Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 1

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 1

தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு

கவிதைப்பேழை: காடு

நுழையும்முன்

காடும் கடலும் நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை. ஒரு நாட்டின் வளம், அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. அதனால்தான் ‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ என்று அறிஞர்கள் கூறுகின்றனர். காட்டையும் காட்டின் குளிர்ச்சியையும் காட்டு விலங்குகளின் கொண்டாட்டங்களையும் கவிதை வழி அறிவோம்.

கார்த்திகை தீபமெனக்

காடெல்லாம் பூத்திருக்கும்

பார்த்திட வேண்டுமடீகிளியே

பார்வை குளிருமடீ!

காடு பொருள்கொடுக்கும்

காய்கனி ஈன்றெடுக்கும் 

கூடிக் களித்திடவேகிளியே

குளிர்ந்த நிழல்கொடுக்கும்

குரங்கு குடியிருக்கும்

கொம்பில் கனிபறிக்கும் 

மரங்கள் வெயில்மறைக்கும்கிளியே

வழியில் தடையிருக்கும்

*பச்சை மயில்நடிக்கும்

பன்றி கிழங்கெடுக்கும்

 நச்சர வங்கலங்கும்கிளியே

நரியெலாம் ஊளையிடும்

அதிமது ரத்தழையை

யானைகள் தின்றபடி 

புதுநடை போடுமடீகிளியே

பூங்குயில் கூவுமடி!

சிங்கம் புலிகரடி

சிறுத்தை விலங்கினங்கள் 

எங்கும் திரியுமடீகிளியே

இயற்கை விடுதியிலே!

– சுரதா

சொல்லும் பொருளும் 

ஈன்று – தந்து 

கொம்பு – கிளை 

அதிமதுரம் – மிகுந்த சுவை

களித்திட – மகிழ்ந்திட 

நச்சரவம் – விடமுள்ள பாம்பு 

விடுதி – தங்கும் இடம்

பாடலின் பொருள்

கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும். அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். காடு பல வகையான பொருள்களைத் தரும். காய்கனிகளையும் தரும். எல்லாரும் கூடி மகிழ்ந்திடக் குளிர்ந்த நிழல் தரும். அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள, கனிகளைப் பறித்து உண்ணும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். அடர்ந்த காடு வழிச்செல்வோர்க்குத் தடையாய் இருக்கும்.

பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும். பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக்கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும். நரிக் கூட்டம் ஊளையிடும். மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும். பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும். இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.

நூல் வெளி 

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும். உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர். அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். 

இப்பாடல் தேன்மழை என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

இப்பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி’ ஆகும்.

தெரிந்து தெளிவோம்   

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்

கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை , பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை , விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை , கணையம்.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. வாழை, கன்றை ————-

அ) ஈன்றது 

ஆ) வழங்கியது 

இ) கொடுத்தது

ஈ) தந்தது 

[விடை : அ. ஈன்றது] 

2. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ——-

அ) காடு + டெல்லாம்

ஆ) காடு + எல்லாம் 

இ) கா + டெல்லாம்

ஈ) கான் + எல்லாம்

[விடை : ஆ. காடு + எல்லாம்] 

3. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ——–

அ) கிழங்கு எடுக்கும்

ஆ) கிழங்கெடுக்கும் 

இ) கிழங்குடுக்கும்

ஈ) கிழங்கொடுக்கும் 

[விடை : ஆ. கிழங்கெடுக்கும்]

நயம் அறிக

பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனை 

செய்யுளில் அடி (அல்லது) சீரில் உள்ள சொற்களில் முதல் எழுத்து ஒன்று போல (ஒரே மாதிரி) வருவது மோனை ஆகும்.

எதுகை

செய்யுளில் அடி (அல்லது) சீரில் உள்ள சொற்களில் இரண்டாம் எழுத்து ஒன்று போல (ஒரே மாதிரி) வருவது எதுகை ஆகும்.

இயைபு 

செய்யுளில் ஒவ்வோர் அடியின் இறுதியிலும் உள்ள சீரோ எழுத்தோ ஒன்று போல (ஒரே மாதிரி) வருவது இயைபு ஆகும்.

பாடலில் உள்ள மோனைச் சொற்கள்

கார்த்திகை – காடெல்லாம் 

பார்த்திட – பார்வை 

காடு – காய்கனி 

பச்சை – பன்றி

நச்சர – நரியெலாம்

சிங்கம் – சிறுத்தை

பாடலில் உள்ள எதுகைச் சொற்கள்

கார்த்திகை – பார்த்திட – பார்வை

களித்திடவே – குளிர்ந்திடவே 

குரங்கு – மரங்கள்

பச்சை – நச்சர

சிங்கம் – எங்கும்

பாடலில் உள்ள இயைபுச் சொற்கள்

ஈன்றெடுக்கும்  – நிழல் கொடுக்கும் 

கனிபறிக்கும் – தடையிருக்கும் – கிழங்கெடுக்கும் 

குறு வினா 

1. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?

காட்டுப்பூக்களுக்குக் கார்த்திகை விளக்கை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார். 

2. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?

❖ காட்டிலுள்ள மலர்களைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். 

❖ காடு பல வகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும்.

❖ எல்லோரும் சேர்ந்துமகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும்.

❖ காட்டு விலங்குகளுக்கு உணவாகக் கனி தரும். 

சிறு வினா 

‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக. 

❖ பன்றிகள் காட்டிலுள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். 

❖ நரிக் கூட்டம் ஊளையிடும். 

❖ மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும். 

❖ இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும். 

சிந்தனை வினா

காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன? 

❖ பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அஃறிணை உயிர்களுக்குத் தேவையான உறையுள் (தங்குமிடம்) – உணவு ஆகியன காட்டில் இயற்கையாகவே உள்ளன.

❖ மரங்கள், செடி கொடிகள் ஆகியன பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிற்குத் தங்குமிடம் மற்றும் உணவை இயற்கை அன்னையே வழங்குவதால், காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறுகிறார்.

கற்பவை கற்றபின்

1. காடு என்னும் தலைப்பில் அமைந்த ‘கிளிக்கண்ணிப்’ பாடலை இசையுடன் பாடி மகிழ்க. 

2. பின்வரும் கிளிக்கண்ணிப் பாடலைப் பாடி மகிழ்க.

நெஞ்சில் உரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி 

வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி

கூட்டத்தில் கூடிநின்று

கூவிப் பிதற்றலன்றி 

நாட்டத்தில் கொள்ளாரடீ! – கிளியே 

நாளில் மறப்பாரடீ.

– பாரதியார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *