தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு
கவிதைப்பேழை: அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
நுழையும்முன்
நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள். அவை மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. மரங்களைப் பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன. கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம். அவற்றைப் பற்றிய நினைவுகள் மறையா என்பதை விளக்கும் கவிதை ஒன்றை அறிவோம்.
![](https://www.brainkart.in/media/tamimg12/jx8UJH3.png)
ஊரின் வடகோடியில் அந்த மரம்
ஐந்து வயதில் பார்த்தபோதும்
இப்படியேதானிருந்தது
ஐம்பதைத் தாண்டி இன்றும்
அப்படியேதான்
தாத்தாவின் தாத்தா காலத்தில்
நட்டு வளர்த்த மரமாம்
அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்
பச்சைக்காய்கள் நிறம் மாறிச்
செங்காய்த் தோற்றம் கொண்டதுமே
சிறுவர் மனங்களில் பரவசம் பொங்கும்
பளபளக்கும் பச்சை இலைகளூடே
கருநீலக் கோலிக்குண்டுகளாய்
நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும்
பார்க்கும்போதே நாவில் நீரூறும்
காக்கை குருவி மைனா கிளிகள்
இன்னும் பெயரறியாப் பறவைகளுடன்
அணில்களும் காற்றும் உதிர்த்திடும்
சுட்ட பழங்கள் பொறுக்க
சிறுவர் கூட்டம் அலைமோதும்
வயதுவந்த அக்காக்களுக்காய்
கையில் பெட்டியுடன் ஓடிஓடிப்
பழம் பொறுக்கும் தங்கச்சிகள்
இரவில் மெல்லிய நிலவொளியில்
படையெடுத்து வரும்
பழந்தின்னி வௌவால் கூட்டம்
தோப்பு முழுக்கப் பரவிக்கிடக்கும்
மரத்தின் குளிர்ந்த நிழலிலே
கிளியாந்தட்டின் சுவாரசியம்
புளியமிளாறுடன் அப்பா வரும்வரை
நேற்று மதியம் நண்பர்களுடன்
என் மகன் விளையாடியதும்
அந்த மரத்தின் நிழலில்தானே
பெருவாழ்வு வாழ்ந்த மரம்
நேற்றிரவுப் பேய்க்காற்றில்
வேரோடு சாய்ந்துவிட்டதாமே
விடிந்தும் விடியாததுமாய்
துஷ்டி கேட்கும் பதற்றத்தில்
விரைந்து செல்கிறார் ஊர்மக்கள்
குஞ்சு குளுவான்களோடு
எனக்குப் போக மனமில்லை
என்றும் என்மன வெளியில்
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
குன்றுகளின் நடுவே மாமலைபோல
– ராஜமார்த்தாண்டன்
சொல்லும் பொருளும்
பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு
துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்
நூல் வெளி
![](https://www.brainkart.in/media/tamimg12/cARX7hi.png)
ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர். கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர். ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர். சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.
இவரது அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலில் உள்ள கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.
கேள்விகள் மற்றும் பதில்கள்
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது ________
அ) பச்சை இலை
ஆ) கோலிக்குண்டு
இ) பச்சைக்காய்
ஈ) செங்காய்
[விடை : ஆ. கோலிக்குண்டு]
2. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை ________
அ) மண் ஒட்டிய பழங்கள்
ஆ) சூடான பழங்கள்
இ) வேகவைத்த பழங்கள்
ஈ) சுடப்பட்ட பழங்கள்
[விடை : அ. மண் ஒட்டிய பழங்கள்]
3. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) பெயர + றியா
ஆ) பெயர் + ரறியா
இ) பெயர் + அறியா
ஈ) பெயர + அறியா
[விடை : இ. பெயர் + அறியா]
4. ‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________
அ) மன + மில்லை
ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை
ஈ) மனம் + இல்லை
[விடை : ஈ. மனம் + இல்லை]
5. “நேற்று + இரவு’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
அ) நேற்று இரவு
ஆ) நேற்றிரவு
இ) நேற்றுரவு
ஈ) நேற்இரவு
[விடை : ஆ. நேற்றிரவு]
குறுவினா
1. நாவல் மரம் எத்தனை தலைமுறையாக அங்கு நின்றிருந்தது?
நாவல் மரம் இரண்டு தலைமுறையாக அங்கு நின்றிருந்தது.
2. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
1. காக்கை
2. குருவி
3. மைனா
4. பெயரறியாப் பறவைகள்
5. அணில்
6. காற்று
சிறுவினா
நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
❖ ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்பொழுது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது.
❖ அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய்ப் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.
❖ பளபளக்கும் பச்சை இலைகளுடக் கருநீலக்கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.
❖ காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பறவைகள், அணில், காற்று ஆகின உதிர்த்துவிடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
❖ தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் நாவல்பழம் பொறுக்குகின்றனர்.
❖ இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.
❖ அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில்தான்.
சிந்தனை வினா
பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?
❖ பெருங்காற்றினால் நாவல் மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர்மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர்.
❖ குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் நிற்பதால் பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தை அவர் பார்க்க விரும்பவில்லை.
❖ அந்த மரம் கவிஞர் நினைவில் வாழ்கின்றது.
கற்பவை கற்றபின்
1. உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து தொடர்கள் எழுதுக.
பலாமரம்
❖ நெடுநெடுனு வளர்ந்த மரம், நேர்த்தியான பலாமரம்.
❖ முக்கனியில் இராண்டாம் கனி தரு மரம்.
❖ பெரும்பழம் சுமந்ததால் உன்மேனி இளைத்ததோ?
❖ பழுமரத்தை நாடி பரவசமாய் பறவை வரும்.
❖ கொடுக்க குறையாத அமுதசுரபி மரம் பலாமரம்.
2. உங்கள் பகுதிகளில் மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
வேப்ப மரம், புளிய மரம், அரசமரம், ஆல மரம், வாழை மரம், முருங்கை மரம், தென்னை மரம், பனை மரம், பாக்கு மரம், பலா மரம், தேக்கு மரம், சந்தன மரம், அத்தி மரம், வாகை மரம், புங்க மரம்.
![](https://www.brainkart.in/media/tamimg12/bGlmf4w.jpg)
3. பின்வரும் புதுக்கவிதைகளைப் படித்துச் சுவைக்க.
• கொப்புகள் விலக்கி
கொத்துக் கொத்தாய்
கருவேலங்காய்
பறித்துப் போடும் மேய்ப்பனை
ஒருநாளும்
சிராய்ப்பதில்லை
கருவமுட்கள்.
• குழந்தை
வரைந்தது
பறவைகளை மட்டுமே
வானம்
தானாக உருவானது.
– கலாப்ரியா