாம். 

3. பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக. 

பண்டிகை, கேணி என்பன திசைச்சொற்கள் ஆகும். 

விளக்கம் : பண்டிகை, கேணி ஆகிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அன்று. வடமொழி தவிர பிறமொழிகளிலிருந்து வந்த சொற்கள் திசைச்சொற்கள் ஆகும்.

கற்பவை கற்றபின்

நாளிதழ் செய்தியொன்றை எடுத்துக்கொண்டு அதிலுள்ள நால் வகைச் சொற்களையும் வகைப்படுத்திப் பட்டியல் உருவாக்குக. 

நாளிதழ் செய்தி : “இறைத்து ஊரும் கேணி போல கல்வி அறிவில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். இதழ் விரிந்து மணம் பரப்பும் புஷ்பம் போல மேன்மை பெற வேண்டும் என்று மாணவர்களைத் தலைவர்கள் வாழ்த்தினர்”.

இயற்சொல் 

கல்வி 

மாணவர்கள்

அறிவில்

தலைவர்கள்

சிறந்து

திரிசொல்

இறைத்து  

கேணி

இதழ்

மேன்மை

திசைச்சொல் 

கேணி 

வடசொல்

புஷ்பம்

மொழியை ஆழ்வோம்

கேட்க. 

கடற்பயணம் தொடர்பான கதைகளைப் பெரியோரிடம் கேட்டு மகிழ்க.

கப்பல் ஒன்றில் சுற்றுலா செல்ல இருபது பேர் ஆயத்தமானார்கள். துறைமுகத்தை நோக்கி மகிழ்வுடன் அனைவரும் சென்றனர். கப்பல் வந்தவுடன் நான்கு குடும்பத்தாரும் கப்பலில் அமர்ந்தனர். கப்பல் சிறிது தூரம் செல்லுகையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என திருவிழா போல இருந்தது. கபிலனின் குடும்பமும் தங்கள் ஐந்து வயது மகனிடம் கடலின் அழகைக் கூறி மகிழ்ந்து வந்தனர்.

கப்பல் ஒரு தீவை அடைந்தது. அங்கு அனைவரும் உணவு உண்டு விட்டு, ஓய்வெடுத்தனர். மாலை நேரம் ஆனவுடன் மீண்டும் கப்பல் பயணம் தொடங்கியது.இரவு வேகமாகச் சென்றது. காலையில் புத்துணர்வுடன் கப்பலில் இருந்து கடல் நீரைத் தொட்டு மகிழ்ந்தனர். கபிலனின் ஐந்து வயது மகன் கடல் நீரைத் தொட ஆசைப்பட்டான். கபிலன் தூக்க, மகன் தண்ணீரைத் தொட்டு மகிழ்ந்தான்.

திடீரென கப்பல் குலுங்கியது. ஏதோ ஒரு சத்தம் கப்பல் பயங்கரமாக ஆடத்தொடங்கியது. கபிலனின் மகன் கையை முதலை ஒன்று கவ்வி இழுத்தது. காப்பற்ற கதறி அழுது முயற்சித்தனர். மாலுமி குழந்தையை விடவில்லை என்றால் இந்தக் கப்பல் விபத்துக்குள்ளாகி மற்ற 19 பேரும் இறக்க நேரிடும் என்றார். கபிலன் தன் மகனுக்காக 19 பேர் சாக வேண்டுமா எனச் சொல்லி தன் மகனை முதலையிடம் காவு கொடுத்து 19 பேர் உயிரைக் காப்பாற்றி கதறி அழுதான். 

பின்வரும் தலைப்புகளில் இரண்டு நிமிடங்கள் பேசுக. 

கப்பல்களின் வகைகளும் பயன்களும்

தாயே! தமிழே! வணக்கம். கப்பல்களின் வகைகளும் பயன்களும் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன். வர்த்தகக் கப்பல்கள், கடற்படை கப்பல்கள் என பல வகைக் கப்பல்கள் உள்ளன. வர்த்தகக் கப்பல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். சரக்குக் கப்பல், பயணிகள் கப்பல், சிறப்பு தேவைக் கப்பல் ஆகியனவாகும். சரக்குக் கப்பல்கள் உலர் மற்றும் திரவ சரக்குப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றது. பயணிகளுக்குப் பயன்படும் கப்பல் பயணிகள் கப்பல். கடல் பகுதி எல்லையைப் பாதுகாக்கும் கப்பல் கப்பற்படைக்கப்பல் ஆகும். நன்றி. 

அறிந்து பயன்படுத்துவோம் 

காலம் மூன்று வகைப்படும் : 

1. இறந்தகாலம் 

2. நிகழ்காலம் 

3. எதிர்காலம் 

1. இறந்தகாலம் : நடந்த செயலைக்குறிப்பது இறந்தகாலம்.

சான்று : பார்த்தான், ஆடினாள். 

2. நிகழ்காலம் : நடக்கும் செயல்களைக் குறிப்பது நிகழ்காலம்.

சான்று : பார்க்கிறான், ஆடுகின்றாள். 

3. எதிர்காலம் : நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம்.

சான்று : காண்பான், ஆடுவாள்.

கட்டங்களை நிரப்புக.

வேர்ச்சொல்   

நட 

எழுது 

ஓடு

சிரி 

பிடி 

இறங்கு 

இறந்தகாலம்

நடந்தாள்

எழுதினாள் 

ஓடினாள்

சிரித்தாள்

பிடித்தாள்

இறங்கினாள்

நிகழ்காலம்

நடக்கிறாள்

எழுதுகிறாள் 

ஓடுகிறாள் 

சிரிக்கிறாள் 

பிடிக்கிறாள் 

இறங்குகிறாள் 

எதிர்காலம்

நடப்பாள்

எழுதுவாள்

ஓடுவாள்

சிரிப்பாள்

பிடிப்பாள்

இறங்குவாள்

பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக. 

1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.

விடை : அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான். 

2. கண்மணி நாளை பாடம் படித்தாள்.

விடை : கண்மணி நாளை பாடம் படிப்பாள். 

3. மாடுகள் இப்பொழுது புல் மேயும்.

விடை : மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது. 

4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார். 

விடை : ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்.

5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.

விடை : நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

பயணங்களின் பலவகை

முன்னுரை – பயணத்தின்தேவை – தரைவழிப்பயணம் – கடல்வழிப்பயணம் – வான்வழிப் பயணம் – முடிவுரை

முன்னுரை :

பயணம் என்பது சங்ககாலம் முதல் நிகழ்ந்து வருகின்றது. நடைபயணமாகத் தொடங்கிய பயணத் தோற்றம் அறிவியல் வளர்ச்சியால் இன்று பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. பயண நேரம் இன்று மிகவும் சுருங்கிவிட்டது.

பயணத்தின் தேவை :

மனிதன் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காவும், பண்டமாற்று முறைக்காகவும், பொருட்களை வாங்கவும் விற்கவும் சந்தைப்படுத்தவும். தம் உறவினர் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொள்வதற்கும், மருத்துவத் தேவைக்காகவும் பயணத்தின் தேவை ஏற்பட்டது. பயணத்தின் தன்மைக் கேற்ப தரைவழிப்பயணம், கடல்வழிப்பயணம், வான்வழிப் பயணம் என வகைப்படுத்தப்பட்டது.

தரை வழிப்பயணம் :

பழங்காலம் முதல் தரைவழிப்பயணமே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நடைபயணமாகவே ஆரம்ப கால கட்டத்தில் பயணம் மேற்கொள்ளப்பட்டது.மாட்டு வண்டி, குதிரை வண்டியின் மூலம் நடைபெற்ற தரைவழிப் பயணம். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக மிதிவண்டி, மகிழ்வுந்து, பேருந்து, சரக்குந்து, தொடர்வண்டி ஆகியவை மூலம் தரைவழிப்பயணம் விரைவாக மேற்கொள்ளப்பட்டது. 

கடல்வழிப்பயணம் :

கப்பல் போன்றவற்றில் கடல்வழியாகச் செல்லும் பயணம் கடல்வழிப்பயணம் ஆகும். கடலின் அழகைக் கண்டு மகிழவும், கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. தீவுகள் மற்றும் வெகு தொலைவு நாடுகளுக்குப் பொருட்களை அனுப்பவும், அயல் நாடுகளுக்கு வணிகம் செய்யவும் கடல்வழிப்பயணம் பயன்பட்டது.

வான் வழிப்பயணம் :

விமானம் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வான்வழியில் பயணம் மேற்கொள்வது வான்வழிப்பயணம் ஆகும்.தரை மற்றும் கப்பல் வழி பயணங்களைவிடச் சிறந்தது வான்வழிப்பயணம். பல நாட்கள் செல்ல வேண்டிய பயணத்தை ஒருசில மணி நேரங்களிலேயே செல்லலாம். அதிவிரைவுக்கு ஏற்றது வான்வழிப் பயணம்.

முடிவுரை :

பயணம் செய்வதில் பாதுகாப்பான முறைகளை அறிந்து பயன்படுவது பயணிகளாகிய நம் கடமையாகும்.பயணத்தில் வீண் விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும்.

“பயணத்தில் தேவை கவனம்”

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர். 

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம். 

இடமிருந்து வலம் 

1. அச்சான் – தந்தை

2. விஞ்ஞானம் – அறிவியல்

4. பரீட்சை – தேர்வு

10. லட்சியம் – இலக்கு

வலமிருந்து இடம் 

6. அபாயம் – இடர் 

8. தேகம் – உடல் 

13. சரித்திரம் – வரலாறு 

14. சத்தம் – ஒலி

மேலிருந்து கீழ்

1. அதிபர் – தலைவர்

3. ஆச்சரியம் – வியப்பு

7. ஆரம்பம் – தொடக்கம்

12. சதம் – நூறு

கீழிருந்து மேல் 

5. ஆதி – முதல் 

9. உத்தரவு – கட்டளை 

11. தினம் – நாள் 

15. சந்தோசம் – மகிழ்ச்சி 

குறிப்புகளைக் கொண்டு ‘மா’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக.

1. முக்கனிகளுள் ஒன்று : மா

2. கதிரவன் மறையும் நேரம் : மாலை

3. பெருந்திரளான மக்கள் கூட்டம் : மாநாடு

4. எழுத்துகளை ஒலிக்கும் காலஅளவு : மாத்திரை 

5. அளவில் பெரிய நகரம் : மாநகரம் 

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…..

1. கடல் மற்றும் கடற்கரையின் தூய்மை காப்பேன்.

2. சுற்றுச்சூழலுக்குத் தீங்கு தராத பொருள்களையே பயன்படுத்துவேன். 

கலைச்சொல் அறிவோம் 

கலங்கரை விளக்கம் – Light house 

பெருங்கடல் – Ocean 

கப்பல் தொழில் நுட்பம் – Marine technology 

கடல்வாழ் உயிரினம் – Marine creature 

நீர் மூழ்கிக் கப்பல் – Submarine 

துறைமுகம் – Harbour 

புயல் – Storm 

மாலுமி – Sailor 

நங்கூரம் – Anchor 

கப்பல் தளம் – Shipyard

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *