Home | Book Back Question and Answers | Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 5

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 5

தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ்

இலக்கணம்: குற்றியலுகரம், குற்றியலிகரம்

நினைவு கூர்க

தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிப்பர். உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். சார்பெழுத்து பத்து வகைப்படும். அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாகும். சார்பெழுத்துகளில் ஒன்றான குற்றியலுகரம் பற்றி இனிக் காண்போம்.

குற்றியலுகரம்

குழந்தை, வகுப்பு, பாக்கு ஆகிய சொற்களைச் சொல்லிப் பாருங்கள். மூன்று சொற்களிலும் ‘கு’ என்னும் எழுத்தை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதை உணரலாம். அவ்வெழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்பொழுது முழுமையாக ஒலிக்கிறது. சொல்லின் இறுதியில் வரும்பொழுது ஒருமாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கிறது. கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். குறுமை+இயல்+உகரம் = குற்றியலுகரம்.

(எ.கா.) காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு

தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும். வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும். இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.

(எ.கா.) புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு

தெரிந்து தெளிவோம்

தமிழில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய எழுத்து சாரியைகளைப் பயன்படுத்துகிறோம்.

❖ குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்’ (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்

❖ நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘கான்’ (எ.கா.) ஐகான், ஔகான்

❖ குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘காரம்’ (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம் 

❖ ஆய்த எழுத்தைக் குறிக்க ‘கேனம்’ (எ.கா.) அஃகேனம்

குற்றியலுகரத்தின் வகைகள்

குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படும்.

1. நெடில்தொடர்க் குற்றியலுகரம்

தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.

(எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு . 

2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.

 (எ.கா.) எஃகு, அஃது

3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும். 

(எ.கா.) அரசு (ர = ர் + அ)

கயிறு (யி = ய் + இ) 

ஒன்பது (ப = ப் + அ)

வரலாறு (லா = ல் + ஆ) 

4. வன்தொடர்க் குற்றியலுகரம்

வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘வன்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.

(எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று

5. மென்தொடர்க் குற்றியலுகரம்

மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.

(எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று

6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.

(எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு

தெரிந்து தெளிவோம்

‘வ்’ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

குற்றியலிகரம் 

வரகு+யாது – இந்த இரு சொற்களையும் சேர்த்து விரைவாக ஒலித்துப் பாருங்கள். வரகியாது என ஒலிப்பதை அறியலாம். முதல் சொல்லின் இறுதியில் உள்ள ‘கு’ என்னும் எழுத்து ‘கி’ என்று ஒலிக்கிறது. அதுவும் முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் ‘குற்றியலிகரம்’ எனப்படும். குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்.

குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மட்டும் வரும்.

இடம்1

குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும். அந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.

(எ.கா.) கொக்கு + யாது = கொக்கியாது

(க்+ உ)  (க் + இ)

தோப்பு + யாது = தோப்பியாது

(ப் + உ)  (ப் + இ )

நாடு + யாது = நாடியாது

(ட் + உ)  (ட் + இ )

எனப்படுவது + யாது = எனப்படுவதியாது 

(த் + உ)  (த் + இ )

இடம்2

‘மியா’ என்பது ஓர் அசைச்சொல் (ஓசை நயத்திற்காக வருவது). இதில் ‘மி’ யில் (மி = ம் + இ) உள்ள இகரம் குற்றியலிகரம் ஆகும். இது சொற்களில் இடம்பெறும் போது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.

(எ.கா.) கேள் + மியா = கேண்மியா

செல் + மியா = சென்மியா

குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.

கேள்விகள் மற்றும் பதில்கள்

பாடநூல் மதிப்பீட்டு வினா 

கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக. 

ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து

விடை : 

பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.

1.  பசு, விடு, ஆறு, கருவிடை : கரு 

2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து – விடை : பஞ்சு

3. ஆறு, மாசு, பாகு, அதுவிடை : அது

4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு – விடை : அரசு 

5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகுவிடை : எஃகு 

குறு வினா

 1. ‘குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.

குற்றியலுகரம் – குறுமை + இயல் + உகரம்

தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். 

2. குற்றியலிகரம் என்றால் என்ன?

முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.

கற்பவை  கற்றபின்

1. ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப் பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள்; அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்து எழுதுங்கள். 

எண்ணுப்பெயர்கள் : 

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. 

குற்றியலுகரச் சொற்கள் : 

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து. 

2. குற்றியலுகர எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக. 

வன்தொடர் குற்றியலுகரம் – மூன்று, எட்டு, பத்து 

மென் தொடர் குற்றியலுகரம் – ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, ஒன்பது

உயிர்த் தொடர் குற்றியலுகரம் – ஆறு 

3. குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்.

(எ.கா) ஒன்று – 1 + 1/2 + 1/2 = 2

இரண்டு – 1 + 1 + 1/2 + 1/2 = 3

மூன்று – 2 + 1/2 + 1/2 = 3 

நான்கு – 2 + 1/2 + 1/2 = 3

ஐந்து –  2 + 1/2 + 1/2 = 3

ஆறு – 2 +1/2 = 2 ½  

ஏழு – 2 + 1 = 3

எட்டு – 1 + 1/2 + 1/2 = 2 

ஒன்பது – 1 + 1/2 + 1 + 1/2 = 3

பத்து – 1 + 1/2 + 1/2 = 2 

4. கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக. 

❖ பாகு, வாகு

❖ வாது, கேது, சாது, மாது 

❖ பாடு, சாடு, ஓடு, விடு

❖ வறு, சேறு, செறு 

❖ காசு, வீசு, பேசு

❖ வது, வடு, பொது

மொழியை ஆழ்வோம்

கேட்க. 

தமிழின் சிறப்பைப் பற்றிய அறிஞர்களின் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்க. 

பாரதியாரின் சொற்பொழிவுச் செய்தி

தமிழின் சிறப்பை விளக்கும் வண்ணம் காந்தியடிகளிடம் பாரதி நடத்திய கடித உரையாடல் ஒன்றைத் தனது சொற்பொழிவில் எடுத்துரைத்தார்.

காந்தியடிகளின் சொற்பொழிவை நான் கேட்க நேர்ந்தது. வெள்ளையனே வெளியேறு என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். அவருடைய சொற்பொழிவைப் பற்றி நான் ஒரு மடல் எழுதினேன். அதில் மகாத்மாவே நேற்றைய சொற்பொழிவில், வெள்ளையனே வெளியேறு என்ற பேச்சு அருமை. ஆனால் ஒரு வருத்தம்.வெள்ளையனை வெளியேறச் சொல்லி, தங்கள் சொற்பொழிவு இந்தியிலோ குஜராத்தியிலோ அமையாமல் ஆங்கிலத்தில் இருந்தது மிகுந்த வருத்தம் அளிக்கின்றது என்று எழுதியிருந்தேன். அதற்கு காந்தியார் மறுமடலில், நான் ஆங்கிலத்தில் பேசியதை நீங்கள் மடலில் குறிப்பிடும் போது ஏன் நீங்களும் ஆங்கிலத்தில் எனக்கு மடல் எழுதினீர் என்றார். அதற்கு நான், யாருடைய மனமும் புண்படும் படியான செய்தியைப் பேசுவதாக இருந்தாலும், எழுதுவதாக இருந்தாலும் என்னுடைய தாய்மொழியாகிய தமிழைப் பயன்படுத்த மாட்டேன் என்று மடல் எழுதினேன் என்றார். 

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக. 

நான் அறிந்த பழமொழிகள்

தமிழன்னையின் தாழ்பணிந்து வணக்கங்கள் பலசொல்லி என்னுரையை ஆரம்பம் செய்கின்றேன். நான் அறிந்தபழமொழிகள் பற்றிச் சில நிமிடங்கள் பேசுகின்றேன். பழமொழி என்பது என்ன? நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய மொழிகள் பழமொழி ஆகும். அவை அனுபவமொழிகள். வாழ்க்கையை வளப்படுத்துவன. 

அவற்றின் வழிநம் எண்ணங்களையும் வாழக்கைப் பாதையையும் முடிவு செய்யலாம். யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே, இக்கதைக்கு அக்கரை பச்சை, ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும், ஆலும் வேலும் பல்லுக்குறுதிநாளும் இரண்டும் சொல்லுக்குறுதி, காற்றுள்ளபோதே தூற்றிக் கொள், அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் ஆகியன நான் அறிந்த பழமொழிகள் ஆகும். இவை போல பல்லாயிரக்கணக்கான பழமொழிகள் நம் நாட்டில் உள்ளன. அதனை அறிந்து பயன்படுத்துவோம். நன்றி. வணக்கம். 

சொல்லக் கேட்டு எழுதுக. 

1. நமது தாய்மொழி தமிழாகும்.

2. தமிழ்மொழி இனிமை, வளமை, சீர்மை மிக்கது. 

3. தமிழுக்குத் தலைகொடுத்தவன் குமணவள்ளல். 

4. தமிழ்மொழி பேச்சுமொழி, எழுத்துமொழி என்னும் இரண்டு கூறுகளை உடையது. 

5. பேச்சு மொழியை உலகவழக்கு என்றும் கூறுவர்.

கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக.

கோதை கவிதையைப் படித்தாள். 

வினா                        

கோதை எதைப் படித்தாள்?

கவிதையைப் படித்தது யார்?

கோதை கவிதையை என்ன செய்தாள்? 

அழுத்தம் தர வேண்டிய சொல்

கவிதை 

கோதை 

படித்தாள் 

படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக.

உயர்திணை அஃறிணை உயர்திணை 

கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக. 

வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்.

உயர்திணை   

முகிலன் 

கயல்விழி

தலைவி

ஆசிரியர்

சுரதா

அஃறிணை

வயல் 

குதிரை

கடல் 

புத்தகம்

மரம்

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

தாய்மொழிப் பற்று

 (முன்னுரை – மொழி பற்றிய விளக்கம் – தாய்மொழி – தாய்மொழிப் பற்று – தாய்மொழிப் – பற்றுக் கொண்ட சான்றோர் – சாதுவன் வரலாறு – நமது கடமை – முடிவுரை)

முன்னுரை:

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை’ என்பது சான்றோர் பெருமக்கள் பலரின் வாக்காகும். நம்மைப் பெற்ற தாயைவிட சிறந்ததொரு தெய்வம் கிடையாது என்பதால் தான் ‘தாய்மொழி’ என்று அழைத்தனர். தாய்மொழியின் மீது பற்றுதலோடு இருக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகின்றது. 

மொழி பற்றிய விளக்கம்:

நமது எண்ணங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளவும், நமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் உதவுவது மொழியாகும். மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் நாகரிக உயர்வுக்கும் அடிப்படையாக அமைவது மொழியாகும். 

தாய்மொழிப் பற்று:

குழந்தைக்குத் தாய் முதன் முதலில் சொல்லித் தரும் மொழியே தாய்மொழி. குழந்தைகளுக்குத் தாய்மொழி இயல்பாகவே வரும். கனவிலும் நனவிலும் தாய்மொழியே இயல்பாக அமையும். அவரவர் தாய்மொழி மீது தணியாத பற்று கொள்ள வேண்டும். 

தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர்:

இன்றைய காலத்தில் தாய்மொழியில் பேசவும் படிக்கவும் பலர் தயங்குகின்றனர். இது பெற்ற தாயைப் புறந்தள்ளி வைப்பது போன்றதாகும். எண்ணற்ற உலகம் போற்றும் சான்றோர்கள் தத்தம் தாய்மொழியிலேயே செயல்களைச் செய்து உயர்ந்துள்ளனர். பாரதியார், காந்தியடிகள், இரவீந்திரநாத் தாகூர் எனப் பலரும் பன்மொழி அறிந்திருந்த போதும், சிறந்த உலகம் போற்றும் படைப்புகளைத் தம் தாய்மொழியிலேயே தந்தனர். சந்திரபோஸ் தன் மகன் ஜெகதீஸ் சந்திரபோஸைத் தாய்மொழி கற்பிக்கும் பள்ளியிலேயே படிக்க வைத்தார். அவர் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த அறிவியல் அறிஞரானர். 

சாதுவன் வரலாறு:

ஆதிரையின் கணவன் சாதுவன் வணிகம் செய்ய கப்பற் பயணம் செய்கின்றான் பெருங்காற்றால் கப்பல் கவிழ்ந்து விடுகின்றது. சாதுவன் பிழைத்து நாகர்கள் வாழும் தீவை அடைகின்றான். அவர்கள் மனித மாமிசம் உண்பவர்கள். சாதுவனைத் தின்ன நினைக்கின்றனர். ஆனால் சாதுவன், நாகர்கள் பேசும் மொழியைப் பேசுகின்றான். நாகர்கள் சாதுவனுக்கு வேண்டியதைக் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். தாய்மொழியே எதையும் மாற்றும்.

 நமது கடமை: 

❖ அந்நிய மொழி மோகம் கொண்டு அலையாமல் தாய்மொழியின் மீது அளவற்ற பற்றுதல் வைக்கவேண்டும். 

❖ தாய்மொழி வழிக் கல்வி பெறுதலே சிறப்பு என்பதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

❖ கல்லூரிக் கல்வி வரைத் தாய்மொழியிலேயே பயில வேண்டும். 

முடிவுரை:

ஆங்கில வழிக்கல்வி மூலம் நாம் நம்மை இழந்து கொண்டு இருக்கின்றோம். நமது பண்பாடு, கலாச்சாரத்தை மீட்டுக் கொண்டுவரத் தாய்மொழிப் பற்றுடன் தாய்மொழியில் பயில்வது இன்றைய காலத்தில் அவசியமாகும்.

மொழியோடு விளையாடு

தொகைச் சொற்களை விரித்து எழுதுக. 

(எ.கா) இருதிணை – உயர்திணை, அஃறிணை. 

முக்கனி – மா, பலா, வாழை. 

முத்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ். 

நாற்றிசை – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு. 

ஐவகைநிலம்  –  குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை. 

அறுசுவை – இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு.

கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக. 

இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக. 

1. அரசுக்கு தவறாமல் வரி செலுத்த வேண்டும்.

ஏட்டில் எழுதுவது வரி வடிவம். 

2. மழலை பேசும் மொழி அழகு.

இனிமைத் தமிழ் மொழி எமது. 

3. அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை நடை பழகும்.

அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி நடை

4. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்.

எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல். 

5. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் சென்றனர்.

குழந்தையை மெதுவாக நட என்போம். 

6. நீதி மன்றத்தில் தொடுப்பது வழக்கு. 

‘நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு வழக்கு.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…. 

1. கடிதங்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதும்போது திருத்தமான மொழி நடையையே கையாள்வேன்.

2. பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைகளைப் போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்

1. ஊடகம் – Media 

2. மொழியியல் – Linguistics 

3. ஒலியியல் – Phonology 

4. இதழியல் – Journalism

5. பருவ இதழ் – Magazine 

6. பொம்மலாட்டம் – Puppetry 

7. எழுத்திலக்கணம் – Orthography 

8. உரையாடல் – Dialogue

இணையத்தில் காண்க

சிறந்த மேடைப் பேச்சாளர்களின் பெயர்களை இணையத்தில் தேடித் தொகுத்து வருக.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *